வடகிழக்கில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் இலங்கை அரசின் சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கவென கடந்த மார்ச் 28ம் திகதிய  வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியை தற்காலிகமாக  வலிதற்றதாக்கும் வகையில்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கிடையில் வர்த்தமானியை மீள பெறுவதற்கான  வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஏம்.ஏ.சுமந்திரன் லண்டனில் தங்கியுள்ள நிலையில் அடிப்படை உரிமை மீறல் வழக்கில்; மனுதாரர் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனகஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோசன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துசான் ஆகியோர் ஆஜராகியதாக தெரியவருகின்றது.