சென்னை: காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்ற கைதி உயிரிழப்பு – எஸ்ஐ சஸ்பெண்ட்

பட மூலாதாரம், Getty Images

19 நிமிடங்களுக்கு முன்னர்

ஜூன் 26, வியாழக்கிழமை அன்று தமிழ்நாட்டில் வெளியான பத்திரிக்கைச் செய்திகளின் முக்கிய செய்திகளை இங்கே காணலாம்.

“விசாரணையின் போது காவல் நிலையத்தின் 2-வது மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்ற உத்தர பிரதேச இளைஞர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி எஸ்.ஐ, தலைமைக் காவலரை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்,” என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“சென்னை வேளச்சேரி விஜயநகர், 7-வது தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் புகுந்து திருட முயன்றதாக கடந்த 20-ம் தேதி அதிகாலை வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து சம்பந்தப்பட்ட இளைஞரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-வது தளத்தில் வைத்து அந்த இளைஞரிடம், குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர், உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது.

கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிவெளியே வந்த அந்த இளைஞர் தப்பிச் செல்லும் நோக்கத்துடன், 2-வது தளத்தின் அருகே இருந்த மரத்தை பிடித்து கீழே இறங்குவதற்காக குதித்துள்ளார். மரத்தின் கிளை முறிந்ததால் 2-வது தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அந்த இளைஞரை மீட்டு, மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இது ஒருபுறம் இருக்க பணியின் போது அலட்சியமாக இருந்ததாக வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்ஐ ஜம்புலிங்கம், காவலர் ஜெகதீசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்தார்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அடுத்த ஆண்டு முதல் 10 வகுப்புக்கு இரண்டு பொதுத்தேர்வு

“பத்தாம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்த உள்ளது. முதல் கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரி மாதத்திலும், இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு மே மாதத்திலும் நடத்தப்படும். இதில் முதல் கட்ட பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,” என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிபிஎஸ்இ மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் புதன்கிழமை கூறியதாவது: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டுமுதல் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் முறையே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அறிவிக்கப்படும்.

மாணவர்கள் பிப்ரவரியில் நடைபெறும் முதல் கட்ட பொதுத் தேர்வில் பங்கேற்பது கட்டாயமாகும். மே மாதம் நடத்தப்படும் இரண்டாம் கட்ட பொதுத் தேர்வில் பங்கேற்பது மாணவர்களின் விருப்பம்தான். அறிவியல், கணிதம்,சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்களில் ஏதாவது மூன்று பாடங்களில் தங்களின் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள், இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்கலாம்.”

பட மூலாதாரம், Getty Images

”குளிர் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் இரு பொதுத் தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நடைமுறைகளின்படி அனுமதிக்கப்படுவர். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், முதல் கட்ட பொதுத் தேர்வின் போது போட்டிகள் நடைபெறும் நிலையில், நேரடியாக இரண்டாம் கட்ட பொதுத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கான அக மதிப்பீடு என்பது ஒரு கல்வியாண்டில் ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்” என்கிறது அச்செய்தி

”’தற்போது, துணைத் தேர்வு மூலம் ஏதாவது 2 பாடங்களின் மதிப்பெண்களை மட்டும் மேம்படுத்திக்கொள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். புதிய மூன்று பாடங்களின் மதிப்பெண்களை இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு மூலம் மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள முடியும்’ என்றும் பரத்வாஜ் தெரிவித்தார். முன்னதாக, இதற்கான வரைவு நடைமுறைகளை பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக கடந்த பிப்ரவரியில் சிபிஎஸ்இ வெளியிட்டது.”என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு