Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
குறைவான மதிப்பெண் எடுத்ததாக அடித்த தந்தை : மரணமடைந்த சிறுமி – மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் என்ன?
படக்குறிப்பு, தலைமையாசிரியர் போஸ்லே, நெல்கரஞ்சிஎழுதியவர், அஷய் யேட்கேபதவி, பிபிசி மராத்திஒரு மணி நேரத்துக்கு முன்னர்
[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை, தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]
“நீங்களும் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற்றீர்கள். நீங்கள் எங்கு மாவட்ட ஆட்சியர் ஆனீர்கள்? நீங்களும் ஒரு ஆசிரியராகத்தான் மாறினீர்கள், இல்லையா?” – 12ஆம் வகுப்பு படிக்கும் சாதனா போஸ்லே தனது தந்தையிடம் இதை கூறினார்.
இதைக் கேட்டதும், தோண்டிராம் போஸ்லே கோபமடைந்து சாதனா போஸ்லேவை அடித்துவிட்டார். இதன் பின்னர் சாதனா போஸ்லே உயிரிழந்தார்.
நீட் தேர்வில் (மருத்துவ நுழைவுத் தேர்வு) குறைவான மதிப்பெண்கள் எடுத்தது தொடர்பாக பாப்லேகியில் தொடங்கிய இந்த விவாதம் விபரீத திருப்பம் எடுத்து, சங்லி மாவட்டத்தின் ஆட்பாடி தலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சாதனாவின் மரணத்தில் முடிந்தது.
நீட் பயிற்சித் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையில் முடிந்தது.
நெல்கரஞ்சியில் நடந்த இந்த சம்பவம், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மனநலம் தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
நெல்கரஞ்சியில் வசிக்கும் தோண்டிராம் போஸ்லே நன்கு படித்தவர். அவரது மனைவி நெல்கரஞ்சியின் முன்னாள் ஊராட்சித் தலைவராக இருந்தவர்.
தங்கள் மகளின் மரணத்திற்குப் பிறகு, சாதனாவின் தாய் ப்ரீதி போஸ்லே, தோண்டிராம் போஸ்லேவுக்கு எதிராக ஆட்பாடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். தோண்டிராம் போஸ்லேவுவுக்கு ஜூன் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்கள் மீது தேர்வுகளால் ஏற்படும் அழுத்தம், அந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் குடும்ப மற்றும் சமூக காரணிகள், இதில் பெற்றோரால் அறியாமல் செய்யப்படும் தவறுகள் மற்றும் மிக முக்கியமாக இதில் பெற்றோரின் பங்கு ஆகியவை குறித்து புதிதாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம்.
கல்வித்துறை நிபுணர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்? போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மனநலத்தைப் பேண என்ன செய்ய வேண்டும்? மனநல நிபுணர்களின் கருத்துகள் என்ன? இது குறித்து நாங்கள் வல்லுநர்களுடன் பேசினோம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறோம்.
பொறியியல் அல்லது மருத்துவத்தையே ஏன் பெற்றோர் அதிகமாக நாடுகிறார்கள்?
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஆனால், அவற்றில் சில ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது. இருப்பினும், இந்த நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கான பயிற்சி வகுப்புகள் நாடு முழுவதும் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு, லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலித்து ஆன்லைன் பயிற்சி வழங்கும் வகுப்புகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது.
இது குறித்து பேசிய கல்வித்துறை வல்லுநர் பாவுசாகேப் சாஸ்கர், “பெற்றோர்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நீட் அல்லது ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு தயாராவதற்கு பயிற்சி வகுப்புகளில் சேர்க்கிறார்கள். பத்தாம் வகுப்பில் பெறப்பட்ட அதிக மதிப்பெண்கள், பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பாடங்களிலோ அல்லது அதற்கு அடுத்த நுழைவுத் தேர்வுகளுக்கோ பெரிதாக உதவுவதில்லை. அவர்களது பிள்ளைகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ அல்லது ஐஐடி-களிலோ சேர வேண்டும் என்ற கனவுகளை வைத்திருக்கிறார்கள். முதலீடு, முதலீட்டால் கிடைக்கும் லாபம் போன்ற சந்தை மொழிகளை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பயன்படுத்துவது தெரிகிறது. தாங்கள் பணம் செலவு செய்தால், குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என வற்புறுத்துகின்றனர்,” எனத் தெரிவித்தார்.
இந்த மனநிலை பெற்றோருக்கு எங்கிருந்து வருகிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்இந்தக் கேள்விக்கு பதிலளித்த, புனேயில் ‘மனோப்ரம்மா’ என்ற மனநல நிறுவனத்தை நடத்தும் மருத்துவர் கிரண் சவான், “பல சமயங்களில் பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைகிறார்கள். அதனால், அவர்களின் பிள்ளைகள் தங்களின் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதைச் செய்யும்போது, தங்கள் பிள்ளைக்கு அந்தத் துறையில் திறமை உள்ளதா, ஆர்வம் உள்ளதா என்பதை ஆராய்வதில்லை. மாறாக, இந்த விஷயங்களை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள்,” எனத் தெரிவித்தார்.
“பொறியியல் அல்லது மருத்துவத்துறை வறுமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான பாதையாக பல பெற்றோருக்கு தோன்றுகிறது. இதனால், பிள்ளைகளின் கல்விக்காக பெரிய அளவில் முதலீடு செய்கிறார்கள். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 11, 12-ஆம் வகுப்பு கல்லூரிகள் ஒருபுறம் காலியாக இருக்கின்றன, மறுபுறம் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நிரம்பி வழிகின்றன. எனவே இந்தப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது மாணவர்கள் மீது ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படவேண்டிய தேவை இருக்கிறது,” என்கிறார் பாவுசாகேப் சாஸ்கர்.
பிள்ளைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அவநம்பிக்கை ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது என கல்வி மற்றும் உளவியல் தொடர்பாக ஆய்வு செய்யும் மருத்துவர் ஸ்ருதி பான்ஸே நம்புகிறார். “மருத்துவர், பொறியாளர் அல்லது அதிக பணம் சம்பாதிக்கும் தொழில் அல்லது வேலை மட்டுமே முக்கியமானவை என்று பெற்றோர்களின் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகள் அவர்களுக்கு விருப்பமான துறையில் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் பெரும்பாலும் வைப்பதில்லை. பல கல்லூரிகளில் அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன என நமக்கு தெரியும். அந்த கல்லூரிகளில் கலைப் பிரிவு பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம், மருத்துவர், பொறியாளர் போன்ற சில துறைகளின் மீதான ஈர்ப்பு மிக அதிகமாக இருக்கிறது,” என்கிறார் ஸ்ருதி பான்ஸே.
பிள்ளைகளுக்கான முதலீடு அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்குகிறது என மருத்துவர் ஸ்ருதி பான்ஸே கருதுகிறார்
“நர்சரி முதல் கல்லூரி வரை, மற்றும் பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு வசூலிக்கப்படும் பெரிய கட்டணங்களை எப்படியாவது செலுத்த பெற்றோர்கள் தயாராக இருக்கிறார்கள். இப்போது பணம் செலவழித்தாலும், கல்வி முடிந்து வேலை கிடைத்தவுடன் பிள்ளைகளுக்கு வெற்றி பாதைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பெற்றோர்களிடம் உள்ளது. ஆனால், இது பெற்றோர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அவ்வப்போது இந்த பொருளாதார முதலீட்டை பிள்ளைகளிடம் சுட்டிக்காட்டுகிறார்கள். இதனால், குழந்தைகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.” என்று அவர் தெரிவித்தார்.
பெற்றோர்களின் இந்த ‘முதலீட்டால்’ மாணவர்கள் மீது ஏற்படும் விளைவுகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்தற்போது மும்பை ஐஐடியில் பயிலும் ஒரு மாணவனின் பெற்றோர், “ஐஐடி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு நள்ளிரவில் என் மகன் திடீரென என்னிடம் வந்து அழ ஆரம்பித்தான். என்ன நடந்தது என்றே எனக்கு புரியவில்லை. அவனுடன் பேசியபோது, ஐஐடி நுழைவுத் தேர்வின் அழுத்தத்தில் அவன் இருந்ததை தெரிந்துகொண்டேன். நான் ஒருபோதும் என் எதிர்பார்ப்புகளின் பாரத்தை என் மகன் மீது சுமத்தியதில்லை, இருந்தபோதிலும் அவன் அழுத்தத்தில் இருந்தான். இறுதியாக, ‘நீ தோல்வியடைந்தாலும் நாங்கள் உன்னுடன் இருப்போம்’ என்று அவனிடம் கூறினோம்.” எனத் தெரிவித்தார்
இந்த உரையாடலுக்குப் பிறகு, அந்த மாணவன் உற்சாகமாக தேர்வுக்கு படித்தார், இரவு பகலாக உழைத்து, தற்போது மும்பை ஐஐடியில் பயின்று வருகிறார்.
அன்று அவன் தன் பெற்றோர்களிடம் அழுதிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? அவன் அழுத்தத்தில் இருப்பது அவனது பெற்றோர்களுக்கு தெரியாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? மாணவர்கள் மீது இந்த அழுத்தம் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர் கிரண் சவான் கூறுகிறார்.
“அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனிக்காமல் இந்த விஷயங்கள் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. சில மாணவர்கள் இந்த அழுத்தத்தை நேர்மறையாக கையாள்கிறார்கள், ஆனால் சில மாணவர்களுக்கு இதன் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன, மெல்ல மெல்ல அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படத் தொடங்குகிறது. பல சமயங்களில் பெற்றோர்கள் செய்த செலவுகளும் குழந்தைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன,” என்கிறார் கிரண் சவான்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.படிப்பின் அழுத்தமும், மாணவர் தற்கொலைகளும்
“இந்த சூழலில் பெற்றோர்கள் வலுவாக இருக்கிறார்கள், ஆனால் மாணவர்கள் பலவீனமாகிறார்கள். இந்த அழுத்தத்தை அமைதியாக தாங்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இதனால் மாணவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நீட் (NEET) மற்றும் ஜேஇஇ (JEE) தேர்வுகளுக்கு தயாராக ராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு சென்ற மாணவர்களில் பலர் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும்போது, பெற்றோர்கள் முன் தாங்கள் குற்றவாளிகள் போல உணர்கிறார்கள். அங்கு மாணவர்களின் தற்கொலை விகிதம் மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், பல நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர வர்க்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பயிற்சி மையங்களுக்கு தள்ளுகிறார்கள். நாளுக்கு நாள் இந்த பிரச்னை மேலும் தீவிரமடைந்து வருகிறது.” என பாவுசாகேப் சாஸ்கர் கருதுகிறார்.
நெல்கரஞ்சியில் நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், இந்த வயதுடைய, குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பல மாணவர்கள் மனச்சோர்வை சந்திக்கிறார்கள், மேலும் சில மாணவர்கள் தற்கொலையை கூட தேர்ந்தெடுக்கிறார்கள்.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (National Crime Records Bureau – NCRB) தரவுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 28, 2024 அன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
IC3 என்ற நிறுவனம் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து இந்த அறிக்கையை (‘Student suicides: An epidemic sweeping India’) வெளியிட்டது. இதில் உள்ள தரவுகளின்படி, மாணவர் தற்கொலைகளில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன.
மகாராஷ்டிராவில் 2022ஆம் ஆண்டு 1,764 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், 2021ஆம் ஆண்டு 1,834 மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர்.
மாணவர்கள் தற்கொலை செய்வதற்கு அவர்கள் மீது உள்ள அதிகப்படியான கல்வி அழுத்தம், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட தொழில் விருப்பங்கள், கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாதது, பாகுபாடு, ராகிங், குடும்பத்தில் மாறிவரும் சூழ்நிலைகள், உணர்ச்சி ரீதியான அலட்சியம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
போட்டித் தேர்வு தயாரிப்பில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
படக்குறிப்பு, கோப்புப்படம்தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக வேண்டும் என்று விரும்புவதற்கு பல சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கலாம். பல சமயங்களில் பிள்ளைகள் மீது திணிக்கப்பட்ட தொழில் விருப்பங்களுக்கு காரணங்கள் பெற்றோர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில், காணப்படலாம்.
இது குறித்து பேசிய மருத்துவர் கிரண் சவான் கூறுகிறார், “எந்தவொரு படிப்பையும் பிள்ளைகள் மீது திணிப்பதற்கு முன், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அதை செய்ய விருப்பம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தத் தேர்வை எழுத வேண்டும், அதற்குப் பிறகு என்ன தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பது அவர்களுக்கு தெரியுமா, மற்ற விருப்பங்களை ஆராய வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும்.”
“பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் நன்கு தெரியும். ஆனால், பல சமயங்களில் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. பெற்றோர்கள் நேர்மையாக இதை ஆராய்ந்து, பின்னர் முடிவு எடுக்க வேண்டும். இதற்கு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உரையாடல் மிகவும் முக்கியமானது,” என மருத்துவர் கிரண் மேலும் கூறுகிறார்,
12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோராக இருப்பது பலருக்கு அச்சுறுத்தும் சவாலாக இருக்கலாம். மாணவர்கள் இளம் வயதை அடையும் இந்த காலகட்டத்தில், தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் ஒரே நேரத்தில் புதிய புதிய சவால்களை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்களுடனான உரையாடல் தடைபட்டால், தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பாவுசாகேப் சாஸ்கர் கூறுகிறார், “மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் உண்மையாக கவலைப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ‘நம் பிள்ளைகளுக்கு என்ன ஆகும்?’ என்ற பாதுகாப்பின்மை பெற்றோர்களின் மனதில் இருக்கிறது. அது இயல்பானது. ஆனால், இந்த குழப்பத்தின் நேரடி தாக்கம் மாணவர்கள் மீது ஏற்படுகிறது. இது குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.”
“அதிகரித்து வரும் திரை நேரம் (Screen time), கல்வி சுமை, ஈர்ப்பால் உருவாகும் பாலியல் பிரச்னைகள், வன்முறை மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆளாகும் ஆபத்து போன்ற பல விஷயங்கள் உள்ளன. மாணவர்கள் மன அழுத்தத்திலும், துன்பத்திலும் உள்ளனர். ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியிலும் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், அரசு இதை புறக்கணித்து வருகிறது,” என்று சாஸ்கர் புகார் கூறுகிறார்.
தங்களுக்கு விருப்பமானதை செய்வதற்கு குழந்தைகளுக்கு சுதந்திரம் இருக்கவேண்டும் என ஸ்ருதி பன்ஸே நம்புகிறார்.
“ஒரு குறிப்பிட்ட தேர்வில் ஒரு குழந்தை தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அவர்கள் முன் உள்ள அனைத்து வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டதாக அர்த்தம் அல்ல. இந்த நாட்களில் குழந்தைகள் முன் பல வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தைகள் அவர்கள் விரும்பும் துறையில் ஒரு தொழிலை தொடரவும் மனந்தளராமல் இருக்கவும் அவர்களை அனுமதிப்பது முக்கியமானது.”
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.