மத ரீதியில் பாகுபாடா? கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மீது ஜம்மு காஷ்மீர் மருத்துவர் புகார்

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் சேர வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் ஜூபைர் அஹமது என்பவர் மீது மத ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், சிறுநீரக பாதிப்புள்ள நோயாளிகளைக் கையாளும் போது, நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதால், தாடியின் நீளத்தைக் குறைக்குமாறு மட்டுமே அவரிடம் அறிவுறுத்தியதாக கல்லுாரி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் மத சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

என்ன நடந்தது?

அரசியலமைப்பு பிரிவை கல்லுாரி நிர்வாகம் மீறியதாக புகார்!

ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் சார்பில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் காஷ்மீரைச் சேர்ந்த இளம் இஸ்லாமிய மருத்துவர் ஒருவரை கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரி மத ரீதியான பாகுபாட்டுடன் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அவர் மு.க.ஸ்டாலின் உடனே தலையிட வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் ஜூபைர் அஹமது, ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (SKIMS) இளங்கலை மருத்துவம் மற்றும் முதுகலை படிப்பை (MBBS, MD) முடித்துள்ளார்.

அடுத்தகட்டமாக, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS-National Board of Examinations in Medical Sciences) நடத்திய NEET-SS இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளார். அவருக்கு சிறுநீரகம் சார்ந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு DNB (Nephrology) படிப்பதற்கு, கோவையிலுள்ள கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.

அங்கு சேர்வதற்காக அவர் சென்ற போது, மாணவர்கள் தாடி வைப்பதைத் தடை செய்யும் கொள்கை ஆவணத்தில் கையெழுத்திடுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லுாரியில் ஆடை ஒழுங்கு முறைகளுக்கு ஒப்புக்கொண்ட அவர், தாடியை அகற்றுவது தன்னுடைய மதக் கடமைகளுக்கு முரணானது என்று மறுத்ததால் அவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவை, கல்லுாரி நிர்வாகம் அப்பட்டமாக மீறியுள்ளதாக முதல்வருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

முற்போக்கான சிந்தனைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருப்பதாகக் கூறும் அந்த கடிதம், காஷ்மீர் உட்பட இந்தியாவிலுள்ள அனைத்து மாணவர்கள், துறை நிபுணர்களை எப்போதுமே வரவேற்கும் தமிழ்நாட்டின் மரபுக்கு இச்சம்பவம் ஓர் அச்சுறுத்தல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இதுபோன்ற தோற்ற அடிப்படையிலான கட்டுப்பாடுகள் அவசியமில்லாதவை, பாரபட்சமானவை. இதுபற்றி கவுன்சிலிங்கின் போது தெரிவிக்காமல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் நிர்ப்பந்தம் செய்வது நியாயமற்றது. மத அடையாளத்தின் முக்கியப் பகுதியாகவுள்ள தாடியை நீக்கச் சொல்வது அடிப்படை உரிமைகளை மீறுவது மட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் பாரபட்சத்தை வளர்ப்பது.” என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னேற்றம், சகிப்புத்தன்மை, சமத்துவம், மதிப்புமிக்க கலாசாரம் மற்றும் நீதிக்கான குறியீடாக தமிழகத்தைக் கருதும் மாணவர்கள் மற்றும் பல்துறை நிபுணர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி, ”மருத்துவர் ஜூபைர் அஹமதுவுக்கு அந்தக் கல்லுாரியில் ஒரு மோசமான அனுபவம் கிடைத்துள்ளது. கவுன்சிலிங்கின் போது இதை அவர்கள் தெரிவித்திருந்தால் அவர் அந்தக் கல்லுாரியை தேர்வு செய்திருக்கவே மாட்டார். அங்கு நிகழ்ந்தது பற்றி தமிழக முதல்வருக்கு விரிவாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.” என்றார்.

பட மூலாதாரம், JKSTUDENTSASSO/X

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் சார்பில் கடந்த ஜூன் 26 அன்று, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் மருத்துவர் ஜூபைர் கூறுவது என்ன?

அகில இந்தியத் தகுதி அடிப்படையில், ஜூபைர் அஹமது இந்தக் கல்லுாரியைத் தேர்வு செய்திருந்தாலும் இந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, அங்கு சேரும் முடிவிலிருந்து அவர் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்குமாறும், கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லுாரியில் சேர்வதற்காக தான் செலுத்திய 2 லட்ச ரூபாய் வைப்புத் தொகையை திரும்பக் கொடுக்குமாறும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு ஜூபைர் தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

கோவை தனியார் மருத்துவக் கல்லுாரியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி ஜூபைர் அஹமது பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார். வடமாநிலங்களில் தங்களைப் போன்ற சிறுபான்மை மாணவர்களுக்கு நேர்கின்ற பல கசப்பான அனுபவங்களாலும், தென் மாநிலங்களின் மீது குறிப்பாக தமிழகத்தின் மீதான நம்பிக்கையாலும்தான் அந்தக் கல்லுாரியை தேர்வு செய்வதாக அவர் தெரிவித்தார்.

”கவுன்சிலிங்கில் அகில இந்திய அளவில் எங்கும் சேரலாம் என்ற வாய்ப்பிருந்தும், நான் விருப்பமுடன் கே.எம்.சி.எச். கல்லுாரியை தேர்வு செய்தேன். ஜூன் 16-ஆம் தேதி கோவைக்குச் சென்று, மறுநாள் கல்லுாரிக்குச் சென்றேன். அங்கே எனது நண்பர்கள் இருவர் படிக்கின்றனர். சேர்க்கைக்கு முன்பாக தாடி குறித்து கேட்டுக்கொள் என்று அவர்கள் சொன்னார்கள். முதற்கட்டப் பணிகளை முடித்து, சேர்க்கைக்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளுக்காக ஜூன் 19-ஆம் தேதி சென்றபோதுதான் தாடியை எடுக்க வேண்டுமென்று என்னை நிர்ப்பந்தித்தனர்.” என்றார் ஜூபைர்.

அதுதொடர்பான விதிமுறைகள் சார்ந்த படிவத்தில் கையெழுத்திடுமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறிய ஜூபைர் அஹமது, மதக்கடமை என்ற அடிப்படையில் அதற்கு ஒப்புக்கொள்ளாத நான், முகக்கவசம் அணிந்து கொள்ளவும், கல்லுாரியின் ஆடை மற்றும் காலணி ஒழுங்குமுறைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன் என்கிறார். படிவத்தில் கையெழுத்திட்டால்தான் சேர்க்கை நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியுமென்று கல்லுாரியில் கூறியதால்தான் அங்கே சேரும் முடிவை கைவிட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

”நான் சுமார் 4 ஆயிரம் கி.மீ. துாரம் கடந்து இந்தக் கல்லுாரியை தேர்வு செய்ததற்குக் காரணம், அங்குள்ள சிறுநீரகத் துறை மிகவும் சிறப்பானது என்பதால்தான். ஆனால் இந்த நிர்பந்தம்தான் என்னை அதிர்ச்சியடையவைத்தது. துறையின் தலைவரிடம் பேசியபோது, அவரும் எனக்கு ஆதரவாகப் பேசினார். இருப்பினும் இந்த நிர்ப்பந்தத்தை விலக்கிக் கொள்ள நிர்வாகம் தரப்பில் தயாராகயில்லை என்று எனக்குத் தெரிந்தது.” என்றார் ஜூபைர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”தாடியை குறைக்கவே சொன்னோம்!”

ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கத்தின் புகார் மற்றும் ஜூபைர் அஹமதுவின் குற்றச்சாட்டுகள் குறித்து, கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லுாரியின் மருத்துவ இயக்குநர் கலாநிதியைத் தொடர்பு கொண்டபோது அவரிடம் பதில் பெறமுடியவில்லை.

மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய துணைத்தலைவர் நாராயணன், ” தாடியை முற்றிலுமாக நீக்குமாறு அவரிடம் சொல்லவில்லை. அவர் நீளமாக தாடி வைத்திருந்ததால் அதன் அளவைக் குறைக்கச் சொன்னோம். இதே கல்லுாரியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் சிலர் படிக்கின்றனர். அவர்கள் யாரும் இந்த அளவில் தாடி வைத்துக்கொள்ளவில்லை.” என்றார்.

மேலும் விளக்கிய அவர், ”சிறுநீரகத்துறையில் பயிலும் மருத்துவர் என்பதால், டயாலசிஸ் நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களைக் கையாள வேண்டியிருக்கும். ஆனால் சிறுநீரக பாதிப்புள்ள நோயாளிகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால்தான் தாடியின் அளவைக் குறைக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதற்கு அவர் மறுத்து கல்லுாரியில் சேராமல் சென்றுள்ளார். இதுபற்றி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம்.” என்றார்.

இதுபற்றி ஜூபைரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”நான் தேர்வு செய்த Nephrology படிப்பிற்கும், அறுவை சிகிச்சைக்கும் எந்தத் தொடர்புமில்லை. அது முழுக்கமுழுக்க மருந்துகளைப் பற்றிய படிப்பு என்பதால் இந்தக் கருத்தை ஏற்க முடியாது. அங்குள்ள ஆசிரியர்கள், துறைத்தலைவர்கள் யாருமே பிரச்னையில்லை. கல்லுாரி நிர்வாகமே எதிராக இருக்கிறது” என்றார்.

ஜூபைர் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு புகார் அளித்ததன் அடிப்படையில், அதற்கு விளக்கம் அளித்த கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், அவரை மீண்டும் கல்லுாரியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், சேர்வதற்கு ஜூன் 26 வரை கூடுதல் கால அவகாசம் தருவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் ஜூபைர் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.

இது குறித்து ஜூபைரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”மீண்டும் சேர வாய்ப்பு வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால் நான் அங்கு மீண்டும் சேர விரும்பவில்லை. ஏனெனில் இப்போது வரையிலும் தாடிக்கான நிர்பந்தம் பற்றி அவர்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை. இதற்கு மேல் நான் அந்தக் கல்லுாரியில் சேர்வது அவ்வளவு நன்றாயிருக்காது என்பதால் அதைத் தவிர்த்துவிட்டேன்.” என்றார்.

”தமிழக கலாசாரம், அங்குள்ள மக்களின் பரந்த மனப்பான்மை, அன்பான அணுகுமுறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டே, அங்கு படிக்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த ஆண்டில் இனிமேல் வேறு கல்லுாரியில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அநேகமாக ஓராண்டு எனக்கு வீணாகிவிட்டதாகவே கருதுகிறேன்.” என்றார் ஜூபைர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு