Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க கத்தாரை இரான் தாக்கியது ஏன்? – அல் உடெய்ட் தளத்தில் என்ன இருக்கிறது?
பட மூலாதாரம், USAF
படக்குறிப்பு, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத்தளமான அல்-உடெய்ட்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்துவிதமான வான்வழி நடவடிக்கைகளுக்கான ராணுவத் தலைமையகமாக, கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அருகில் அமைந்துள்ள அல்-உடெய்ட் செயல்படுகிறது. இந்த ராணுவத் தளத்தில் சுமார் 8,000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன என்பதுடன், சில பிரிட்டிஷ் ராணுவ பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் டஜன் கணக்கான விமானங்கள் அங்கிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர்த்தப்பட்டதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இரானின் இந்தத் தாக்குதல் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை என, பிபிசியின் வட அமெரிக்க ஆசிரியர் சாரா ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா இதுபோன்ற தாக்குதலை எதிர்பார்த்து தயார்நிலையில் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றன, இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன.
அல்-உடெய்ட் ராணுவத் தளம் தற்போது இராக்கில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கான தலைமையகம் மற்றும் தளவாடத் தளமாக செயல்படுகிறது. அத்துடன், வளைகுடா பிராந்தியத்தில் மிக நீளமான விமான தரையிறங்கும் தளத்தையும் இது உள்ளடக்கியுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் தாக்குதலை தொடர்ந்து கத்தாரில் காணப்பட்ட இடைமறிக்கும் ஏவுகணைகள் பிரிட்டிஷ் படைகளும் தளத்தை பயன்படுத்திக் கொள்கின்றன., இந்தத் தளத்தை ‘அபு நக்லா விமான நிலையம்’ என்றும் அழைக்கிறார்கள்.
2000ஆம் ஆண்டில் அல்-உடெய்ட் தளத்தை அணுக, அமெரிக்காவிற்கு கத்தார் அனுமதி அளித்தது. 2001இல் அமெரிக்கர்கள் இந்த ராணுவத் தளத்தின் மேலாளர்களாக பொறுப்பேற்ற பிறகு, டிசம்பர் 2002இல் கத்தாரும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம், அல்-உடெய்ட் தளத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது என்று லண்டனை தளமாகக் கொண்ட உளவுத்துறை நிறுவனமான கிரே டைனமிக்ஸ் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில், கத்தாரில் தனது ராணுவ இருப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒரு உடன்படிக்கையை அமெரிக்கா எட்டியுள்ளதாக அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, அமெரிக்க தளத்தின் மீது ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும், தனது ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக கத்தார் தெரிவித்துள்ளதுஅமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்
இரானின் தாக்குதல் தொடர்பான செய்திகள் கத்தாரில் இருந்து கிடைத்ததும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஆகியோர் வெள்ளை மாளிகையில் உள்ள கண்காணிப்பு அறைக்கு வந்துவிட்டதாக வாஷிங்டன் டிசியில் உள்ள வட அமெரிக்க தலைமை செய்தியாளர் கேரி ஓ’டோனோகு தெரிவித்தார்.
கடந்த மே மாதம் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட மத்திய கிழக்கு பிராந்திய பயணத்தின்போது, அவர் இந்தத் தளத்திற்கும் சென்றிருந்தார்.
அங்கிருந்த ஊழியர்களிடம் உரையாற்றியபோது, “அமெரிக்க அதிபராக மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதே எனது முன்னுரிமையாக இருக்கிறது, அவற்றைத் தொடங்குவது அல்ல. ஆனால் அவசியம் ஏற்பட்டால், அமெரிக்காவையோ அல்லது நமது கூட்டாளிகளையோ பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன்” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கடந்த வார இறுதித் தாக்குதல்களுக்குப் பிறகு பேசிய டிரம்ப், இரான் பதிலடி கொடுத்தால், அது “மிக அதிகமான பலத்தால் எதிர்கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார்.
இரானின் தாக்குதல்களினால் அல்-உடெய்ட் தளத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வரவில்லை என்றாலும், இரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய அழுத்தம் டிரம்புக்கு இருக்கும். ஏனென்றால், அவரது அச்சுறுத்தல்கள் வெறும் வாய்ச்சவடால் அல்ல என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கும்.
உலகின் இரண்டாவது பெரிய FMS கூட்டாளி கத்தார்
அமெரிக்காவுக்கு கத்தாருடன் நெருங்கிய உறவு உள்ளது. வெளிநாட்டு ராணுவ விற்பனை (FMS) அமைப்பில் $26 பில்லியன் மதிப்புள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் சேவைகளை அமெரிக்கா வழங்குகிறது. இது கத்தாரை உலகின் இரண்டாவது பெரிய FMS கூட்டாளியாக ஆக்குகிறது.
சமீபத்திய மற்றும் குறிப்பிடத்தக்க FMS விற்பனையில் பின்வருவன அடங்கும்: நீண்ட தூர ஏவுகணை அமைப்பு பேட்ரியாட், தேசிய மேம்பட்ட மேற்பரப்பு முதல் வான் ஏவுகணை அமைப்பு மற்றும் AN/FPS-132 ஆரம்ப எச்சரிக்கை ரேடார் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு; F-15QA போர் விமானம் – உற்பத்தியில் மிகவும் மேம்பட்ட F-15; மற்றும் AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள்.
இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் தளக் கட்டுமானம் மற்றும் வெடிமருந்துகள், தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் அளிப்பது என நீட்டிக்கப்பட்ட ஆதரவுகளும் அடங்கும்.
அமெரிக்க தளத்தின் மீதான தாக்குதலின் வெற்றி பற்றி கூறும் இரான்
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை இரான் “சிதைத்துவிட்டாலும்”, இந்த தாக்குதல் கத்தாருக்கோ அல்லது அந்நாட்டு மக்களுக்கோ எந்த வகையிலும் “எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது” என்று இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாருடன் “அன்பான மற்றும் வரலாற்று உறவுகளை இணக்கமாக பேணுவதற்கும் தொடர்வதற்கும் இரான் உறுதிபூண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையில், “பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, அமெரிக்கா மூன்று இரானிய அணுசக்தி தளங்களில் பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, இரானின் அரசு ஊடகங்களால் மேற்கோள் காட்டப்படுகிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பஹ்ரைன் மற்றும் செளதி அரேபியா உட்பட, கத்தார் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளின் வரைபடம்இரானிய ஏவுகணைகள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டன: கத்தார்
இரானின் தாக்குதல் தொடரபாக கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, எக்ஸ் சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: “இந்தத் தாக்குதல், கத்தார் நாட்டின் இறையாண்மை, வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அப்பட்டமான மீறல் என நாங்கள் கருதுகிறோம்.”
கத்தாரின் வான் பாதுகாப்பு அமைப்புகள் “இரானின் ஏவுகணைகளை இடைமறித்து, தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது” என்றும், அல்-உடெய்ட் ராணுவத் தளம் ஏற்கனவே காலி செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
“கத்தார் ஆயுதப்படை உறுப்பினர்கள், நட்புப் படைகள் மற்றும் பிறர் உட்பட தளத்தில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன: “இரானின் தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.”
“இந்த வெட்கக்கேடான தாக்குதலின் தன்மை மற்றும் அளவுக்கு ஏற்ற தக்க பதிலை அதே வகையில்” அளிக்கும் உரிமை கத்தாருக்கு உள்ளது என்று அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு