Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக 3 நிமிடங்களுக்கு முன்னர்
ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் சேர்த்தனர். 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், முதல் இன்னிங்ஸில் பெற்ற 6 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து 371 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்திருந்தது.
4வது நாள் ஆட்டநேர முடிவில் 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து ஆட்டத்தை முடித்தது. கடைசி நாளான நேற்று 350 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
பாஸ்பால் ஃபார்முலாவை கையில் எடுத்து இங்கிலாந்து அணி பெறும் வெற்றியாகும். லீட்ஸ் மைதானம் மீண்டும் சேஸிங்கிற்கு சொர்க்கபுரி என்பதை நிரூபித்துள்ளது .
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆன்டர்ஸன்-டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி இன்னும் புள்ளிக்கணக்கை தோல்வியால் தொடங்கவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இங்கிலாந்து சாதனை தொடக்கம்
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட், கிராவ்லி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். புதிய பந்தை பயன்படுத்திய போதும் இந்திய பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா மாறி,மாறிப் பந்துவீசியும் இருவரின் விக்கெட்டுகளை நீண்டநேரம் எடுக்க முடியாதபோதே ஆடுகளத்தின் தன்மை புலப்பட்டது.
பென் டக்கெட் ஒருநாள் போட்டி போன்று பேட் செய்து 66 பந்துகளில் அரைசதத்தையும், 121 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இங்கிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எந்தவிதமான சிரமத்தையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வழங்கவில்லை. ஓவருக்கு சராசரியாக 3 முதல் 4 ரன்களை பவுண்டரி மூலமோ அல்லது ஒற்றை அல்லது இரு ரன்கள் மூலம் எடுக்க வழியமைத்துக் கொடுத்தனர்.
ஷர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து பென் டக்கெட், ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது, ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. உயிரைக் கொடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 121 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த பென் டக்கெட் பென் டக்கெட் சேர்த்த 149 ரன்கள் என்பது டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக எந்த பேட்டரும் சேர்க்காத அதிகபட்சமாகும். இதற்கு முன் ஜோ ரூட் 142 ரன்களை 2022ம்ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களில் 4வது இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தவர் என டக்கெட் பெருமை பெற்றார். இதற்கு முன் 1995ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மைக் ஆதர்டன் 185 ரன்களை கடைசி நாளில் தொடக்க வீரராக இருந்து சேர்த்தார்.
188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸில் சேர்க்கப்பட்ட 5வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இங்கிலாந்தைப் பொருத்தவரை கடைசி நாளில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இதற்கு முன் 1991ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரஹாம் கூச் – ஆதர்டன் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தோல்விக்கான காரணம் என்ன?
இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதங்கள் ஒரே டெஸ்டில் விளாசப்பட்டன. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை விளாசியிருந்தார். 5 சதங்களை விளாசியும், ஒரு டெஸ்டில் இந்திய அணி தோற்றது என்பது வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும்.
இந்த டெஸ்டில் சுப்மன் கில், ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இந்த 4 பேட்டர்களைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் ரன்கள் சேர்க்கவில்லை. ஆல்ரவுண்டர்கள் என்று சேர்க்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ஜடேஜாவும் ஏமாற்றினர், ஸ்பெஷெலிஸ்ட் பேட்டர்களாக எடுக்கப்பட்ட கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சனும் ஜொலிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கேப்டன் சுப்மன் கில்லுடன் உரையாடும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி வரிசை 4 பேட்டர்கள் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 ரன்கள்தான் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது, பேட்டிங்கில் மற்ற வீரர்களால் ஏற்பட்ட தோல்வியாகும். அதிலும், லீட்ஸ் போன்ற தட்டையான ஆடுகளத்தில் பேட்டர்கள் இந்த அளவு மோசமாக பேட் செய்தது தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாகும்.
அடுத்ததாக கேட்சுகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டது தோல்விக்கான பிரதான காரணங்களில் ஒன்று. கடந்த 20ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் இதுபோன்று அதிகமான கேட்சுகளை ஒரு போட்டியில் கோட்டைவிட்டதில்லை என்ற பெயரை இந்திய வீரர்கள் பெற்றனர். பும்ரா பந்துவீச்சில் மட்டும் முதல் இன்னிங்ஸில் 3 கேட்சுகள் கோட்டை விடப்பட்டன.
மோசமான பந்துவீச்சு
அடுத்ததாக பும்ரா, சிராஜ் தவிர 3வது, 4வது பந்துவீச்சாளராகச் சேர்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் பங்களிப்பு குறித்து பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது. ஐபிஎல் தொடரில் கூட 3 ரன் ரேட்டில் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டியில் படுமோசமாக பந்தவீசியுள்ளார். இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா உருவெடுத்து, ஓவருக்கு 6.28 ரன்களை வாரி வழங்கியுள்ளார். பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
அதேபோல, ஷர்துல் தாக்கூர் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசி 90 ரன்கள் கொடுத்து ஓவருக்கு சராசரியாக 5.60 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இருவரின் பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக ரன்கள் சேர்க்க ஏதுவாக இருந்தது, இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு 310 ரன்கள் வரை வாரி வழங்கியுள்ளனர்.
பந்துவீச்சில் ஒருவிதமான கட்டுப்பாடு, ஒழுங்கு இருக்க வேண்டும். ஆனால், பிரசித், ஷர்துல் இருவரும் இங்கிலாந்தின் காலநிலை, ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு பந்துவீசவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார்பும்ரா எனும் பிரமாஸ்திரம்
பந்துவீச்சில் பும்ரா ஒருவரை நம்பித்தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பயணித்து வருகிறது. அடுத்த 2 போட்டிகளுக்குப்பின் பும்ரா இல்லாத நிலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, எப்படி தயாராகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சர்வதேச பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பும்ரா மட்டுமே பந்துவீசி எகானமி ரேட்டை 3 ரன்களுக்குள் இரு இன்னிங்ஸிலும் வைத்திருந்தார்.
கடைசி நாளில் 350 ரன்களை டிஃபெண்ட் செய்வதற்காக எந்த மாதிரியான திட்டத்துடன் பந்துவீச்சாளர்கள் வந்தனர் என்பது புலப்படவில்லை. இதில் பும்ரா மட்டுமே சரியான அளவில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறவிட்டார்.
முகமது சிராஜ் கடைசி நாளில் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல, புதிய பந்து எடுத்தபின் கடைசி 15 ஓவர்களில் பும்ராவுக்கும் அவர் ஓவர் வழங்கவில்லை.
பீல்டிங் மோசம்
பீல்டிங்கில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக மோசமாக செயல்பட்டனர். அதிலும், ஸ்லிப்பில் நின்று ஏராளமான கேட்சுகளை தவறவிட்டு அவப்பெயரைப் பெற்றனர். அடிக்கடி ரிஷப் பந்த் பேசியது மைக்கில் நன்றாக எதிரொலித்தது, “பீல்டிங்கை தவறவிட்டீர்கள், பரவாயில்லை, சீக்கிரம் தவறை திருத்தி மீண்டு வாருங்கள், தொடர்ந்து தவறு செய்யாதீர்கள்” எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வெற்றிக்கு முதல் இன்னிங்ஸிலிருந்து பல வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் எதையுமே முறையாக பயன்படுத்தவில்லை. அது வெற்றிக்கான வாய்ப்புகளாக வீரர்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முகமது சிராஜ் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறதுதவறவிட்ட வாய்ப்புகளால் தோல்வி
இந்திய அணியைப் பொருத்தவரை இளம் வீரர்கள், அனுபவமற்ற வீரர்கள் என்ற ஒற்றை வார்த்தையுடன் தோல்விக்கான காரணத்தை பூசி மெழுகிவிட முடியாது. இந்தத் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு தொடக்கம் முதல் கடைசிவரை ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அதை அனைத்தையுமே இந்திய வீரர்கள் பயன்படுத்தவில்லை, தவறவிட்டனர் என்பதுதான் நிதர்சனம்.
ஒரு அணியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 சதங்கள் அடிக்கப்பட்டும், அந்த அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது இதுதான் வரலாற்றில் முதல் முறையாகும். ஏராளமான கேட்ச் மிஸ்ஸிங், பீல்டிங்கில் கோட்டை, டி20 போட்டியைவிட ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்துவீச்சாளர்கள், கடைசி வரிசை வீரர்களின் மட்டமான பேட்டிங் முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட், 2வது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு 6 விக்கெட் என தோல்விக்கான காரணங்களாகப் பட்டியலிடலாம்.
டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக முதல்முறையாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு வெற்றி பெற கிடைத்த அருமையான வாய்ப்பை தனது அனுபமின்மையால் வெற்றியாக மாற்ற தவறவிட்டார்.
பும்ரா இன்னும் இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதால், கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்யப் போகிறது இந்திய அணி என்பது மாபெரும் கேள்வியாக இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ்இங்கிலாந்துக்கு 6-வது வெற்றி, ஸ்டோக்ஸ் நிம்மதி
லீட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், இந்திய அணி கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக பெறும் 7வது தோல்வியாகும்.
டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தபோது, இந்திய வீரர்கள் இரு இன்னிங்ஸிலும் அடித்த சதம் ஸ்டோக்ஸின் முடிவை கடுமையாக விமர்சிக்க வைத்தது. ஆனால், இங்கிலாந்தின் வெற்றி கேப்டன் ஸ்டோக்ஸுக்கு பெருத்த ஆறுதலையும், நிம்மதியையும் இப்போது கொடுக்கும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இங்கிலாந்து சாதனை
ஹெடிங்லி மைதானத்தில் 371 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்தது என்பது டெஸ்ட் வரலாற்றில் அந்த அணியின் 2வது அதிகபட்ச சேஸிங்காகும், இந்திய அணிக்கு எதிராக 2வது பெரிய சேஸிங்காகும். 2022ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக 378 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி மைதானத்தில் கடைசி நாளில் 350 ரன்களை இங்கிலாந்து அணி எட்டி வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் இதுவரை கடைசிநாளில் பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலியா மட்டுமே 404 ரன்களை 1948ம் ஆண்டு எட்டியிருந்தது. அதன்பின், இப்போது இங்கிலாந்து அணி 350 ரன்களை எட்டியுள்ளது.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியி்ல் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 835 ரன்களைச் சேர்த்து தோற்றுள்ளது. அதிகமான ஸ்கோர் செய்தும் இந்திய அணிக்கு ஏற்பட்ட 4வது தோல்வியாகும்.
இரு அணிகளும் சேர்ந்து இந்த டெஸ்டில் 1673 ரன்கள் சேர்த்தனர். இது இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாகும். இதற்கு முன் 1990ம் ஆண்டில் மான்செஸ்டரில் 1614 ரன்கள் சேர்க்கப்பட்டு அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1673 ரன்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது அதிகபட்ச ஸ்கோர், டிராவில் முடியாத டெஸ்டாகும்.
லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் 5-வது முறையாக சேஸ் செய்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக மட்டுமே 2வது முறையாக 350 ரன்களுக்கு மேல் இந்த மைதானத்தில் சேஸ் செய்துள்ளது இங்கிலாந்து.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு