இரான், அமெரிக்கா இருவரில் யாருக்கு ஆதரவு – தர்மசங்கடத்தில் பாகிஸ்தான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானின் அணு ஆயுத நிலைகளின் மீதான தாக்குதலுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி இரானில் ஒன்று அமைதி நிலைநிறுத்தப்படும் அல்லது அங்கு ஒரு பெரும் துயரம் நிகழும் என தெரிவித்திருந்தார். எழுதியவர், ஆனந்த் மணி திரிபாதிபதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் நிலைமை மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மொத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து ஒரு விவாதமும் தற்போது தொடங்கியிருக்கிறது.

தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தரவேண்டும் என பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்திருந்தது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலின் போது டிரம்ப் திட்டவட்டமான ராஜதந்திரத்தால் வெளிப்படுத்திய தலைமைப் பண்பு, யுத்தத்தின் விளிம்பில் நின்ற இருநாடுகளுக்கிடையில் அமைதியை நிலைநிறுத்த உதவியது என்பதுதான் இந்த பரிந்துரைக்கு முன்வைக்கப்பட்ட வாதம்.

ஆனால் மறுபக்கம், இரான்- இஸ்ரேல் மோதலில், பாகிஸ்தான் வெளிப்படையாக இஸ்ரேலை எதிர்த்ததுடன் இரானை ஆதரித்தது.

போரில் அமெரிக்கா நுழைந்த பிறகு, ராஜ்ஜிய ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் பாகிஸ்தான் சிக்கிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 909 கிலோ மீட்டர் எல்லை இருப்பதுடன் இரண்டுமே இஸ்லாமிய நாடுகள்.

பாகிஸ்தானில் இருக்கும் 20 விழுக்காடு மக்கள் ஷியா முஸ்லிம்கள். இந்த மக்கள் வெளிப்படையாக இரானை ஆதரிக்கின்றனர்.

வெளியுறவு கொள்கை ஆய்வாளர் மைக்கேல் குகெல்மேன் எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: “டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, அமெரிக்க அதிபர் இரானின் அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்தினார். அவர் அமைதிக்கும் அழைப்பு விடுத்தார்….”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஃபீல்டு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தானின் குழப்பம்

டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்ற பரிந்துரை பாகிஸ்தானுக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் தூதரக அதிகாரியும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதிநிதியுமான மலீஹா லோதி எக்ஸ் தளத்தில் “இதை பரிந்துரைப்பவர்கள் மனந்திருந்தி பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்,” என எழுதியுள்ளார்.

“நீங்கள் உங்களது விமானதளத்தையும், கடலையும் இரானுக்கு எதிராக தரப்போகிறீர்கள். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரிடமிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. உங்களுக்கு வெளிநாடுகளில் தங்க வசிப்பிடங்கள் இருப்பதால் இது உங்களுக்கு ஒரு பொருட்டல்ல. பாகிஸ்தானில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் முஷரஃப் போல ஓடவேண்டிருக்கும்,” என பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஹிப்ஜாதா முகமது ஹமித் ராஸா நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தார்.

“பாகிஸ்தான் அண்மையில் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுடனும் தொடர்பு கொண்டது, எனவே அது பேச்சுவார்த்தை நடத்த ஒரு நல்ல நிலையில் உள்ளது. அமெரிக்க தாக்குதல்கள் மற்றும் டிரப்பின் அமைதி முன்னெடுப்பு அவசரத்தை அதிகப்படுத்தியுள்ளன. ஆனால் இது பாகிஸ்தானின் செல்வாக்கை அதிகப்படுத்தி காட்டுவதாக இருக்கலாம்,” என வெளியுறவு கொள்கை ஆய்வாளர் மைக்கேல் குகெல்மேன் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

“இரான் மற்றும் அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் விருப்பத்தை தெரிவித்துள்ளது, ஆனால் தற்போது அமெரிக்கா போரில் இணைந்துள்ள நிலையில், அண்மையில் டிரம்புடன் அசிம் முனீரின் நட்பு, மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை ஆகியவை பாகிஸ்தானுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் உள்ள சூழ்நிலையை ஓய்வு பெற்ற கர்னல் மணிஷ் ஓஜா வேறொரு கோணத்தில் பார்க்கிறார்.

“சூழ்நிலை பாகிஸ்தானுக்கு சற்று சவாலானதாக இருக்கிறது. ஒருபுறம் அமெரிக்காவுடன் அதிகரிக்கும் பாகிஸ்தானின் நெருக்கம், அது அமெரிக்க ராணுவத்துடன் நிற்பதான தோற்றத்தை தருகிறது. மற்றொரு புறம், அது அவ்விதம் செய்வது அதன் நட்பு நாடான சீனாவுக்கு பிடிக்காமல் போகலாம்,” என்று அவர் தெரிவிக்கிறார்.

“பாகிஸ்தானுக்கு சீனாவில் முதலீடுகள் மட்டுமல்ல நிறைய தலையீடுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போரில் சீனா இரானை ஆதரிப்பதாக பார்க்கப்படும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் மிகவும் ஆழமாவதை சீனா விரும்பாது,” என அவர் நம்புகிறார்.

“இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பாகிஸ்தானுக்கு ஒரு சிக்கல் உள்ளது. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருப்பதால் அது இரானுடன் நிற்கவேண்டும். அமெரிக்காவை எதிர்ப்பதாக தோன்ற வேண்டும் என பாகிஸ்தான் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக இரானை ஆதரித்து அறிக்கை வெளியிடவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது,” என ஓஜா விளக்குகிறார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகே மோதல் நடைபெற ஆரம்பித்தது என்றும், இது இந்த மொத்த பிராந்தியத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.

“இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகு, இரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் கடுமையாக கண்டிக்கிறது. இந்த பிராந்தியத்தில் இத்தகைய தாக்குதல்கள் ஏற்படுத்த இருக்கும் சாத்தியமான பதற்றம் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்,” என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

“சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் இந்த தாக்குதல்கள் மீறிவிட்டது என்பதை நாங்கள் மீண்டும் தெரிவிக்கிறோம். ஐ.நா. சாசனத்தின் படி, தன்னை தற்காத்துக் கொள்ள அனைத்துவிதமான உரிமையும் இரானுக்கு உள்ளது,” என்றும் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இரானுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கை காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் பதற்றமும் வன்முறையும் இந்த பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த நிலைமை மோசமானால், இந்த பிராந்தியம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்படும்,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் (கோப்புப் படம்)சிக்கலான இடத்தில் பாகிஸ்தான்

இஸ்ரேல் இரானை ஜூன் 13 அன்று தாக்கத் துவங்கியது. இஸ்ரேல் தாக்குதலை பாகிஸ்தான் விரிவாக கண்டித்தது.

இதற்கிடையில் இரான் தளபதி மொஹ்சின் ரெஸாயின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

இதில் அவர், இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், பாகிஸ்தான் அதனுடைய அணு ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேலுக்கு பதிலடி தரும் என கூறியிருந்தார்.

இதன் பின்னர், திங்கள்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஜெனரல் மொஹ்சின் ரெஸாயின் காணொளிக்கு பதிலளித்தார்.

“இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என நமது தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என அவர் தெரிவித்தார்.

இதுவரை இரான் மீதான தாக்குதல்களை பாகிஸ்தான் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது, ஆனால் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் நிலைமை உண்மையில் மிகவும் சிக்கலாகிவிட்டதா?

“ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா பின்வாங்கிய பின்னர் குறைந்து போயிருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் மூலோபாய முக்கியத்துவம் இரான் காரணமாக அதிகரித்துள்ளது,” என இது தொடர்பாக வான்படை ஆய்வு மையத்தில் ஆய்வாளராக இருக்கும் ஷாலினி சாவ்லா சொல்கிறார்.

“பாகிஸ்தானுக்கு ஏற்கனவே இரானுடன் பதற்றம் இருப்பதால் பாகிஸ்தான் நசுக்கப்படுவதை நான் பார்க்கவில்லை. அது அமெரிக்காவின் தரப்பில் இருந்தால் அதன் முக்கியத்துவம் அதிகரித்து அதன் பல நோக்கங்கள் நிறைவேறும் என்பதை பாகிஸ்தான் நன்கு உணர்ந்தே இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவுடன் முழுமையாக நிற்பதாக காட்டவே பாகிஸ்தான் முயற்சிக்கும் என அவர் நம்புகிறார்.

“அதன் மூலோபாய நோக்கங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது மட்டும்தான் பாகிஸ்தானின் ஒரே குறிக்கோள். இஸ்ரேல் மற்றும் இரானிடையேயான பிரச்னையாக இருந்தவரை பாகிஸ்தான் அதன் முஸ்லிம் சகோதரனுடன் நின்றது. அது அறிக்கைக்கு பிறகு அறிக்கையாக வெளியிட்டது, ஆனால் தற்போது வெகு சில அறிக்கைகளை மட்டுமே அங்கிருந்து வருகின்றன,” என அவர் கூறுகிறார்.

“பாகிஸ்தான் தற்போது இருக்கும் நிலையில், அது அமெரிக்காவின் ஆதரவை தொடர்ந்து பெற அது விரும்பும். இதற்கு மிக முக்கியமான காரணம் அந்த நாட்டின் மொத்த பொருளாதாரமும் அமெரிக்காவின் ஆதரவை நம்பியுள்ளது. இரண்டாவது பெரிய காரணம், அமெரிக்கா அதனுடன் நின்றால் அதனால் இந்தியாவை எதிர்கொள்ள மேலும் அதிக ஆற்றலுடன் இருக்கலாம் என நினைக்கிறது,” என ஷாலினி சாவ்லா கூறுகிறார்.

“டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பங்கேற்ற விருந்து குறித்து ஏராளமாக விவாதிக்கப்பட்டது. இதிலும் பாகிஸ்தான், அமெரிக்காவின் முன் இந்த விவகாரத்தை கொண்டு வந்து அமெரிக்கா அதன் ராணுவ உதவியை தொடரவேண்டும் என கூறியது. எனவே, ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் நோக்கம் தெளிவாக உள்ளது, அது அதன் சொந்த நலன்களுக்காகவே பணியாற்றும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தோ- பசிபிக் பகுதியை கண்காணிக்கும் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன் எக்ஸ் தளத்தில் இவ்விதம் எழுதியுள்ளார்: “பாகிஸ்தான் இரானுக்கு உதவாது. அமெரிக்க-பாகிஸ்தான் மூலோபாய கூட்டணியை நன்கு பராமரிப்பதுதான் அதற்கு மிகவும் முக்கியம், டிரம்ப்- முனீர் சந்திப்புக்கு பிறகு இந்த சூழ்நிலை மேலும் மேம்பட்டுள்ளது.”

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்காவா? இரானா?

இஸ்ரேல் இரான் இடையே நடைபெறும் போரில் அமெரிக்கா நுழைந்தது முதலே, பாகிஸ்தானின் விமான தளங்களை பயன்படுத்துவது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன.

இரானுக்கு எதிராக பாகிஸ்தானின் சார்பில் அமெரிக்கா ஒரு முனையை திறப்பது சாத்தியமா?

சர்வதேச உறவுகள் நிபுணர் ஸ்வஸ்தி ராவ் , “பாகிஸ்தான் எப்போதும் ஒரு இரட்டை விளையாட்டை விளையாடும், ஆனால் இம்முறை டிரம்பின் நெருக்கமான வட்டாரத்தில் என்ன நடக்கிறது என அதனால் கணிக்கமுடியவில்லை. இல்லாவிட்டால், அவரை நோபலுக்கு பரிந்துரைப்பது போன்றதொரு தவறை செய்திருக்காது,” என கூறுகிறார்.

“பாகிஸ்தானில் இருக்கும் தளங்களை பயன்படுத்துவதை பொறுத்தவரை, மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு ஏற்கனவே பல தளங்கள் உள்ளன. பாகிஸ்தானை நோக்கி ஒரு முனையை திறப்பது கட்டாயம் என்கிற அளவிற்கு சூழ்நிலை மோசமாகும் வரை அதை அமெரிக்கா பயன்படுத்தாது. பாகிஸ்தானும் இதற்கு அனுமதியை வெகு சீக்கிரம் தந்துவிடாது,” என்றும் அவர் விளக்குகிறார்.

“பாகிஸ்தான் மற்றும் இரான் உறவுகளை பொறுத்தவரை, பாகிஸ்தான் எப்போதுமே சமன்படுத்தும் விளையாட்டையே விளையாடி வந்திருக்கிறது. மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் வெறும் சம்பிரதாயங்களையே செய்துள்ளன. எல்லோரும் கண்டனம் மட்டுமே தெரிவித்துள்ளனர், யாரும் இரானுக்கு ஆதரவாக வரவில்லை. பாகிஸ்தானை பொறுத்தவரை, அது தனது பந்தயத்தை ஒரே இடத்தில் நடத்தாது,” என அவர் நம்புகிறார்.

பாகிஸ்தானும், இரானும் அண்டை நாடுகளாகும். பாகிஸ்தான் சுன்னி பெரும்பான்மை கொண்ட நாடு, இரான் ஷியா பெரும்பான்மை கொண்ட நாடு.

அண்டை நாடுகளாக இருந்தாலும், இரு நாடுகளிடையேயான உறவு சிறப்பாக இல்லை. எல்லையில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன.

ஸ்வஸ்தி ராவ்,”தற்போது இந்த தாக்குதலுக்கு பின்னர் இரான் எப்படி பதிலடி தருகிறது என்பதையே அனைத்தும் சார்ந்துள்ளன. அது ஏவுகணை தாக்குதலை தொடங்கினால் அமெரிக்கா தலையிடாது, ஆனால் மோதல் தீவிரமடைந்தால் பாகிஸ்தானின் பங்கு அதிகரிக்கும்,” என கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு