ஈரானிய அணு நிலைகள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதலை அடுத்துப் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்தப் பிராந்தியம் ஊடான சிவிலியன் விமான சேவைகளின் பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.

சில ஐரோப்பிய நாடுகளது விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கின் கட்டார், டோஹா போன்ற பிரதான விமான நிலையங்களுக்கான சேவைகள் எந்தவேளையிலும் தடங்கல்களுக்கு உட்படலாம் என்று தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளன.
அமெரிக்காவின் குண்டு வீச்சை அடுத்து பிரிட்டிஷ் விமான சேவை நிறுவனம் லண்டனில் இருந்து கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய விமான நிலையங்களுக்குச் செல்லும் சேவைகளை ரத்துச் செய்துள்ளது. செவ்வாய்க் கிழமை வரை இந்த நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

போர் எந்த வேளையிலும் மத்திய கிழக்கின் இதர பகுதிகளுக்குப் பரவலாம் என்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சு அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈராக், கட்டார், ஓமான், குவைத், பஹ்ரைன், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள டெனிஷ் மக்கள் அவதானமாக நடந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,அமெரிக்காவின் அத்துமீறலுக்கு ஈரான் வழங்கப்போகின்ற பதிலடி என்ன என்பதை அறிவதற்கு முழு உலகமும் எதிர்பார்த்துள்ளது. ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனி தனக்கு மிக நெருக்கமான சிலருடன் மறைவிடம் ஒன்றுக்குச் சென்றுள்ளார் என்று மேற்குலக செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

பதில் தாக்குதல் தொடர்பான உத்தரவை அங்கிருந்தவாறு அவர் விடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையில்,  உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய சிறிய கடல் பகுதியாகிய ஹோர்முஸ் ஜலசந்தியை(Strait of Hormuz) மூடி விடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

நன்றி
தாஸ்நியூஸ் – பாரிஸ்
22-06-2025