யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்கள் தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த மூவர் தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தமிழகத்திற்கு தப்பி செல்ல முற்பட்ட வேளை, தலைமன்னார் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் தலைமன்னார் காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த மூவரும் யாழ்ப்பாணம் , கோப்பாய், அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை ஆகிய காவற்துறை  பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற கொள்ளை , வாள் வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாண காவற்துறையினர், தலைமன்னார் சென்று கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக பொறுப்பேற்கவுள்ளதாக காவல்  தகவல்கள் தெரிவிக்கின்றனர்