செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜநா ஆணையாளர் நேரில் வருகை தர பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றிருந்தது. 

மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்றிருந்தது.

போராட்டமானது நாளை மறுதினம் புதன்கிழமை வரையிலான மூன்று தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

இதனிடையே தேசிய தாயக வலையமைப்பு செம்மணிக்கு நீதி கோரிய போராட்டத்துக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் எதிர்வரும் 25ம் திகதி காலை இருமணி நேர கடையடைப்பினை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து  வர்த்தகர்களும் செம்மணி நினைவேந்தலில் பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ள குழு அதேவேளை யாழ்ப்பாணம் வருகை தரும் ஜநா ஆணையாளரை செம்மணிக்கு வருகை தரவும் அழைப்பு விடுத்துள்ளது.