இரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது எப்படி? – அமெரிக்கா தந்திரமாக திசை திருப்பியது குறித்த விளக்கம்

எழுதியவர், ஜேக் ஹார்டன், பார் சர்ஜென்ட்& ராபின் லெவின்சன் கிங்பதவி, பிபிசி வெரிஃபை, வாஷிங்டன் டிசியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

18 மணிநேர பயணம், பலமுறை நடுவானிலேயே எரிபொருளை மீண்டும் நிரப்புதல், எதிரிகளை திசை திருப்புவதற்காக தந்திரமாக பயன்படுத்தப்படும் போலி ஆயுதங்கள் (decoys), இப்படித்தான் இரானின் அணுசக்திக் கட்டமைப்புகள் மீது குண்டுவீசும் அமெரிக்காவின் திட்டம் நிகழ்த்தப்பட்டது என்கிறார், அமெரிக்க ராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரியான கூட்டுப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் டேன் கேய்ன்.

அமெரிக்காவால் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேம்மர்’ என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் முழு விளைவு என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், இந்த சிக்கலான திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பது தாக்குதல் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே ஞாயிற்றுக்கிழமை காலை, அமெரிக்க பாதுகாப்பு துறை அலுவலகமான பென்டகனில் நடந்த ஊடக சந்திப்பில் விளக்கப்பட்டது.

வானிலிருந்து குண்டுகளை வீசும் அமெரிக்க விமானங்கள், “உலகம் அறியாத வண்ணம், இரானுக்குள் நுழைந்து (தாக்கிவிட்டு) திரும்பியதாக,” அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரானை திசைதிருப்பி தாக்குதல்

மிசௌரியின் கிராமப்புறத்தில் உள்ள அமெரிக்க வான் தளத்திலிருந்து பல விமானங்கள் புறப்பட்டதை வெள்ளை மாளிகையில் உள்ள கண்காணிப்பு அறையிலிருந்து (Situation Room) நள்ளிரவுக்கு சிறிது நேரத்துக்குப் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டதில் இருந்துதான் இவையனைத்தும் தொடங்கின. 05:01 BST நேரப்படி ஒயிட்மேன் வான்படை தளத்திலிருந்து இருள் சூழந்த நேரத்தில் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் புறப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இரானின் மிகுந்த பாதுகாப்பான அணுசக்தி தளங்கள்தான் அவற்றின் உச்சகட்ட இலக்கு.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஒலியின் வேகத்தை விட குறைவான வேகத்தில் பயணிக்கக்கூடிய சப்சோனிக் விமானங்கள், நிலத்தின் அடியில் 18 மீட்டர் ஆழத்துக்குள்ளும் ஊடுருவி கான்கிரீட் தளங்களை அழிக்கவல்ல “பங்கர் பஸ்டர்” வகை சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து சென்றது.

மலைப்பகுதியில் நிலத்துக்கடியில் அமைந்துள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி செறிவூட்டும் அமைப்பை தாக்குவதற்கு தேவைப்படும் ஆயுதம் இதுவாகும். ஃபோர்டோ கட்டமைப்பு, இரான் அணுசக்தி திட்டத்தின் மையமாக விளங்குகிறது. இத்தகைய ஆயுதத்தை வைத்துள்ள உலகின் ஒரே நாடாக அமெரிக்கா உள்ளது.

ஆனால், அதை உலகம் கவனிக்கவில்லை. அமெரிக்காவின் தீவு பிரதேசமான குவாமில் குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியானதையடுத்து, அனைவரது கண்களும் மேற்கு நோக்கி, பசிபிக் பெருங்கடலை நோக்கியே இருந்தது.

“விமானங்களின் நகர்வு இரான் மீதான இஸ்ரேலிய போரில் அமெரிக்கா பங்கேற்பது தொடர்பாக அதிகாரபூர்வமாக தொடர்புடையது அல்ல என்றாலும், சிலர் அதுகுறித்து சந்தேகங்களை எழுப்புகின்றனர்,” என பிபிசி அச்சமயத்தில் எழுதியிருந்தது.

ஆனால், பென்டகனின் தகவலின்படி, அது, அட்லாண்டிக் பெருங்கடலில் இரான் நோக்கி அனுப்பப்பட்ட உயர் ரகசிய விமானங்கள் குறித்த கவனத்தைத் திசைதிருப்ப பயன்படுத்தப்பட்ட தந்திரம்.

‘மிகவும் ரகசிய நடவடிக்கை’

பசிபிக் பெருங்கடலின் மேலே மேற்கு நோக்கி விமானங்கள் பறந்தது, “மிகச்சில திட்ட வகுப்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மட்டுமே அறிந்த தந்திர நடவடிக்கை,” என கேய்ன் தெரிவித்தார்.

“சிறியளவிலான தொடர்புகளுடன், ஏழு பி-2 குண்டுவீச்சு விமானங்கள் அமைதியாக கிழக்கு நோக்கி பயணித்தன, ஒவ்வொரு விமானத்திலும் விமானக் குழுவினர் இரண்டு பேர் இருந்தனர். இதுதான் இந்த தாக்குதலில் முக்கியமானதாக இருந்தது,” என்றும் அவர் கூறினார்.

இந்த ராணுவ விமானங்கள் விமான கண்காணிப்பு இணையதளங்களில் காணப்படவில்லை. எனவே, இந்த சம்பவங்கள் குறித்து பென்டகன் அளித்த தகவல்களை சுயாதீனமாக சரிபார்ப்பது பிபிசிக்கு கடினமானதாக உள்ளது.

நள்ளிரவில் அணுசக்தி தளங்கள் மீது நிகழ்ந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை காட்டுவதற்கு செயற்கைக்கோள் படங்கள் உதவுகின்றன, ஆனால் அவை தாக்கப்பட்ட துல்லியமான நேரத்தை வழங்க உதவாது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்மத்திய கிழக்கு நோக்கி விமானங்கள் சென்றபோது, 22:00 BST நேரப்படி, எதிரி விமானங்கள் மற்றும் தரை-வான்வழி ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்காணிக்க உதவும் விமானங்களும் அவற்றுடன் இணைந்தன. இது, “சிக்கலான, துரிதமாக செய்து முடிக்கப்பட வேண்டிய நடவடிக்கை” என கேய்ன் விவரித்தார்.

ஆனால், இரானிய போர் விமானங்கள் புறப்படவில்லை, அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்த எந்தவொரு வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தோன்றவில்லை, என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

“இரானிய வான்வெளி மீதான இஸ்ரேலின் ஆதிக்கத்தால், அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களால் சுதந்திரமாக செயல்பட முடிந்தது,” என, வாஷிங்டன் டிசியில் உள்ள சென்டர் ஃபார் ஸ்டிரேட்டஜிக் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மையத்தின் ஏவுகணை பாதுகாப்பு நிபுணர் பெட்ரீஸ்ஜா பேஸில்ஸைக் பிபிசி வெரிஃபையிடம் கூறினார்.

அடுத்த ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கேய்ன் கூறிய தகவல்கள், பொதுவாக பொதுமக்களிடம் வெளிப்படுத்தாத தகவல்கள் அடங்கியதாக இருந்தது.

தாக்குதலின் விளைவுகள்

மேலும், சில குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்த நேரம் குறித்த தகவல்களும் அதில் வழங்கப்பட்டது. குண்டுவீச்சு விமானங்கள் எந்த வழியில் சென்றன என்பதை விளக்கும் வரைபடம், மிகவும் துல்லியமான வழி அல்ல, மேலும் வழங்கப்பட்ட இருவிதமான வரைபடங்கள் ஒன்றுக்கொன்று சிறிது வித்தியாசத்துடன் இருந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள் முழுமையான வெற்றியடைந்ததாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது, இரானின் அணுசக்தி திட்டத்தை அமெரிக்கா “அழித்துவிட்டதாக” கூறியது. ஆனால், இந்த தாக்குதலின் விளைவுகள் இனிதான் தெரியவரும்.

இந்த தாக்குதல்களை இரான் உறுதிப்படுத்தினாலும், சேதத்தின் அளவை குறைத்து தெரிவித்துள்ளது, மேலும் தாக்குதல்கள் குறித்த குறிப்பிட்ட தகவல்களையும் வழங்கவில்லை.

22:00 BST நேரப்படி, கரையில் உள்ள இலக்குகளை திறம்பட தாக்கும் வகையிலான டோமாஹாக் (Tomahawk) வகையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை, அரேபிய கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இஸ்ஃபஹானுக்கு அருகே உள்ள அணுசக்தி தளத்தை நோக்கி அரேபிய கடலில் ஏவப்பட்டதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ஃபஹான் நகரம் சுமார் 20 லட்சம் மக்களைக் கொண்டது.

கடலோரத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அந்த அணுசக்தி கட்டமைப்பு அமைந்திருந்தாலும், மற்ற இரு அணுசக்தி தளங்களில் பி2 குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசிய கிட்டத்தட்ட அதே நேரத்தில், இஃபஹான் அணுசக்தி கட்டமைப்பை தாக்கக்கூடிய போதுமான தொலைவில் ஏவுகணை இருந்தது என்கிறார், சென்டர் ஃபார் எ நியூ அமெரிக்கன் செக்யூரிட்டி அமைப்பின் பாதுகாப்பு நிபுணர் முனைவர் ஸ்டேசி பெட்டிஜான் கூறுகிறார்.

“பல அணுசக்தி தளங்கள் மீது ஒருங்கிணைந்த விதத்தில் திடீர் தாக்குதலை” அமெரிக்காவால் நடத்த முடிந்திருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பல இரானிய வான்வெளிக்குள் நுழைந்தது, அங்கு அமெரிக்கா பல ஏமாற்று தந்திரங்களில் ஈடுபட்டதாக பென்டகன் கூறுகிறது.

பின்னர், வான்வழி தாக்குதல்கள் தொடங்கின.

நில்லத்தடி தளங்களை தாக்கவல்ல பெரியளவிலான GBU-57 எனப்படும் எம்ஓபி வகையை சேர்ந்த வெடிகுண்டுகள் (Massive Ordnance Penetrator weapons), ஃபோர்டோவில் சில இலக்குகளை நோக்கி 23:40 BST நேரப்படி முதலாவதாக ஏவப்பட்டது, அப்போது இரானில் அதிகாலை 02:00 மணியாகி சிறிது நேரமே கழிந்திருந்தது.

இந்த எம்ஓபி வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பாக 18 மீட்டர் கான்கிரீட் தளம் அல்லது நிலத்துக்கடியில் 61 மீட்டர் ஆழம் ஊடுருவும் திறன் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இதனால் வெற்றிகரமாக தாக்க முடியும் என்பது உறுதியானது அல்ல என்றாலும், ஃபோர்டோ தளம் நிலத்துக்கடியில் 80-90 மீட்டர் ஆழத்தில் இருந்தாலும் அதனை தாக்குவதற்கு மிக நெருக்கமாக, உலகளவில் உள்ள ஒரே வெடிகுண்டாக இது கருதப்படுகிறது,

ஓர் எதிர்ப்பு நடவடிக்கையில் இத்தகைய “பஸ்டர் வெடிகுண்டுகள்” பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை.

எத்தனை வெடிகுண்டுகள், விமானங்கள்?

இதையடுத்து மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்ற இலக்குகள் மீது வீசப்பட்டன, மொத்தமாக 14 எம்ஓபி வெடிகுண்டுகள் ஃபோர்டோ மற்றும் நடான் அணுசக்தி தளங்களின் மீது வீசப்பட்டன. ஃபோர்டோவிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ஃபஹான் அணுசக்தி தளத்தில், டோமாஹாக் ஏவுகணைகள் இலக்குகளை தாக்கின.

வான்வெளியில் 18 மணிநேரத்தைக் கழித்த பின்னர், அனைத்து இலக்குகளும் சுமார் 25 நிமிடங்களில் தாக்கிவிட்டு, 00:30 BST மணியளவில் இரானிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்குத் திரும்பியதாக பென்டகன் கூறுகிறது.

மொத்தமாக, துல்லியமாக இலக்குகளை தாக்கும் 75 குண்டுகளும் (precision guided weapons) 125க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களும் பயன்படுத்தப்பட்டன, இரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது “வலுவான மற்றும் தெளிவான” அழிவை இந்த நடவடிக்கை வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் ஹெக்சத் தெரிவித்தார்.

ஆனால், இந்த தாக்குதலின் விளைவை அளவிடுவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். முக்கியமான அணுசக்தி தளங்கள் மீது எந்தளவுக்கு ஆழத்தில் அந்த குண்டுகள் ஊடுருவின என்பதை அறிய இன்னும் பல காணொளிகள் தேவை.

“இது வேறு எந்தவொரு நாட்டாலும் நடத்த முடியாத மிகவும் சிக்கலான மற்றும் மிகவும் அதிநவீனமான தாக்குதல்,” என பெட்டிஜான் தெரிவித்தார்.

“வியூக ரீதியாக இந்த நடவடிக்கையின் வெற்றியை தாண்டி, இரானின் அணுசக்தி திட்டத்தை நிரந்தரமாக இதனால் தடுக்க முடியுமா என்பது தெளிவாக தெரியவில்லை.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு