இரான் அமெரிக்காவுடன் மோதினால் வளைகுடா நாடுகளையும் ஏன் பகைக்க நேரிடும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது, பின்னர் அமெரிக்கா தலையிட்டது, இறுதியாக கத்தாரும் பாதிக்கப்பட்டதுஎழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் இந்த மாதம் ஜூன் 13 அன்று இரான் மீது தாக்குதல் நடத்தியது, அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது.

இரானின் மூன்று அணு ஆயுத தளங்களான ஃபோர்டோ, நடன்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது, இருநாடுகளுக்கு இடையிலான மோதலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

அதற்கு முன்பும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி வந்தாலும், இந்தப் போரில் நேரடியாக இணையவில்லை. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இரான் குறிவைக்கலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்தது.

பயணிகள் விமானங்களுக்கு தனது வான்பரப்பை மூடியிருப்பதாக திங்கள் இரவு 9 மணிக்கு கத்தார் அறிவித்தது. கத்தார் தலைநகரில் உள்ள அமெரிக்க விமான படைதளத்தை இரான் தாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இரவு 10 மணிக்கு தோஹாவில் இருக்கும் அமெரிக்க விமானப்படைத் தளத்தை இரான் தாக்கியது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை பலவீனமான தாக்குதல் என்று கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“இரானின் தாக்குதல் எதிர்பாராதது அல்ல. தாக்குதல் குறித்து முன்கூட்டியே எங்களுக்கு தெரிவித்ததற்கு இரானுக்கு நன்றி. அதனால்தான் யாரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை.” எனத் தெரிவித்தார் டிரம்ப்.

போர் இஸ்ரேல் மற்றும் இரான் இடையே தொடங்கியது. ஆனால் விரைவில் அமெரிக்காவும் இதில் ஈடுபட்டது, இறுதியாக கத்தார் பகுதியும் பாதிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் அந்த இரு நாடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் அந்தப் பகுதி முழுவதையும் சூழும் என்பதால்தான், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இருப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது.

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, அமெரிக்க விமானங்கள் இரானின் நிலத்தடி அணு ஆயுத தளங்களின் மீது 30,000 பவுண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசின. இதைத் தொடர்ந்து, டிரம்ப் இரானில் ஆட்சி மாற்றம் குறித்தும் பேசினார்.

இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து பேசி வருகிறார். இரான் யாரையும் தாக்காது, யாருடைய தாக்குதலையும் ஏற்காது என்று காமனெயி கூறியுள்ளார்.

தனது அண்டை நாடுகளுடன் ஏன் இரான் மோத வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளில் அமெரிக்காவுக்கு ராணுவ தளங்கள் உள்ளன, இரானும் அவற்றை குறிவைக்கிறது.அமெரிக்காவின் அல் உதெய்த் விமான தளம் கத்தாரின் தலைநகர் தோஹாவின் புறநகரில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றின்படி, மத்திய கிழக்கில் இது அமெரிக்காவின் மிகப்பெரிய விமான தளமாகும்.

இங்கு 10,000 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இது அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டு பிரிவின் (US Central Command) ஒரு பகுதியாகும். இங்கிருந்து அமெரிக்க ராணுவம் மேற்கில் எகிப்து முதல் கிழக்கில் கஜகஸ்தான் வரை தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இரான் இந்த விமான தளத்தின் மீது திங்கட்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

இரானின் இந்த தாக்குதலுக்குப் பிறகு, போரின் அளவு மேலும் விரிவடையலாம் என்ற அச்சம் எழுந்தது. இரானின் தாக்குதலைக் கண்டித்த கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி, ”இது கத்தாரின் இறையாண்மை, வான்வெளி, சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறுவதாகும்,” எனக் கூறினார்.

மேலும் அவர், “இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க கத்தாருக்கு உரிமை உள்ளது. கத்தார் இரானின் ஏவுகணைகளை பாதியில் மடக்கி அழித்தது. இத்தகைய தாக்குதலால் முழு பிராந்தியத்திலும் உறுதியற்ற தன்மை அதிகரிக்கும். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியபோது, அதை முதலில் கண்டித்த நாடு கத்தார் ஆகும்” எனத் தெரிவித்தார்.

“கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளமான அல் -உதெய்த் மீது இரான் தற்காப்புக்காக தாக்குதல் நடத்தியது. ஜூன் 22 அன்று அமெரிக்கா எந்த காரணமுமின்றி இரானிய பகுதியின் மீதும் எங்கள் தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51-ன் கீழ் நாங்கள் இந்த தாக்குதலை நடத்தினோம். இது தற்காப்பு நடவடிக்கையாகும், மேலும் கத்தாருடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.” என கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீதான தாக்குதல் குறித்து இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறினார்.

அதாவது, தற்காப்புக்காக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தன்னால் தாக்கமுடியும் என இரான் தெளிவாக அறிவித்துள்ளது.

”அமெரிக்க வீரர்கள் கத்தாரில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளிலும் உள்ளனர். இரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மட்டுமல்ல, இரானின் பல அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களுடனும் போரிட வேண்டியிருக்கும்” என டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தில் பேராசிரியராக உள்ள அஸ்வினி மஹாபாத்ரா கூறுகிறார்.

முக்கியத்துவத்துக்கான நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியாவில் துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் முரண்பட்ட நலன்கள் உள்ளன, மேலும் பஷார் அல்-அசாத்தின் வெளியேற்றம் இரானுக்கு ஒரு தோல்வியாகக் கருதப்படுகிறது.”வளைகுடாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு முக்கியத்துவத்துக்கான நெருக்கடி உள்ளது. ஆட்சியின் அங்கீகாரத்திற்கு அவர்கள் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அதாவது, இங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சி எவ்வளவு காலம் பொருத்தமானதாக நீடிக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். இவர்கள் உள்நாட்டு அச்சுறுத்தல்களாலும் சூழப்பட்டுள்ளனர், அண்டை நாடுகளில் ஏதேனும் நடக்கும் என்ற அச்சத்திலும் உள்ளனர்.” எனத் தெரிவிக்கிறார் மஹாபாத்ரா.

மேலும் அவர், “இதனால்தான் இங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை செய்துள்ளன. இதனால், இரானுடன் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அமெரிக்கா இந்த நாடுகளை பாதுகாக்கும். இரான் இஸ்ரேலுடன் போரிடும்போது, அமெரிக்காவும் அதில் ஈடுபடும், இறுதியாக வளைகுடாவில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள நாடுகளும் இதில் சேர்ந்து கொள்ளும்.”

“இப்போது கத்தார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் செளதி அரேபியாவில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. எனவே, இரான் இவற்றை குறிவைக்கும். இந்த தாக்குதல்களில் ராணுவ தளத்திற்கு வெளியே ஏவுகணை அல்லது குண்டு விழுந்துவிடக் கூடாது என்ற அச்சமும் உள்ளது. போரின் போது இது சகஜமான விஷயம்தான்.”

“இதனால், இரான் தனது அண்டை நாடுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, இரான் தனது இறையாண்மையை மீறியதாக கத்தார் கூறியது. கத்தார் செல்வந்த நாடாக இருந்தாலும், இரானுடன் போர் புரிய முடியாது. கத்தாருக்கும் இரானுக்கும் நல்ல உறவுகள் இருந்து வந்தன. செளதி அரேபியா யேமென் மீது தாக்குதல் நடத்தியபோது, கத்தார் இரானுடன் இருந்தது.” என்றார்.

கத்தாரில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தின் மீதான் இரானின் தாக்குதலை கத்தார் கண்டித்த அளவு வலுவாக செளதி அரேபியா கண்டிக்கவில்லை.

“கத்தாருக்கு எதிரான இரானின் தாக்குதல், சர்வதேச விதிமுறைகளையும், நல்ல அண்டை நாட்டு கொள்கைகளையும் வெளிப்படையாக மீறுவதாகும். இது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. எந்தச் சூழ்நிலையிலும் இதை நியாயப்படுத்த முடியாது” என கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீதான இரானின் தாக்குதலை செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்தது,

செளதி அரேபியா இவ்வளவு கடுமையாக விமர்சிப்பதற்கு காரணம், இரான் தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் குறிவைக்கலாம் என்ற அச்சம்தான் என்கிறார் பேராசிரியர் மஹாபாத்ரா,

சில ஆய்வாளர்கள், அமெரிக்காவின் நம்பகத்தன்மை ஏற்கனவே குறைந்திருந்தது என்றும், இஸ்ரேல் மற்றும் இரான் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் எடுத்த நிலைப்பாடு அமெரிக்காவின் நம்பகத்தன்மையை மேலும் குறைத்தது என்றும் இதன் தாக்கம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தெளிவாக வெளிப்படும் என்றும் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் நம்பகத்தன்மை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கி நேட்டோவின் உறுப்பினராக உள்ளது, செளதி அரேபியாவும் அமெரிக்காவின் நட்பு நாடு, எனவே போர் ஏற்பட்டால் செளதி அரேபியாவும் துருக்கியும் இரானின் நட்பு நாடுகளாக மாற முடியாது.துருக்கியைச் சேர்ந்த கோனுல் தோல், மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட்டில் துருக்கிய திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.

கோனுல் தோல், “மீண்டும் அதிபரான பிறகு டிரம்ப் வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். அங்கு டிரம்ப், போரை விரும்பவில்லை, மாறாக வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரும்புவதாகக் கூறினார். இரானின் அணு ஆயுத திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஜூன் 15-ம் தேதி வரை அதன் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார். இஸ்ரேல் இதற்கு முன்பு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் கூறினார். இவ்விஷயத்தில் டிரம்ப் நெதன்யாகுவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அமெரிக்க உளவுத்துறையும் இரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்றும், 2003-ல் நிறுத்தப்பட்ட அணுசக்கி திட்டத்தை காமெனி மீண்டும் தொடங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. ஜூன் 12 அன்று அமெரிக்காவும் இரானும் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என கூறப்பட்டது.” என கோனுல் தோல் கூறுகிறார்.

“இருப்பினும், ஜூன் 13 அன்று இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் டிரம்ப் அமெரிக்கா போரில் ஈடுபடாது என்று கூறினார். அவர் ரஜ்ஜீய பேச்சுவார்த்தையை விரும்புவதாகக் கூறினார், ஆனால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஆயத்துல்லா அலி காமனெயியைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தினார். அதன்பிறகு டிரம்ப் மீண்டும் பின்வாங்கி, அமெரிக்கா இரானுக்கு எதிரான போரில் ஈடுபடுமா இல்லையா என்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்றார். ஆனால், அடுத்த நாளே அமெரிக்கா போரில் ஈடுபட்டது.”

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”ஒன்று அமெரிக்க அதிபருக்கு உடல் நலமில்லாமல் இருக்கவேண்டும் அல்லது நெதன்யாகு அவரை இருட்டில் வைத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும், அமெரிக்காவின் நம்பகத்தன்மை இதுவரை இவ்வளவு வீழ்ச்சியடைந்ததில்லை. இந்தப் பிராந்தியம் உடனடியாக அமெரிக்காவுக்கு பிந்தைய மனநிலைக்கு மாற வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதற்கான தயாரிப்புகள் அங்கு நீண்ட காலமாக நடந்து வருகின்றன.” என்றார் கோனுல் தோல்.

செளதி அரேபியாவில் இந்திய தூதராக இருந்த தல்மீஸ் அகமது இந்த விவகாரம் பற்றி கூறுகையில், “ஒவ்வொரு அரபு நாட்டிலும் அமெரிக்கப் படைகள் உள்ளன. முழு வளைகுடாவிலும் 70,000 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு நாட்டுக்கு வெளியே புவிசார் உரிமைகள் (Extra territorial rights) உள்ளன. அதாவது, அங்குள்ள விதிமுறைகளும் சட்டங்களும் இவர்களுக்குப் பொருந்தாது. இந்த நாடுகளில் அமெரிக்காவுக்கு ராணுவ தளங்கள் உள்ளன. மேலும் இவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பதற்கு முழு உரிமையும் அவர்களுக்கு உள்ளது. எந்த அரபு நாட்டாலும் இந்த விஷயத்தில் அமெரிக்காவைத் தடுக்க முடியாது. இஸ்ரேலின் டிரோன்கள் ஜோர்டான் வழியாகத்தான் வருகின்றன. இந்த டிரோன்களைத் தடுக்க வேண்டியது ஜோர்டானின் பொறுப்பு. பல டிரோன்கள் ஜோர்டானிலேயே விழுந்துவிடுகின்றன.” என்றார்.

கத்தாரைத் தவிர மத்திய கிழக்கில் உள்ள் அமெரிக்க ராணுவ தளங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கத்தார் எமிருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.பஹ்ரைன்

இங்கு அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படையின் (Navy Fifth Fleet) தலைமையகம் உள்ளது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, வளைகுடா, செங்கடல், அரபிக் கடல், மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை இந்த ராணுவ தளத்தின் கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்துள்ளது

குவைத்

குவைத்தில் அமெரிக்காவின் கேம்ப் அரிஃப்ஜான் ராணுவ தளத்துடன், அலி அல்-சலேம் விமான தளமும் உள்ளது. இந்த விமான தளம் இராக் எல்லையொட்டி 40 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குவைத்தின் வடமேற்கில் கேம்ப் பியூரிங் ராணுவ தளம் உள்ளது. இதை அமெரிக்கா 2003-ல் இராக்குடனான போரின்போது உருவாக்கியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அல்-தஃப்ரா விமான தளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியின் தெற்கில் அமைந்துள்ளது. இது யுஏஇ விமானப்படையுடன் இணைந்து செயல்படுகிறது. இது அமெரிக்காவின் முக்கிய விமானப்படை மையமாகக் கருதப்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) அமைப்புக்கு எதிரான போரில் இந்த தளம் முக்கிய பங்கு வகித்தது. துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் முறையாக ராணுவ தளமாகக் கருதப்படவில்லை, ஆனால் இது மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய துறைமுக நிறுத்தம் என அழைக்கப்படுகிறது.

இராக்

மேற்கு இராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள அய்ன் அல்-அசாத் விமான தளத்தில் அமெரிக்காவின் இருப்பு உள்ளது. வெள்ளை மாளிகையின்கூற்றுப்படி, அமெரிக்கா இங்கு இராக் பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவளித்து, நேட்டோ பணிகளில் பங்களிக்கிறது. 2020-ல் இரான் இந்த தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இரானிய ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்றது. மேலும், வடக்கு இராக்கின் பகுதியளவு சுயாட்சி பெற்ற பிரதேசமான குர்திஸ்தானில் எர்பில் விமான தளமும் உள்ளது. இங்கு அமெரிக்காவின் கூட்டு நாடுகள் வீரர்கள் பயிற்சி மற்றும் போர் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கையின்படி, இங்கிருந்து உளவுத் தகவல்களையும் அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது.

செளதி அரேபியா

வெள்ளை மாளிகையின் ஒரு கடிதத்தின்படி, 2024-ல் செளதி அரேபியாவில் 2,321 அமெரிக்க வீரர்கள் இருந்தனர். இவர்கள் சவுதி அரசுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்களில் சிலர் ரியாத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் உள்ளனர். இந்த விமான தளத்திற்கு அமெரிக்க ராணுவ வான்பாதுகாப்பு (Army air defence systems) உதவி கிடைக்கிறது.

ஜோர்டன்

அமெரிக்க விமானப்படையின் மத்திய 332 விமானப் பிரிவின் (யு.எஸ். ஏர் ஃபோர்ஸ் சென்ட்ரல் 332 ஏர் விங்) அங்கமாக இருக்கும் முவாஃபக் அல்-சால்டி விமான தளம் ஜோர்டானில் உள்ளது, இது ஜோர்டானின் தலைநகர் அம்மானிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸ்ராக்கில் அமைந்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு