Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ்த் தேசிய பேரவை
2025.06.24
ஊடக அறிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதனை கண்டறிவதற்காக சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்திவரும் நிலையில் தற்போது செம்மணியில் மேலுமொரு மனிதப் புதைகுழி கணடறியப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் சிறீலங்கா ஆயுதப்படைகளாலும் துணை இராணுவக் குழுக்காளாலும் கைது செய்யப்பட்டும் மற்றும் அவர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அல்லது அவர்களிடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறும் மற்றும் இலங்கை அரச படைகளால் நடத்தப்படும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது பெயர் பட்டியல்களை வெளியிடுமாறும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அமைப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளபோதும் இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காணாமல் போனோரின் அலுவலக உருவாக்கமானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான சிறீலங்கா அரசின் கண்துடைப்பு நடவடிக்கையே என்பதனை அந்த அமைப்பின் செயற்பாடுகள் நிரூபித்துள்ளது. இவ் அலுவலகமானது உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளது நடைமுறைத் தேடலைத் தாமதப்படுத்துகின்றது.
நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் தாமதத்தின் விளைவாக குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையால், வலிந்து காணாமல் ஆக்குவதற்கான தலைமையை வழங்கியவர்களும் அதற்கான சித்தாந்த ரீதியான ஆதரவை வழங்கியோரும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் அமரக்கூடியதாகவும் சுதந்திரமாக நடமாடக்கூடியதாகவுமுள்ளது. சிறீலங்காவின் நீதித்துறையும் காவல்துறையும் இனவாதமும் மதவாதமும் நிறைந்ததாகவும், அரசியல் மயப்பட்டதாகவும் நம்பகத்தன்மையிழந்தும் காணப்படுகின்றது. அதேவேளை இக்குற்றங்களுடன் தொடர்புடைய சிறீலங்காவின் ஆயுதப்படைத் தளபதிகள் மற்றும் உளவுப்பிரிவின் அதிகாரிகளுக்கு பதவிஉயர்வுகளும், வெகுமதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் (ஐஊPPநுனு) குறிப்பிடப்பட்ட – தெரிந்துகொள்ளும் உரிமை, நீதிக்கான உரிமை, இழப்பீடு பெறுவதற்கான உரிமை, குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதம் போன்றவை தமிழர்களுக்கு வெற்று வார்த்தைகளாகவே இன்றும் உள்ளன.
உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நீண்ட கால தேடலுடனான போராட்டம் மிகவும் வேதனையானதாகும். தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதிகோரிப்போராடும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், சிறிலங்காவின் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு, இராணுவத்தினராலும் அவர்களுக்குத் துணைபோகும் பொலிஸாராலும் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி நீதி கோரிய போராட்டத்துடன் இணைந்திருந்த சுமார் 80 க்கும் அதிகமானவர்கள், தங்கள் உறவுகளின் உண்மை நிலையை அறியாமலேயே மரணமடைந்துள்ளார்கள்.
2015 ஆம் ஆண்டில் இலங்கை கையெழுத்திட்ட – அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் 24 ஆவது பிரிவு, காணாமற்போன நபரை மட்டுமல்ல, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக வரையறுக்கின்றது.
போர் முடிவடைந்து 16 வருடங்களாகியும் சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக – பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தண்டனையின்மையால் பாதிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கவில்லை.
இதனால், இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாகவோ விசாரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வருகைதந்துள்ள நிலையில் – தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி அணையா விளக்கு என்னும் பெயரில் சர்வதேசத்திடம் நீதிகோரும் போராட்டம் ;மக்கள் செயல்’ என்னும் தன்னார்வ இளையோர் அமைப்பினால் யாழ் செம்மணி வளைவுப்; பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழின அழிப்புக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை முன்னெடுக்கவும் சர்வதேச குற்றவியில் நீதிமன்றுக்கு இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை பாரப்படுத்த ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம். . குறிப்பாக நாளை 25.06.2025 காலையில் ‘மக்கள் செயல்’; அழைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பேராதரவு வழங்கி கலந்து கொளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர் – தமிழ்த் தேசிய பேரவை