இரான் அணுசக்தி கட்டமைப்பு முற்றிலும் அழியவில்லையா? அமெரிக்காவின் தாக்குதல் பற்றி கசியும் புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் அணுசக்தி திட்டம் “அழிக்கப்பட்டுவிட்டது” என்ற டிரம்ப் நிர்வாகத்தின் கூற்றுகளில் அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடு சந்தேகம் எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களை “பதுங்கு குழி” குண்டுகள் மூலம் அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் இரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் “அப்படியே” இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

“இரண்டு அணுசக்தி நிலையங்களுக்கான நுழைவு வாயில்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன, சில உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன, ஆனால் நிலத்தடியில் ஆழமாக உள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன.” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் இரான் அணுசக்தி திட்டத்தை “சில மாதங்கள்” பின்னுக்குத் தள்ளியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது சேதங்களை சரி செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைப் பொருத்தது என்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரான் கையிருப்பில் இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்னரே வேறிடங்களுக்கு நகர்த்தப்பட்டுவிட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

புலனாய்வுத் தகவல்கள் கசிவு – டிரம்ப் விமர்சனம்

இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்த உளவுத்துறை மதிப்பீடு குறித்த செய்திகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்க ஊடகங்களையும் மற்றும் அவர்கள் வெளியிட்ட தகவல்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

“போலி செய்தி சிஎன்என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றின் மாண்பை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன!” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

‘தேசத்துரோகம்’ என்று சாடும் டிரம்ப் சிறப்புத் தூதர்

இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து உளவுத்துறை மதிப்பீடு கசிந்திருப்பதை “தேசத் துரோகம்” என்று மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.

“இது கொடியது, இது துரோகம். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்களே பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.

அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் “அழிக்கப்பட்டன” என்பதில் “சந்தேகமில்லை” என்றும் அவர் கூறினார்.

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஃபாக்ஸ் டிவிக்கு விட்காஃப் அளித்த நேர்காணலின் ஒரு கிளிப்பை இடுகையிட்டு அவரது கருத்துகளை டிரம்ப் எதிரொலித்தார்.

“ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது விதானத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது!” விட்காஃப் கூறியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்:

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு