Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணியில் நடைபெற்ற அணையா விளக்கு எழுச்சிப் போராட்டத்தின் இறுதி நாளன்று இடம்பெற்ற அரசியல்வாதிகள் சிலருக்கு எதிரான அநாகரிக வசை பாடல்கள் தமிழ்ச் சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் வருகையை எதிர்பார்த்து உணர்வெழுச்சியுடன் நடந்துகொண்டிருந்த போராட்டத்தின் செல்திசையை மடைமாற்றுவதுபோன்று அங்கு வந்திருந்த சிலர் அரசியல்வாதிகள் சிலருக்கு எதிராக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களைப் போராட்டத்திடலில் இருந்து வெளியேற்றும் இழிசெயலில் ஈடுபட்டிருந்தனர். இதனை நீதிக்காகப் புதைகுழியில் காத்திருக்கும் ஆன்மாக்கள்கூட ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அணையா விளக்குப் போராட்டத்தின் கடைசி நாளான நேற்று சிலர் குழுவாகத் திரண்டு வந்து போராட்டத்திடலில் இருந்து அரசியல்வாதிகளை வெளியேறுமாறு கோசமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலே இவ்வாறு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் அஞ்சலோட்டம் போன்றது. முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டவுடன் போராட்டத்தை ஜனநாயக ரீதியாகத் தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்வதற்கு அவர்கள் தவறியதாலேயே தமிழ் மக்கள் ஆங்காங்கே ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் தங்களால் இயன்ற அளவுக்கு ஏற்பாடு செய்யத் தலைப்பட்டுள்ளனர். மக்கள் செயல் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்குப் போராட்டமும் இத்தகைய ஒரு மக்கள் போராட்டமே ஆகும்.
மக்கள் செயல் அமைப்பு போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு ஒத்துழைக்குமாறு அழைப்பை விடுத்ததன் அடிப்படையிலேயே பெருந்திரளாகப் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள். அரசியல்வாதிகளும் கலந்துகொண்டார்கள். போராட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞர் குழாம் அரசியல்வாதிகளும் போராட்டத்திடலில் அமர இடம் வழங்கிய நிலையில் போராட்டத்தைக் குழப்பும் நோக்குடன் திட்டமிட்டு அங்கு வந்த சிலரே இந்த அநாகரிக செயலை அரங்கேற்றியுள்ளனர். இது போராட்ட ஏற்பாட்டாளர்களே அரசியல் வாதிகளை வெளியேற்றியது போன்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை அரசியல் முள்ளிவாய்க்காலின் பின்னர் தேர்தல் அரசியலாக மாத்திரமே சுருங்கிப்போய் உள்ளது. ஆசனங்களுக்காகத் தவங்கிடக்கும் அரசியல்வாதிகளால் கட்சிகளுக்கு இடையேயும் கட்சிகளுக்கு உள்ளேயும் தோற்றுவிக்கப்படுகின்ற முரண்பாடுகளின் விளைவுகளில் ஒன்றே அணையா விளக்குப் போராட்டத்தில் இடம்பெற்ற சம்பவமும் ஆகும். தேர்தல் மேடைகளில் எதிரும் புதிருமாக வசை பாடும் அரசியல்வாதிகள் அதையே நீதிக்கான போராட்டங்களுக்குள்ளும் நுழைப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. இத்தகைய இழிசெயல்கள் இனவிடுதலை அரசியலை மென்மேலும் நலிவுபடுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.