அமெரிக்கா தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக தோன்றிய காமனெயி – என்ன சொன்னார்?

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயிஎழுதியவர், ஜாக்குலின் ஹோவர்ட் & ஆடம் தர்பின் பதவி, பிபிசி3 நிமிடங்களுக்கு முன்னர்

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, வான்வழி தாக்குதல்கள் மூலமாக அமெரிக்கா எந்த விதமான வெற்றியையும் அடையவில்லை என்று கூறியுள்ளார்.

மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

இஸ்ரேல் இரான் இடையே நீடித்த போர் பதற்றம் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்த நிலையில், முதன்முறையாக காணொளி முலமாக பொதுவெளியில் தோன்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்கள், இரானின் அணுசக்தி திட்டத்தை தடுக்கும் வகையில், குறிப்பிடத்தக்க எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார். அதே நேரத்தில் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதல் ‘கடுமையான பாதிப்பை’ ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இரானின் அணுசக்தி கனவுகளை வான்வழி தாக்குதல்கள் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில் காமனெயி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேகரித்த உளவு தகவல்களின்படி, “வான்வழித் தாக்குதல்கள் அணுசக்தி மையங்கள் மீது கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த முயற்சிகளை பின்னோக்கி தள்ளியுள்ளது,” என்று கூறினார்.

அதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் உள்ளே அமைந்திருக்கும் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் வான்வழித் தாக்குதல்கள் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன என்று கூறினார்.

எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் குறைவான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளது என்று கூறியதாக அமெரிக்க அதிகாரிகளின் பெயர் குறிப்பிடாமல் வெளியான செய்திகளைக் அவர் கடுமையாக விமர்சித்தார்

மூத்த ஜெனரல் டான் கைனுடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பீட் ஹெக்செத், இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரலாற்று வெற்றியை தந்துள்ளது என்று கூறினார்.

மேலும் அது இரானின் அணு செறிவூட்டும் தளங்கள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தாக்குதல்களுக்கு முன்பு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஃபோர்டோவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதற்கான தகவல்கள் ஏதும் அமெரிக்காவுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்.

ஃபோர்டோ, நிலத்திற்கு அடியில் உருவாக்கப்பட்ட அணுசக்தி தளமாகும். பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக குண்டுகளை பயன்படுத்தி அமெரிக்கா இந்த அணுசக்தி தளத்தின் மீதும் தாக்குதல்களை நடத்தியது.

காணொளிக் குறிப்பு, அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்த காமனெயி

ஜூன் 13 அன்று இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகியே இருந்த காமனெயி, வியாழக்கிழமை காலை வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவரின் நீண்ட மௌனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தாக்குதல்களைத் தொடர்ந்து அவர் பதுங்குக் குழி ஒன்றில் இருந்ததாகவும், தொலைத் தொடர்புகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது அவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பியது.

இரானிய அதிகாரிகள், வியாழக்கிழமை காமனெயி எங்கிருந்து பேசினார் என்ற தகவல்களை அளிக்கவில்லை. ஆனால் மூத்த அதிகாரி ஒருவர், இந்த வாரத்தின் தொடக்கத்தில் அவர் பாதுகாப்பான இடத்தில் தங்கி இருந்தார் என்று தெரிவித்தார்.

வியாழக்கிழமை அவர் வெளியிட்ட வீடியோவில், இரான் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தினால், மத்திய கிழக்கில் அமைந்திருக்கும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது அதிகப்படியான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை வென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், இரானின் அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக டிரம்ப் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

“அவர்களால் எதையும் செய்து முடிக்க இயலவில்லை. அவர்களின் இலக்கை அவர்களால் அடைய இயலவில்லை,” என்று குறிப்பிட்டார் காமனெயி.

கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க வான்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், “வருங்காலத்திலும் இத்தகைய தாக்குதல்கள் தொடரும். (இரான் மீது) ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், எதிரிகள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் அதிகமாக இழக்க நேரிடும்,” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

கத்தாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்பாகவே அது தொடர்பாக தகவல்கள் அளிக்கப்பட்டது என்று டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வான்படை தளத்தில் எத்தகைய பாதிப்பும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அணுசக்தி திட்டம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

பிபிசி செய்திகளின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ். செய்தி, வெள்ளை மாளிகை இரானை மீண்டும் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைக்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தேவைக்காக செறிவூட்டப்படாத அணுசக்தி திட்டத்திற்கு நிதி வழங்குவது போன்ற வாய்ப்புகளைப் பற்றியும் சிந்தித்து வருகிறது.

இருப்பினும், இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர், அந்த நாட்டின் அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை என்று கூறினார்.

ஜூன்13 அன்று இஸ்ரேல் நேரடியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது. “இதை (அணுசக்தி திட்டத்தை) நிறுத்தவில்லை என்றால் மிக குறுகிய காலத்தில் இரானால் அணு ஆயுதம் ஒன்றை உருவாக்க இயலும்,” என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த பிறகு இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்பு உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் ஆளுநர்கள் குழு, இரான் 20 ஆண்டுகளில் முதல் முறையாக அதன் அணு ஆயுத பரவல் தடை விதிகளை மீறியுள்ளது என்று அறிவித்தது.

இரான் தொடர்ச்சியாக மக்கள் பயன்பாட்டிற்காகவே அணுதிட்டத்தை உருவாக்கியதாக கூறி வருகிறது.

வியாழக்கிழமை அன்று, சர்வதேச அணுசக்தி மையத்திற்கு வழங்கி வந்த ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை நிறைவேற்றியது இரான் நாடாளுமன்றம். இவ்வாறு செய்வதன் மூலமாக, வருங்காலத்தில் அணுசக்தி தளங்களை கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்வதை இரான் அனுமதிக்காது.

இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்ற 12 நாட்கள் வான்வழி தாக்குதல்களில் இரானில் 610 பேர் கொல்லப்பட்டதாக இரானின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரக் கடைசியில் இந்த விவகாரத்தில் நேரடியாக ஈடுபட்ட அமெரிக்கா, இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள அணுசக்தி தளங்களை தாக்கியது. இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்பு இந்த தாக்குதல்களை நடத்தியது அமெரிக்கா.

ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரஃபேல் க்ரோஸி புதன்கிழமை பேசிய போது, டெஹ்ரான் தாக்குதல்களை எதிர்கொண்ட போது, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக நகர்த்தியிருக்கலாம் என்று தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு