யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் வியாழக்கிழமை (26.06.25) இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு 45 நாட்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

அந்நிலையில் அகழ்வு பணிக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் , அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் , நாளைய தினம் வியாழக்கிழமை முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.