Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அபிநந்தனை சிறை பிடித்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மரணம் – என்ன நடந்தது?
பட மூலாதாரம், ISPR
படக்குறிப்பு, சையத் மோயிஸ் அப்பாஸ் ஷாஎழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அவர் உயிரிழந்தார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, ராணுவ அதிகாரி மோயிஸ் ஷா சிறைபிடித்தார். அவரின் இறுதி அஞ்சலி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர் துறையின்(ஐ.எஸ்.பி.ஆர்) தகவல்களின்படி, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மோஹ்சின் நக்வி ஆகியோர் அந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
‘பணியில் இருந்த மேஜர், வீரத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாக அவர் மாறியுள்ளார்’ என்று இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற முனீர் குறித்து பேசியதாக ஐ.எஸ்.பி.ஆர் கூறுகிறது.
அஞ்சலிக்குப் பிறகு மேஜர் மோயிஸின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
‘உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களின்படி, பாதுகாப்புப் படையினர் தெற்கு வாஜிரிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையில் ரகசியமாக பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர். இரு தரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேஜர் மோயிஸ் ஷா மற்றும் லான்ஸ் நாய்க் ஜிப்ரனுல்லா ஆகியோர் கொல்லப்பட்டனர்’ என்று ஐ.எஸ்.பி.ஆர் கூறியது.
யார் இந்த மேஜர் மோயிஸ்?
மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா (37), சக்வாலைச் சேர்ந்தவர். அவர் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.
அவர் அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் என்.எல்.ஐ படைப்பிரிவில் சேர்ந்திருந்தார். பிறகு அவர் பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவில் இடம் பெற்றார். சமீபத்திய காலத்தில் அவர் வாஜிரிஸ்தானில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவும் பாகிஸ்தானும் போர் பதற்றத்தில் இருந்த காலத்தில் மேஜர் மோயஸின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன. பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார்.
பிப்ரவரி 27, 2019 அன்று மோயஸ் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் எல்லை கோட்டை அடைந்து, விமானத்தில் இருந்து அங்கு விழுந்திருந்த அபிநந்தன் வர்தமானை கைது செய்தனர். இந்த வீடியோ பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பட மூலாதாரம், Hamid Mir/X
படக்குறிப்பு, மோயிஸ் மரணமடைந்த செய்தி வெளியான பிறகு, 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஹமித் மிருக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அபிநந்தன் பயணித்த போர் விமானம் விபத்துக்குள்ளாகும் போது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே விழுந்ததைப் பார்த்தார் அந்த பகுதியில் வசிக்கும் முகமது ரசாக்.
ரசாக்கும் இதர உள்ளூர் வாசிகளும் அபிநந்தன் விழுந்த இடத்திற்கு சென்ற போது , ஏற்கனவே அங்கே கூடியிருந்த பொதுமக்கள் அபிநந்தன் மீது கல்லெறிந்து தாக்குதல்களை நடத்தினார்கள் என்றும், அங்கிருந்து அபிநந்தன் தப்பிக்க முயன்றார் என்றும் அப்போது பிபிசியிடம் பேசிய ரசாக் கூறினார்.
மக்கள் அவரை சூழ்ந்துவிட்டனர். ஒரு சிலர் அபிநந்தனை அடிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் கேப்டன் சையத் மோயிஸ் தலைமையிலான ராணுவ வீரர்கள் அங்கே வந்தனர் என்றும் ரசாக் தெரிவித்தார்.
அப்போது வைரலான வீடியோவில் அபிநந்தனின் முகத்தில் காயம் ஏற்பட்டிருப்பதையும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை அழைத்துச் செல்வதையும் பார்க்க இயலும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அபிநந்தனை கைது செய்த போது நடந்தது என்ன?
இந்த விவகாரம் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், அப்போது நடந்தது என்ன என்று, ஜியோ நியூஸின் ஹமித் மிர் என்ற பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்தார் மேஜர் மோயிஸ். இந்திய விமானியை பார்க்க சென்ற அந்த சமயத்தில் உள்ளூர் மக்கள் அவரை சூழ்ந்துவிட்டதாக தெரிவித்தார் மோயிஸ்.
“இது மிகவும் சிக்கலான பகுதி. இங்கே இது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பட்டு அபிநந்தனை உயிரோடு அங்கிருந்து மீட்க வேண்டும் என்பதே எங்களுக்கு முதல் கடமையாக இருந்தது,” என்று மோயிஸ் ஹமிதுக்கு தெரிவித்தார்.
மோயிஸ் மரணமடைந்த நிலையில், செவ்வாய் கிழமை மாலையில் இருந்து அவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“பொதுமக்கள் அவரை அடிப்பதை நான் கவனித்தேன்,” என்று மோயிஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தார்.
“நான் அங்கே சென்றவுடன் அபிநந்தன் என்னுடைய ‘ரேங்க்’ என்னவென்று கவனித்தார். பிறகு, ‘கேப்டன், நான் விங் கமாண்டர் அபிநந்தன். இந்திய விமானப்படையில் பணியாற்றுகின்றேன். நான் சரணடைகின்றேன். என்னை உயிருடன் காப்பாற்றுங்கள்’ என்று கூறினார். அவரின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பாக மாறிவிட்டது. ஏன் என்றால் அவர் சரணடைந்துவிட்டார்,” என்று அந்த பேட்டியில் மோயிஸ் தெரிவித்தார்.
அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினர் விசாரணையில் இருந்த போது வெளியான வீடியோ ஒன்றில், அபிநந்தன் அவருடைய பெயர், ரேங்க் ஆகியவற்றை கூறினார். மேலும் அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நன்றாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
“பாகிஸ்தான் ராணுவம் என்னை பார்த்துக் கொள்கிறது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களின் தாக்குதலில் இருந்து கேப்டன் ஒருவர் என்னை காப்பாற்றினார்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அபிநந்தன் ஒரு நாள் கழித்து மார்ச் 2 அன்று இந்தியாவின் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு