வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார இன்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

சந்திப்பின்போது,  வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.

வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர்.

யாழில். மேற்கொள்ளவுள்ள மீள்குடியேற்றம் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட யாழ். கட்டளை தளபதி!

யாழ் .  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீள் குடியேற்றங்கள் தொடர்பில் யாழ் . மாவட்ட கட்டளை தளபதி , மாவட்ட செயலருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் கே. ஏ. என். ரசீஹ குமார, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் வியாழக்கிழமை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி மற்றும் காணி விடுவிப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர்  உ.தா்சினி உடனிருந்தார்கள்.