திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள்  மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிப்புகளை பாதாகைகளில் படங்களின் மூலமாகவும் வாசகங்கள் மூலமும் காட்சிப்படுத்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை கிழக்கு  மாகாணத்தில்  பாதிக்கப்பட்ட மக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கம், சிவில் அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.