பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அதிபர் டிரம்ப்எழுதியவர், சீன் செடன்பதவி, பிபிசி செய்திகள்16 நிமிடங்களுக்கு முன்னர்

ஜூன் 13 முதல், இஸ்ரேல் இரானின் ராணுவ உள்கட்டமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது.

திங்கட்கிழமை தொடங்கி அடுத்து 24 மணி நேரத்தில், இன்னும் வேகமாக பல நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின.

ஒரு அமெரிக்க விமானப்படைத் தளம் தாக்குதலுக்கு உள்ளானது. அமெரிக்கா இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் முறிந்து விடும் நிலையில் இருந்தது.

இப்படித்தான் அந்த நாள் முழுதும் நிலையற்ற சூழல் காணப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

‘ பாதுகாப்பாக இருங்கள் ‘

பட மூலாதாரம், USAF

படக்குறிப்பு, கத்தாரில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க ராணுவத் தளத்தின் புகைப்படம் . இந்தப் புகைப்படம் 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.23 ஜூன் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 தெஹ்ரான்

மத்திய கிழக்கை பாதிப்புக்கு உள்ளாக்கும் மோதல் வளைகுடாவிற்கும் விரைவில் பரவலாம் என்பதற்கான முதல் அறிகுறியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு, அமைதியான மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அமெரிக்க அரசு, “நீங்கள் இருக்கும் இடத்திலேயே தங்குங்கள்” என பரிந்துரை செய்தது. இது “அதிக எச்சரிக்கைக்காக” எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த செய்தி வெளியான சிறிது நேரத்தில், பிரிட்டனும் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கத்தாரில் அமெரிக்கா மீது பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பு, இரானுக்கு எப்போதும் இருந்துள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு வெளியே அமைந்துள்ள பெரிய அளவிலான அல்-உதெய்த் ராணுவத் தளத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமான நடவடிக்கைகள் அங்கிருந்தே திட்டமிடப்படுகின்றன.

மலைக்கு அடியில் அமைந்துள்ள இரானின் மதிப்புமிக்க ஃபோர்டோ செறிவூட்டல் தளம் உட்பட, இரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது, கடந்த வார இறுதியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இரானில் உள்ள தலைவர்கள் அச்சுறுத்தியிருந்தனர்.

இரானுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமனெயி பதுங்கு குழியில் தங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அங்கிருந்து, பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாயத் தளங்களில் ஒன்றைத் தாக்க வேண்டும் என்று அவர் ஒரு உத்தரவை வெளியிட்டதாக தெரிகிறது.

‘உண்மையான அச்சுறுத்தல்’

12:00 வாஷிங்டன் டிசி / 17:00 லண்டன் / 19:00 டெல் அவிவ் / 19:30 தெஹ்ரான்

கத்தாரின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் அறிவித்தது.

தோஹாவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பயணிகள் விமானங்களை அவசரமாகத் திருப்பி அனுப்பத் தொடங்கினர், மேலும் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றிற்குச் செல்லும் விமானங்கள் வளைகுடாவின் வேறு இடங்களில் தரையிறங்கத் தொடங்கின.

பின்னர் அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது இரானின் ஏவுகணை தாக்குதல் நடை பெறலாம் என்று ஒரு “உண்மையான அச்சுறுத்தல்” இருப்பதாக பிபிசி அறிந்து கொண்டது.

கத்தார் திசையை நோக்கி ஏவுகணைகள் குறிவைத்து வருவதைக் கண்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் அவரது மூத்த ஜெனரலும் நிலைமையைக் கண்காணிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.

ஒரு மணி நேரத்திற்குள் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டன. அதன் ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்களுக்கு மேலே உள்ள வானம், இரானிய ஆயுதங்களை இடைமறித்துத் தாக்கிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் உருவான ஒளிப்பாதைகளால் நிரம்பியிருந்தது.

‘பலம் அல்ல, பலவீனம்’

13:00 வாஷிங்டன் டிசி / 18:00 லண்டன் / 20:00 டெல் அவிவ் / 20:30 தெஹ்ரான்

இரான் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. சிறிது நேரத்தில், இரானின் புரட்சிகர காவலர் படையும் அச்செய்தியை உறுதிப்படுத்தியது.

“இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பலம் அல்ல, மாறாக பலவீனங்கள்” என அது தெரிவித்தது. ஆனால் அந்த தாக்குதல் விரைவில் முடிவடைந்தது.

அமெரிக்காவிற்கு முன்பாக, கத்தார் அந்தத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றியது. தாக்குதலின் இலக்கு அதன் மண்ணில் உள்ள அமெரிக்க தளம் தான் என்றாலும், அதன் இறையாண்மை இந்த “தீவிரமான தாக்குதல்” மூலம் மீறப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.

ஆனால் முக்கியமாக, தோஹாவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அந்தத் தளம் காலி செய்யப்பட்டதால், தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை.

அதே நேரத்தில், இரான் உச்ச தலைவரின் எக்ஸ் தளப்பதிவில், ஒரு சர்ச்சைக்குரிய படம் பகிரப்பட்டது. அந்தப் படம், ஒரு அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்படுவதும், ஒரு கிழிந்த அமெரிக்கக் கொடி எரிவதையும் சித்தரித்தது.

இருப்பினும், அழிவைப் பற்றி எந்த அறிவிப்பையும் கொடுக்காமல், “நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை”என்று அவர் பதிவிட்டார்.

அதனையடுத்து, இரான் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவும் கத்தாரும் முன்கூட்டியே அறிந்திருந்திருக்கலாம் எனத் தோன்றியது.

வெளிப்புற ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில், இந்தத் தாக்குதல் இரான் தலைவர்கள் தங்களின் மரியாதையைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆனால் மோதலைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றியது.

அமெரிக்கர்களுக்கு எதிராக தாங்கள் பழிவாங்கியதாக தங்களது மக்களிடம் கூற இரானுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த எதிரியை நேரடியாகச் சண்டைக்கு இழுக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், அவர்கள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தாமல் அந்த தாக்குதலை மேற்கொண்டனர்.

பிறகு பதற்றம் தணிவதற்கான சூழல் உருவாவதைப் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் சமூக ஊடகங்களில் எப்போது தோன்றுவார் என்பதை எதிர்பார்த்து உலகம் காத்திருந்தது.

‘அமைதிக்கான நேரம்’

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜூன் 15 அன்று தெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஷரன் எண்ணெய் கிடங்கு உட்பட இரான் முழுவதும் உள்ள ராணுவ, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது.16:00 வாஷிங்டன் டிசி / 21:00 லண்டன் / 23:00 டெல் அவிவ் / 23:30 தெஹ்ரான்

“பலவீனமானது.” “எதிர்பார்க்கப்பட்டது.” “திறம்பட எதிர்கொள்ளப்பட்டது.”

இரானின் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் இப்படித்தான் விவரித்தார். ஆனால் அதன் பிறகு அவர் வெளியிட்ட செய்திகளில் சமரசத்துக்கான தொனி காணப்பட்டது.

தாக்குதல் குறித்து “எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக” நன்றி என, இரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், “அவர்கள் தங்களது கோபத்தை வெளியிட்டுவிட்டனர்” என்று கூறினார்.

“ஒருவேளை இரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நகரலாம். இஸ்ரேலும் அவ்வாறே செய்ய நான் உற்சாகமாக ஊக்குவிப்பேன்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, இரான் அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் இரானுக்கு எதிராக இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

கடந்த காலங்களில் உலகிற்கு மிகப்பெரிய ஆபத்தாகவும், தீய சக்தியாகவும் அந்த நாட்டை விவரித்திருந்த டிரம்ப், சண்டை நிறுத்தம் குறித்து, அதன் தலைவர்களிடம் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் வெளியிட்ட தொடர் பதிவுகளை நிறுத்திவிட்டு, “உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்!”என்று பின்னர் பதிவிட்டார் டிரம்ப்.

’12 நாள் போர்’

பட மூலாதாரம், Maxar

படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய பின்னர், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு வெள்ளை மாளிகை அழுத்தம் கொடுத்தது.18:00 வாஷிங்டன் டிசி / 23:00 லண்டன் / 01:00 டெல் அவிவ் / 01:30 தெஹ்ரான்

அமெரிக்கா, இரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் திரைக்குப் பின்னால் பரபரப்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரான் உடன் நடைபெற்ற மோதலில் சிறிது காலம் இணைந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாகப் பேசினார். இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில் நடந்தாலும், சண்டையை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தான் அதன் செய்தி எனத் தெளிவாக தெரிந்தது.

இதற்கிடையில், டிரம்பின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், அவரது தலைமை சர்வதேச பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப்பும், இரானியர்களை நேரடியாகவும் ரகசிய ராஜ்ஜீய வழிகளிலும் அணுகினர்.

மத்திய கிழக்கில் எளிதில் கிடைக்காத ஒன்றாக இருந்தாலும், டிரம்ப் மிகவும் மதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க, அமெரிக்காவில் இருந்து அவரது குழு அவசரமாக செயல்பட்டது.

அந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றுவிட்டது என்ற தகவல்களும் அதற்கெதிரான மறுப்புகளும் பரவத் தொடங்கின. ஆனால் மெதுவாகவும் உறுதியாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளிவந்தவுடன், நிலைமை முன்னேறத் தொடங்கியது.

பின்னர், பிஎஸ்டி நேரப்படி காலை 11:00 மணிக்குப் பிறகு, அதிபர் மீண்டும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். “அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று அவரது செய்தி தொடங்கியது.

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முழுமையான மற்றும் முழுமையான சண்டை நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். “செயல்பாட்டில் உள்ள இறுதிப் பணிகள்”நிறைவடைய ஒரு சலுகை காலம் வழங்கப்படும், அதன் பின்னர், அந்த ஒப்பந்தம் ஆறு மணி நேரத்தில் அமலுக்கு வரும்.

இனி, இந்த மோதல் “12 நாள் போர்” என்று அழைக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

அங்கிருந்து ஆறாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மத்திய கிழக்கில், அடுத்த நாள் விடியத் தொடங்கியது.

‘ஏவுகணைத் தாக்குதல்களின் கடைசி சுற்று’

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இஸ்ரேலின் பீர்ஷெபாவில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.22:00 வாஷிங்டன் டிசி / 03:00 லண்டன் / 05:00 டெல் அவிவ் / 05:30 தெஹ்ரான்

இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்ல மக்கள் உத்தரவிடப்பட்டனர். இரானிலிருந்து ஏவுகணைகள் வந்துகொண்டிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்தன.

60 நிமிடங்களுக்குள், இரான் மூன்று சுற்றுகளாக ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்தது. காலைக்குப் பிறகு, மேலும் பல ஏவுகணைகள் பாய்ந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இரானிய ஏவுகணை நேரடியாக தாக்கியது. பாதுகாப்பு அறையில் தஞ்சம் புகுந்திருந்த மூன்று பேர் உட்பட, நால்வர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இரான், தங்களின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றை குடியிருப்புகள் மீது பயன்படுத்தியதாக இஸ்ரேலின் பிரதமர் குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில், இரானிய ஊடகங்கள், வடக்கு நகரமான அஸ்தானே-யே அஷ்ரஃபியேவில் இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்திய கடுமையான தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தெரிவித்தன. உயிரிழந்தவர்களில் அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபேரியும் இருப்பதாக கூறப்படுகிறது.

நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் “முற்றிலும் அழிக்கப்பட்டன.அங்கு ஏற்பட்ட வெடிப்பால் சுற்றியுள்ள வீடுகளும் பல சேதமடைந்தன” என்று பிராந்திய துணை ஆளுநர் கூறினார். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில், வீடுகளால் சூழப்பட்ட ஒரு தெருவில் சிதறிக் கிடந்த இடிபாடுகள் தெளிவாகக் காணப்பட்டன.

பட மூலாதாரம், BBC Persian

படக்குறிப்பு, இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இரானின் காட்சி.சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதற்குமுன், இஸ்ரேல் ‘கடைசி சுற்று’ ஏவுகணைகளை ஏவியதாக இரான் குற்றம் சாட்டியது.”

இஸ்ரேலிய ராணுவம் இரவு முழுவதும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக பின்னர் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், இராக் அரசு, ட்ரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள தளங்களை குறிவைத்ததாகக் கூறியது. இரானிய ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள் இராக்கில் செயல்பட்டு வருகின்றன. எந்த தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், கடைசி நிமிடம் வரை மோதல் தொடர்ந்து நடைபெற்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

‘ சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது’

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் திங்கட்கிழமை இரவு படம்பிடிக்கப்பட்டன.01:00 வாஷிங்டன் டிசி / 06:00 லண்டன் / 08:00 டெல் அவிவ் / 08:30 தெஹ்ரான்

“சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்!’ என டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இஸ்ரேலிய அரசாங்கம் சண்டை நிறுத்த ஏற்பாடுகளை முறையாக ஏற்றுக்கொண்டது.

இரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை அழித்ததன் மூலம், இஸ்ரேல் தனது நோக்கங்களை நிறைவேற்றியதாகவும், இப்போது அது ‘உலக வல்லரசுகளின்’ வரிசையில் இணைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்தத்தை ஏற்க இரான் தயாராக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி, நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் தனது தாக்குதல்களை உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:00 மணிக்குள் நிறுத்தினால், “அதற்குப் பிறகு எங்கள் பதிலடியை தொடர எங்களுக்கு எந்தவித எண்ணமும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் அந்த சண்டை நிறுத்தம் ஆபத்தில் இருப்பது போல் தோன்ற அதிக நேரம் ஆகவில்லை.

இரானிலிருந்து ஏவுகணை பாய்ந்ததையடுத்து, தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இரான் அந்த கூற்றுகளை மறுத்தபோதிலும், “தெஹ்ரானின் மையத்தில் உள்ள ஆட்சியின் இலக்குகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களுக்கு” உத்தரவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், “தெஹ்ரான் அதிர்ச்சியடையும்” என்று எச்சரித்தார் வலதுசாரி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச்.

அதனையடுத்து, சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குள், டிரம்ப் விரைவாக ஏற்படுத்திய ஒப்பந்தம் சீர்குலையத் தொடங்கியது போல் தோன்றியது.

இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானின் தலைநகரை நோக்கிச் சென்ற நிலையில், “அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் வீசினால், அது ஒரு பெரிய ஒப்பந்த மீறலாகும். உங்கள் விமானிகளை உடனே நாட்டுக்கு அழைத்து வாருங்கள்!” என்று டிரம்ப் மீண்டும் பதிவிட்டார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’ இஸ்ரேலும் இரானும் அமைதியடைய வேண்டும்’

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப்07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 தெஹ்ரான்

வாஷிங்டன் டிசியில் மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும், அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் நடந்து வந்தார். அங்கு ஒரு ஹெலிகாப்டர் அவரை நேட்டோ உச்சிமாநாட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது.

அறிவிப்புகள், கூற்றுகள் மற்றும் மறுப்புகளால் குழப்பமடைந்த இரவிற்குப் பிறகு, அதிபர் டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க செய்தியாளர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இஸ்ரேலும் இரானும் சண்டை நிறுத்தத்தை மீறிவிட்டதாக டிரம்ப் அவர்களிடம் கூறினார். ஆனால் ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஜெட் விமானங்களைத் திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதைக் குறிப்பிட்ட டிரம்ப், “ஒரு [இரானிய] ஏவுகணை இருந்தது, அது காலக்கெடுவுக்குப் பிறகு கடலில் ஏவப்பட்டதாக நான் நினைக்கிறேன். இப்போது இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கச் செல்கிறது. இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

இரானிய ஏவுகணை “ஒருவேளை தவறுதலாக” ஏவப்பட்டிருக்கலாம் என்றும், அது “தரையிறங்கவில்லை” என்றும் டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்ப் கோபமாகக் காணப்பட்டார்.

ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், “நான் இதற்கு முன்பு பார்த்திராத” அளவிலான தாக்குதல்களை நடத்தியதற்காக, “இஸ்ரேலிடம் நான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

“இரானைக் குறித்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை,” என்றும் டிரம்ப் கூறினார்.

டிரம்ப் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, இஸ்ரேல் மற்றும் இரான் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்தினார். ‘இவர்கள் இவ்வளவு நாட்களாக சண்டையிட்டு வருகிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை’ என்று அவர்களைக் கடுமையாகச் சாடினார்.

நெதர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் மூலம் மேரிலாந்தில் உள்ள ராணுவத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் பயணிக்கவிருந்தார்.

விமானத்தில் ஏறிய பிறகு, டிரம்ப் நெதன்யாகுவை அழைத்தார். அந்த உரையாடல் மிகவும் பதற்றமாக இருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரேலிய பிரதமருடன் அதிபர் “மிகுந்த உறுதியுடனும் நேரடியாகவும்” பேசியதாக வெள்ளை மாளிகை வட்டாரம் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தது. நெதன்யாகு, சூழ்நிலையின் தீவிரத்தையும் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திய கவலைகளையும் புரிந்து கொண்டார்” எனக் கூறப்பட்டது.

இரானைத் தாக்க தயாராக இருந்த இஸ்ரேலிய விமானங்களை திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் கூறியதாக, விமானப் பயணத்தின் போது டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

இரானில் உள்ள தலைவர்களைப் பொறுத்தவரை, அணு ஆயுதத்தை உருவாக்குவது, இப்போது அவர்களின் மனதில் “கடைசி விஷயமாக”இருக்கும் என்று கூறினார் டிரம்ப்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு