Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மத்திய கிழக்கு நாடுகளில் தமிழர்களின் நிலை என்ன? – குண்டு வீச்சு, போர் பதற்றங்களுக்கிடையே வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான அல்-உடெய்ட்டை இரான் திங்கள்கிழமை இரவு தாக்கியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பெரிய ராணுவ தளம் இதுவே. இதையடுத்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சற்று பதற்றம் நிலவியது.
இந்த தாக்குதலுக்கு முன்பாக கத்தார் தனது விமான சேவைகளை நிறுத்தியிருந்தது. இந்த தாக்குதல் காரணமாக, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளும் தங்கள் விமான சேவைகளை நிறுத்தியிருந்தன. இரான் நடத்திய தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
தற்போது கத்தார் மற்றும் பிற நாடுகளின் விமான சேவைகளும் மீண்டும் இயங்கி வருகின்றன. எனினும், கத்தாரில் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழல் குறித்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கத்தார்
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் வசிக்கும் வைஷ்ணவி திங்கள்கிழமை இரவு குண்டுவீச்சுகளை தனது வீட்டின் ஜன்னலில் வழியே பார்க்க முடிந்தது என்றார். குண்டுகளின் சத்தமும், அதன் அதிர்வுகளையும் கூட உணர முடிந்தது என்றார். “மாலை 7.30 மணி இருக்கும். திடீரென ஜன்னல்கள் ஆடுவதை கவனித்தோம். ஜன்னல் அருகே சென்ற எனது கணவர் ‘போர் போர்’ என்று கத்தினார். விண்ணில் வெளிச்சத்துடன் கூடிய குண்டுகள் வீசப்படுவதை காண முடிந்தது. சிறிது நேரம் ஒரு திசையிலிருந்து அவை வந்துக் கொண்டிருந்தன, அதன் பிறகு எதிர் திசையிலிருந்து வந்தன. அவ்வபோது ஏதோ வெடித்தது போன்ற சத்தமும், அதே நேரத்தில் அதிர்வுகளையும் வீட்டில் உணர முடிந்தது. சுமார் 45 நிமிடங்கள் விண்ணில் இதை பார்க்க முடிந்தது” என்றார்.
இந்த தாக்குதல் குறித்த எந்த தகவலும் மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்கிறார் அவர். “பொது இடங்கள் எதுவும் மூடப்படவில்லை, பொதுமக்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. ஒரு வீடியோவில் ஷாப்பிங் மாலில் இருந்த மக்கள் இந்த சத்தம் கேட்டு, வெளியே ஓடி வருவதை காண முடிந்தது. தாக்குதலுக்கு பிறகும் எந்த அறிவிப்பும் இல்லை. சில மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. மக்கள் மீண்டும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். செவ்வாய்கிழமை எப்போதும் போல் எல்லா அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. பள்ளி தேர்வுகள் மட்டும் ஒரு இடத்தில் ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்” என்றார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
எனினும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளில் நிரம்பி வழிந்தனர் என்கிறார் வைஷ்ணவி. “பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்ற தைரியம் இருந்தாலும், மற்றவர்களை பார்த்து, அடுத்த சில நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள கடைக்குச் சென்றோம். தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதே சவாலாக இருந்தது. இரண்டு கடைகளில் கிடைக்காமல் மூன்றாவது கடையில் தான் வாங்க முடிந்தது. தயிர், பால், ரொட்டி,பாஸ்தா என அனைத்தையும் மக்கள் வாங்கிக் கொண்டிருந்தனர், கடைகளில் நிற்பதற்கு கூட இடம் இல்லை” என்றார். எனினும் உடனே நாடு திரும்ப வேண்டும், அல்லது உயிருக்கு ஆபத்து என்ற சூழல் நிலவவில்லை என்றும், ஏதேனும் ஒரு சூழலில், பாதுகாப்பான இடத்துக்கு மாற வேண்டும் என்று அரசு சொன்னால், உடனே புறப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கத்தார் இரானுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை கொண்டுள்ள அதே வேளையில், அமெரிக்காவுடனும் தனது உறவை மேம்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கத்தார் சென்றிருந்த போது இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே நேரம் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் கத்தார் மத்தியஸ்தம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாவிலும் கத்தாரிலும் தொழில் செய்து வரும் அப்துல் ஹாலிர் திங்கள்கிழமை இரவு தாக்குதல் தமிழ் குடும்பங்கள் மத்தியில் சற்று பதட்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார். “கத்தார் அரசின் உள்துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் அறிக்கை வெளியிடும் வரை சற்று பதற்றம் நிலவியது. இங்குள்ள தமிழ் சமூகம் மிகவும் நெருக்கமானது என்பதால், ஒருவருக்கு ஒருவர் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தகவல் பரிமாறிக்கொண்டோம்” என்றார்.
படக்குறிப்பு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அப்துல் ஹாலிர் கத்தாரில் ஏழு ஆண்டுகளாக வசிக்கும் *சந்திரனும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டில் அதிர்வுகளை உணர முடிந்தது என்று தெரிவித்தார். “மாலையில் திடீரென எனது வீட்டின் பின்பக்கம் உள்ள கதவுகள் பயங்கரமாக ஆட ஆரம்பித்தன. வெளியே சென்று பார்த்த போது, வானத்தில் குண்டுகள் வீசப்படுவதை காணமுடிந்தது. எதிர் திசையிலும் குண்டுகள் வீசப்படுவதை காண முடிந்தது. எனது வீடு அமெரிக்க ராணுவ தளத்திலிருந்து வெகு தொலைவில் கிடையாது. எனது குடியிருப்பில் இருந்த மற்ற இந்தியர்கள் தங்கள் உடைமைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு குடும்பங்களுடன் உடனே புறப்பட்டுச் செல்ல தயாராக இருந்தனர்” என்றார். எனினும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும், பதற்றம் ஏதும் இல்லை எனவும் *சந்திரன் தெரிவித்தார்.
குவைத்
குவைத்தில் ஓட்டுநராக 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பீர் மரைக்காயர் போர் பதட்டம் காரணமாக விமான டிக்கெட் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளன என்கிறார். “வழக்கமாக குவைத்திலிருந்து திருவனந்தபுரம் செல்ல 80 முதல் 110 தினாருக்கு டிக்கெட்கள் விற்கப்படும். ஆனால் நேற்று 300 தினாருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது” என்கிறார்.
இரானில் உள்ள அணு திட்ட இடங்களை அமெரிக்கா தாக்குவதற்கு முன்பாக குவைத் அரசு, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது என்கிறார் அவர். “ஏதேனும் கசிவு இருப்பதாக அறிவிக்கப்பட்டால் பொது மக்கள் 48 மணி நேரங்களுக்கு வெளியே வரக்கூடாது, வெளியில் உணவை வாங்கி சாப்பிடக் கூடாது, தண்ணீரை பாட்டில்களில் இருந்து மட்டுமே பருக வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மக்களுக்கு எல்லா தகவல்களும் முன்கூட்டியே வழங்கப்படுவதால் அரசின் மீதான நம்பிக்கை இருக்கிறது. குவைத்தில் நான் இருந்த 20 ஆண்டுகளில் போர் குறித்த பதற்றம் ஏதும் இருந்ததில்லை. திங்கள்கிழமை இரவும் இங்கு இயல்பாகவே இருந்தது” என்கிறார்.
படக்குறிப்பு, குவைத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பீர் மரைக்காயர் ஐக்கிய அரபு அமீரகம்
அபு தாபியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசிக்கும் பிரவீனா அமெரிக்க ராணுவ தளம் குறி வைக்கப்படுவது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார். “கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் தாக்கப்பட்ட போது, துபாயில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளமும் அடுத்த தாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இந்த போர் சூழல் தொடங்கியதிலிருந்தே அந்த பயம் உள்ளது. கத்தார் தாக்குதலை பார்த்த பிறகு, ஊரிலிருந்து அழைப்பவர்களும் பத்திரமாக இருங்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனினும், உடனே நாடு திரும்ப வேண்டும், அல்லது பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கும் அளவு பதற்றம் இல்லை. நான் தங்கியிருப்பது அந்த ராணுவ தளத்திலிருந்து மிகவும் தொலைவு, ஒரு வேளை அருகில் இருப்பவர்களுக்கு பதற்றம் சற்று அதிகமாக இருக்கலாம்” என்றார்.
யேமன்
யேமன் நாட்டில் 1999-ம் ஆண்டு முதல் வசித்து வரும் விமான சேவை ஆலோசகர் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை என்கிறார். “யேமனில் விமான நிலையம் தாக்கப்பட்ட போதும், அது மிகவும் குறிப்பான தாக்குதலாக இருந்தது. விமான நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் இருந்தவர்கள் கூட அங்கிருந்து வெளியேறவில்லை. அல்-ஹூத்தி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது வரை ஒரு இந்தியர் கூட உயிரிழக்கவில்லை. 2016-ல் உள்நாட்டு போர் உச்சத்தில் இருந்த போதும், இந்தியர்கள் குறிவைக்கப்படவில்லை. போர் சூழலிலும் சம்பளம் வழங்குவதில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 13 நாடுகள் யேமனை எதிர்த்து போரிட்ட போதும், நாங்கள் பாதுகாப்பாகவே இருந்தோம். சவுதி அரேபியாவுடன் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், அங்கிருந்து பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைத்துக்கொண்டு தான் இருந்தன” என்றார்.
படக்குறிப்பு, யேமனில் 25 ஆண்டுகளாக வசித்து வரும் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன்எனினும் போர் நடைபெறும் பிராந்தியத்தில் இருக்கும் அச்சுறுத்தல்கள் இருக்க தான் செய்கின்றன என்கிறார். “தனிப்பட்ட காரணத்துக்காக இந்தியா வந்த நான், சனா விமான நிலையம் தாக்கப்பட்டதால் உடனே திரும்பி செல்ல இயலவில்லை. யேடன் நகருக்கு சென்று அங்கிருந்து தான் சனா செல்ல வேண்டும். ஆனால் உள்நாட்டுப்போர் காரணமாக யேமனில் உள்ள ஏடன் நகரத்துக்கு செல்லவே, தனியாக விசா பெற வேண்டும். திடீரென சாலையில் நடந்து செல்லும் போது குண்டு வீச்சில் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் உண்டு. போர் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது என்று கூறலாம்.” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு