Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஓமன் வருமான வரி விதிக்க முடிவு ஏன்? வெளி நாட்டினருக்கும் பொருந்துமா?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், நிஸ்ரீன் ஹடூம்பதவி, பிபிசி அரபு செய்தியாளர்28 ஜூன் 2025, 11:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளில் (GCC), அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய முதல் நாடாக ஓமன் உருவாக உள்ளது.
அரசாங்க அறிவிப்பின்படி, இந்த சட்டம் 2028 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
இதன் கீழ், ஆண்டுக்கு 42 ஆயிரம் ஓமன் ரியால்களுக்கு மேல் (தோராயமாக ₹93.5 லட்சம்) வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்த வரி ஓமன் குடிமக்களுக்கு மட்டுமல்ல, அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) மீதமுள்ள ஐந்து உறுப்பு நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் மிக்கவை. மேலும், இந்நாடுகளில் தனிநபர் வருமானத்திற்கு வரி விதிக்கப்படவில்லை. வரி இல்லை என்ற சூழ்நிலையால் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகம் ஈர்க்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஓமனின் இந்த முடிவு பொருளாதாரம், சமூகம் மற்றும் முதலீட்டு முக்கியத்துவங்களைப் பற்றி, நாட்டிற்குள் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
2024-ஆம் ஆண்டில், ஓமனின் மொத்த அரசாங்க வருவாயில் பெரும்பகுதியான சுமார் 19.3 பில்லியன் டாலர் எண்ணெயிலிருந்து வந்தது.
ஆனால், புதிய வரி அரசாங்க வருவாய் ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், எண்ணெய் வளத்தைச் சார்ந்திருப்பதை குறைக்கவும் உதவும் என்று நிதியமைச்சர் சயீத் பின் முகமது அல்-சக்ரி தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மற்ற வளைகுடா நாடுகளை விட ஓமனில் குறைவான வளங்கள் உள்ளன.இந்த வரி உள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் ஓமனைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் முனைவர் அகமது பின் சையத் கஷூப்.
பல தசாப்தங்களாக எண்ணெய் வளத்தை நம்பியிருப்பதால், ஓமனின் பொருளாதாரம் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று அவர் கூறுகிறார்.
பொதுக் கடன் அதிகரிப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கான செலவு அதிகரிப்பு ஆகியவையும் இதற்குக் காரணங்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற அமைப்புகளின் பரிந்துரைகளும் ஓமனை வெளிப்படையான நிதி சீர்திருத்தங்களை நோக்கி நகர்த்த ஊக்கப்படுத்தியதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, ஓமனில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு விரிவான வரி கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ஓமனைச் சார்ந்த மற்றொரு பொருளாதார நிபுணரான கல்ஃபான் அல்-துகி கூறுகிறார்.
நாட்டில் ஏற்கனவே நான்கு வகையான வரிகள் உள்ளன. அதாவது, வாட் வரி (VAT), பெருநிறுவன வரி, கலால் வரி மற்றும் இனிப்புகள் மீதான வரி.
இந்த அமைப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வருமான வரி என்பது இவை அனைத்திலும் கடைசியான மற்றும் மிக முக்கியமான இணைப்பாக இருப்பதாக அவர் கருதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வருமான வரி ஓமனில் முதலீட்டைக் குறைக்கக்கூடும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.நன்மைகள் மற்றும் தீமைகள்
இந்தச் சட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 42,000 ஓமானி ரியாலுக்குக் குறைவாக வருமானம் ஈட்டும் மக்கள் வரியிலிருந்து விலக்கு பெறுவார்கள்.
இதன் காரணமாக, மக்கள் தொகையின் 99 சதவீதம் இந்த வரம்பிற்கு வெளியே இருப்பார்கள். இது நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குழுக்களுக்கு எந்தச் சுமையையும் ஏற்படுத்தாது என்று முனைவர் கஷூப் கூறுகிறார்.
இருப்பினும், இந்த வரி சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சில வெளிநாட்டவர்கள் வரியைத் தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், வெளிநாட்டு முதலீடு குறையக்கூடும் என்றும் கஷூப் கருதுகிறார்.
ஆனால், இது ஓமனின் நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, அரசாங்க செலவினங்களை மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.
வணிகச் சூழலைப் பாதிக்காத வகையில், விலக்குகளையும், சலுகைகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று முனைவர் கஷூப் பரிந்துரைக்கிறார்.
உதாரணமாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதுமையான முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரி குறைப்பு போன்றவற்றை அவர் குறிப்பிடுகிறார்.
மறுபுறம், கண்காணிப்பு வழிமுறைகள் வலுவாக இல்லாத வரையறுக்கப்பட்ட பொருளாதார அமைப்பில், வரி ஏய்ப்பு எளிதாகிவிடும் என்று கல்ஃபான் அல்-துகி தனது அச்சத்தை வெளியிட்டார்.
சிலர் வரிகளைத் தவிர்க்க கணக்காளர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்த வரி, வெளிநாட்டு முதலீட்டைப் பாதிக்கும் என்றும், ஓமனில் இருந்து அதிகமான மூலதனம் வெளியேறக்கூடும் என்றும் அல்-துகி குறிப்பிடுகிறார்.
பணக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் மூலதனத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால், அவர்களிடமிருந்து வரி வசூலிப்பது சவாலானது என்று அவர் கருதுகிறார்.
கார்ப்பரேட் வரி மற்றும் வாட் வரி போன்ற தற்போதைய வரிகளை அரசாங்கம் மேலும் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும், வாட் வரியை 1 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
இது சாமானிய மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்து, அரசாங்க வருவாயை அதிகரிக்க உதவும் என அவர் கூறுகிறார்.
வளைகுடா நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் மீதமுள்ள உறுப்பு நாடுகளில் வருமான வரி என்ற எந்த அம்சமும் இல்லை.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.2024 ஆம் ஆண்டிற்கான ஓமனின் மொத்த பட்ஜெட் சுமார் $30.26 பில்லியன். 2028-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் வருமான வரியிலிருந்து சுமார் $230 மில்லியன் மட்டுமே வருவாய் கிடைக்கும் என முனைவர் கஷூப் மதிப்பீடு செய்கிறார்.
ஆனால், இந்த வரியின் பயன்கள் நிதி வருவாயைத் தாண்டி, சிறந்த கண்காணிப்பு, தரவின் வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கை வடிவமைப்பை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும் என அவர் நம்புகிறார்.
வரி வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் செயல்படுத்தப்பட்டால், அது சமூக நீதிக்கான ஒரு முக்கிய வழிமுறையாக மாறும் என்று அவர் கூறுகிறார்.
“அதிக வருமானத்திற்கு மட்டும் வரி விதிப்பது நிதி மேலாண்மையின் சமநிலையை பிரதிபலிக்கிறது. ஆனால், அந்த வரி வருவாய் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவது முக்கியம். இதன் மூலம் மக்கள் நாட்டின் வளர்ச்சியில் தாங்கள் பங்களித்துள்ளதாக உணர முடியும்” என்று அவர் கூறினார்.
மறுபுறம், இந்த வரி சமூக நீதியை அடையும் வழிக்கு இட்டுச்செல்லாது என்று அல்-துகி நம்புகிறார்.
“வரியிலிருந்து விலக்கு பெற்ற 99 சதவீத மக்கள், வரி செலுத்தும் 1 சதவீதத்தினரை பேராசை கொண்டவர்களாகக் கருதலாம். இது தவறான சிந்தனை” என்று அவர் கூறினார்.
இந்தக் கொள்கையை ஓமன் வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தால், அது மற்ற வளைகுடா நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் மற்ற உறுப்பு நாடுகள் இந்த மாதிரியை ஏற்றுக்கொள்ளும் என்று அல்-துகி கருதவில்லை.
அவரைப் பொறுத்தவரை, வரி இல்லாத சூழல் இந்த நாடுகளின் முதலீட்டுக் கொள்கையின் அடிப்படையாகும்.
அரசாங்கத்தின் பார்வையில், நிலையான நிதிநிலையை அடையவும், சமூக சமநிலையைக் கொண்டுவருவதற்கும் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாக இந்த வரி முறை பார்க்கப்படுகிறது.
ஆனால், முதலீடு குறைவது மற்றும் திறமையானவர்கள் இடம் பெயர்வது போன்ற எதிர்மறை விளைவுகள் இன்னும் விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளன.
தற்போதுள்ள வரி அமைப்பை மேம்படுத்துவது, நடைமுறையில் சிறந்த மற்றும் குறைவான ஆபத்துடைய தீர்வாக இருந்திருக்கும் என சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
அது எவ்வாறு இருந்தாலும், ஓமனின் இந்த முயற்சி தற்போது முழு வளைகுடா பிராந்தியத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தக் கொள்கையால், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளுடன் நிதி சமநிலையை ஏற்படுத்த முடிந்தால், அது வளைகுடா நாடுகளின் வரிக் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றமாக அமையக்கூடும்.