பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது.எழுதியவர், பிரபாகர் மணி திவாரிபதவி, பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் மாணவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமூல் காங்கிரஸ் சத்ரா பரிஷத் (TMCP) உடன் தொடர்புடையவர் என்ற கூற்றுகளும் இந்த வழக்குக்கு அரசியல் சாயத்தைப் பூசியுள்ளன.

இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் திரிணாமூல் காங்கிரஸையும் அதன் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்று கோரியுள்ளன. இந்த விவகாரத்தில் பல அமைப்புகள் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்தக் கூற்றுகளை அக்கட்சியின் மாணவர் அமைப்பான டிஎம்சிபி நிராகரித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர், சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவில் பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மூன்று நாட்களுக்குள் கொல்கத்தா காவல் ஆணையர் விரிவான அறிக்கையைக் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர், காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தச் சம்பவம் குறித்த தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். கூடுதலாக, பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவியின் புகார் அடிப்படையில் மூவர் கைது

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மூவரும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு, 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் அந்த நேரத்தில், கல்வி வளாகங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்தன. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“இந்தச் சம்பவம் ஜூன் 25ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.50 மணி வரை தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்தது” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி டவுன் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதன் பிறகு, பார்க் சர்க்கஸ் தேசிய மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு, புதன்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், மூன்றாவது நபர் இரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரின் பெயர்கள் பிரமித் முகர்ஜி மற்றும் ஜே அகமது. இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோஜித் மிஸ்ரா, அவர் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டம்வெள்ளிக்கிழமை, காவல்துறையினரை தவிர, தடயவியல் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டது.

“திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்பின் கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாக வாக்குறுதி அளித்து வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

கடந்த புதன்கிழமை மனோஜித் தன்னை கல்லூரிக்கு அழைத்து அமைப்பின் தலைவராக ஆக்குவதாக உறுதியளித்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி மதியம் 12 மணிக்குப் பிறகு கல்லூரிக்கு வந்துள்ளார். பிறகு மனோஜித் மாணவியிடம் ஆபாசமான முறையில் காதலை முன்மொழிந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

காவல்துறை அளித்த தகவல்களின்படி, “பின்னர் மனோஜித்தும் அவரது இரண்டு கூட்டாளிகளும் மாணவியை வலுக்கட்டாயமாக காவலாளியின் அறைக்கு இழுத்துச் சென்றனர். காவலாளியை அங்கிருந்து விரட்டியடித்த பிறகு இந்தக் குற்றம் நடந்துள்ளது.”

இந்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான மனோஜித் மிஸ்ராவின் ஃபேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் தெற்கு கொல்கத்தா மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் அமைப்புச் செயலாளராக உள்ளார். அவர் முன்பு சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆனால் திரிணாமூல் மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் ஒரு சிறிய பதவி வழங்கப்பட்டது, ஆனால் தலைவர் பதவி அல்ல. அவர் பல ஆண்டுகளாக சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவுக்கு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை” என்று கூறினார்.

தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு பேரும் டிஎம்சிபியுடன் தொடர்புடையவர்கள். ஆனால் இதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையில், முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவுடன் பல டிஎம்சிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தத் தலைவர்களில் டிஎம்சிபி மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யாவும் ஒருவர்.

விசாரணைக் குழு அமைக்கப்படும் – கல்லூரி முதல்வர்

பட மூலாதாரம், SANJAY DAS

படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தீவிரமாகத் தொடர்புடையவர்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமான நபர், அந்த அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.தெற்கு கொல்கத்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சர்தாக் பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று தெரிவித்தார்.

மறுபுறம், செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் கல்லூரியின் தற்காலிக ஊழியர். அவருக்கு கட்சியின் மாணவர் அணியுடன் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று கூறினார்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் அக்கட்சியின் மாணவர் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சட்டக் கல்லூரியின் முதல்வர் நயனா சாட்டர்ஜி, வெள்ளிக்கிழமை பேசியபோது, “இந்த விஷயம் எனக்குத் தெரியாது. கல்லூரியில் வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதற்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது,” என்றார்.

அதோடு, இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டவர் கல்லூரியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தவர் என்றும் அவர் கூறினார். கல்லூரி நேரத்திற்குப் பிறகு அவர் வளாகத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தா தத்தா டே, “இந்தச் சம்பவம் குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த முழு அறிக்கை கல்லூரி முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது,” என்றார்.

அதோடு, செவ்வாய்க்கிழமைக்குள் விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் அதன் பிறகு பல்கலைக்கழக நிர்வாகம் இதுகுறித்த எழுத்துப்பூர்வ தகவலை கல்லூரி முதல்வருக்கு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மமதா பானர்ஜியை விமர்சிக்கும் பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்இதற்கிடையில், மனோஜித்தின் தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனது மகனுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்றும் அவர் வீட்டிற்குக்கூட வருவதில்லை எனவும் கூறியுள்ளார். அதோடு, தனது மகன் கல்லூரியின் உள் அரசியலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

“மனோஜித் சிறு வயதில் இருந்தே திரிணாமூல் காங்கிரஸால் ஈர்க்கப்பட்டு, கல்லூரியில் படிக்கும்போது தீவிர அரசியலில் இணைந்தார்,” என்று அவரது தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

முதலமைச்சர் மமதா பானர்ஜி, ரத யாத்திரை தொடர்பாக தற்போது திகாவில் உள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரி இதை விமர்சித்துப் பேசியுள்ளார். அவர், “முதலமைச்சரின் பாதுகாப்பில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது,” என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய சுபேந்து அதிகாரி, “சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த நாற்காலியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. மமதா பானர்ஜியுடைய அரசின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது,” என்று கூறினார்.

இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார், “முதல்வர் முன்பு பாலியல் வன்கொடுமைகளை ‘சிறிய சம்பவம்’ என்று வர்ணித்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இயற்கையானவை. கல்வி வளாகங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டக் கல்லூரியிலேயே சட்டம் மீறப்படுகிறது,” என்று விமர்சித்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள்

பட மூலாதாரம், SANJAY DAS

படக்குறிப்பு, கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. மதியம் அந்தப் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பாக ஜனநாயக மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எஃப்.ஐ) மாநில செயலாளர் தேபாஞ்சன் டே இதுகுறித்துப் பேசியபோது, “தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் திரிணாமூல் மாணவர் அணி நீண்ட காலமாக கலவரத்தை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் காவல்துறையும் நிர்வாகமும் மௌனம் காத்து வருகின்றன. முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மீது ஊழல், பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உள்ளன,” என்றார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ஒருவர் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தெற்கு கொல்கத்தா திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் கிளைச் செயலாளர் என்று கூறினார். மற்ற இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மற்றுமோர் அமைப்பான அபயா மன்ச், கஸ்பா காவல் நிலையம் முன்பாகப் போராட்டம் நடத்தியது.

காங்கிரஸ் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மாணவியின் குடும்பத்தினரைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் மாநில தலைவர் சுபாங்கர் சர்க்கார், “இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். காவல் நிர்வாகம் தீவிரமாக இருந்தால் இத்தகைய சம்பவங்கள் மாநிலத்தில் நடக்காது,” என்றார்.

எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்குப் பிறகு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கட்சி கூறியுள்ளது. ஒவ்வொரு திரிணாமூல் உறுப்பினரும் இதைக் கண்டித்துள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார்.

திரிணாமூல் மாணவர் அமைப்பின் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு சில சிறிய பதவிகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர் மாணவர் அமைப்பின் தலைவர் அல்ல என்று தெரிவித்தார்.

தனிப்பட்ட உரையாடல்களில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்கும் ஆர்.ஜி. கர் சம்பவத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது எதிர்காலத்தில் அரசுக்கும் கட்சிக்கும் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது, ஆளுங்கட்சி மற்றும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் இதை ஒரு பெரிய பிரச்னையாக மாற்ற முயலும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அரசியல் நிபுணர் ஷிகா முகர்ஜி, “குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, தலைநகரில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம். இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அது கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்,” என்று கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு