இரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செளதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகள் அமெரிக்கத் தாக்குதலை சர்வதேச சட்ட மீறல் என்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளனஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் – இரான் மோதலை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்வினையையும் ஏற்படுத்தியுள்ளது.

செளதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகள் அமெரிக்கத் தாக்குதலை சர்வதேச சட்ட மீறல் என்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளன.

அமெரிக்க தாக்குதலை விமர்சிக்கும் பல நாடுகளும், பதற்றங்களை உடனடியாகக் குறைத்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

பல நாடுகளும் விடுத்துள்ள கோரிக்கைகளில், சர்வதேச விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை காலை, இரானின் மூன்று அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகியவற்றை அமெரிக்கா தாக்கியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடுமையாக எதிர்வினையாற்றிய இரான், இது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகக் கூறியுள்ளது.

“ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, இரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதன் மூலம் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைக் கடுமையாக மீறியுள்ளது” என்று இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.

அவர் மற்றொரு சமூக ஊடகப் பதிவில், ராஜ்ஜீய ரீதியிலான அமைதிப் பாதையை முதலில் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், பின்னர் அமெரிக்கா அதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார் .

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து எதிர்வினைகள் வெளிவந்துள்ளன.

பட மூலாதாரம், NATHAN HOWARD/POOL/AFP via Getty Images

படக்குறிப்பு, பதற்றங்களைத் தணிக்கவும் அரசியல் தீர்வைக் காணவும் உலகளாவிய முயற்சிகளின் அவசியத்தை செளதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.செளதி அரேபியா

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய செளதி அரேபியா, இது இரானின் இறையாண்மையை மீறுவதாகக் கூறியுள்ளது.

பதற்றங்களைத் தணிக்கவும் அரசியல் தீர்வைக் காணவும் உலகளாவிய முயற்சிகளின் அவசியத்தை செளதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.

“இரானில் நடைபெற்று வரும் பிரச்னைகளை, குறிப்பாக அமெரிக்காவால் இரானின் அணுசக்தி தளங்கள் குறிவைக்கப்படுவதை, செளதி அரேபியா ஆழ்ந்த கவலையுடன் கவனித்து வருகிறது” என்று செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளது.

“மிகவும் முக்கியமான இந்த நேரத்தில், ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் கண்டறிந்து, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை அடைவதில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க, சர்வதேச சமூகம் தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் செளதி அரேபியா அழைப்பு விடுக்கிறது” என்றும் செளதி அரேபியா தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், US Air Force

படக்குறிப்பு, பி-2 விமானம் மூலம் அமெரிக்கா இரானை தாக்கியதுகத்தார்

இரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் நிலைமை மோசமடையும் அபாயம் இருப்பதாகக் கூறி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள கத்தார் அரசு, அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

“இரான் அணுசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையை கத்தார் ஆழ்ந்த கவலையுடன் அவதானித்து வருகிறது” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

“பிராந்தியத்தில் தற்போது நிலவும் ஆபத்தான பதற்றம், பிராந்திய மற்றும் சர்வதேச நிலையில் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்றும் கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

“மோதல்களாலும் அது ஏற்படுத்தும் மனிதாபிமான தாக்கங்களாலும் பிராந்திய மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து தரப்பினரும் விவேகத்துடன், கட்டுப்பாட்டுடனும் செயல்பட்டு, மோதலைத் தவிர்ப்பார்கள் என்று கத்தார் நம்புகிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஓமன்

இரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஓமன் அரசு, தாக்குதல்களுக்கு கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

இது ஒரு சட்டவிரோத தாக்குதல் என்றும், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை நேரடியாக மீறுவதாகவும் ஓமன் கூறியுள்ளது. நிலைமையை அமைதிப்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் ஓமன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மோதலை அதிகரிக்கக்கூடும், மேலும் இது சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தை கடுமையான மீறும் செயலாகும்” என்று ஓமனின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பின் கீழ், அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திட்டத்தை உருவாக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு” என்று ஓமன் கூறுகிறது.

“கதிர்வீச்சு மற்றும் மாசுபாடு பரவும் அபாயம் இருப்பதால், ஜெனீவா உடன்பாடு உட்பட பல சர்வதேச விதிகள் அணுசக்தி தளங்களை குறிவைப்பதைத் தடை செய்கின்றன” என்று ஓமன் தெரிவித்துள்ளது.

இராக்

இரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கடுமையாகக் கண்டித்த இராக், மத்திய கிழக்கின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள் முழு பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும் பாதிக்கும் என்று இராக் கூறியுள்ளது.

“இரான் எல்லைக்குள் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைப்பதை இராக் அரசாங்கம் கண்டிக்கிறது. இந்த ராணுவ நடவடிக்கை, மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாகும். மேலும் பிராந்திய நிலைத்தன்மைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று இராக் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

எகிப்து மற்றும் லெபனான்

பட மூலாதாரம், Antoine Gyori – Corbis/Corbis via Getty Images

படக்குறிப்பு, லெபனான் அதிபர் ஜோசப் ஆவுனின் இந்தப் புகைப்படம், இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் பிரான்சுக்கு சென்றிருந்தபோது எடுக்கப்பட்டது”இந்தத் தாக்குதல் தற்போது பிராந்தியத்தில் குழப்பம் மற்றும் பதற்றங்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது” என்று எகிப்து எச்சரித்துள்ளது.

“தற்போதைய சூழ்நிலையில், நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான வழியை ராணுவத் தீர்வுகள் மூலமாக அல்ல, அரசியல் தீர்வுகள் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் கண்டறிய வேண்டும்” என்று எகிப்து வலியுறுத்தியது.

இதற்கிடையில், லெபனான் அதிபர் ஜோசப் ஆவுன், “இரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியது பதற்றங்களை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் பாகிஸ்தான்

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், இது முழு பிராந்தியத்திலும் பதற்றங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

“இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு இரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டிக்கிறது. பிராந்தியத்தில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்” என்று பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது .

“இந்த தாக்குதல்கள், சர்வதேச சட்டத்தின் அனைத்து தரங்களையும் மீறுகின்றன என்பதையும், ஐ.நா. சாசனத்தின் கீழ் இரானுக்கு தற்காப்புக்கான சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

”நிலைமை மோசமடைந்தால், அது இந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.”

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்கா தாக்கிய இரானின் 3 அணுசக்தி தளங்களில் ஒன்றான ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படம்.”எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது?”

இதற்கிடையில், இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அரசாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முதலில் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், பின்னர் அமெரிக்கா அதை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும் கூறியுள்ளார்.

“கடந்த வாரம் நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது, இஸ்ரேல் தாக்குதல் மூலம் பேச்சுவார்த்தைக்கான பாதையை மூட முடிவு செய்தது” என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

“இந்த வாரம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், பாதையை மூட அமெரிக்கா முடிவு செய்தது” என்று அராக்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது, ஆனால் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக பேச்சுவார்த்தைகள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லவில்லை.

“இதிலிருந்து என்ன முடிவுக்கு வருவது?” என்கிறார் அப்பாஸ் அராக்சி.

“பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை மேசைக்கு இரான் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒருபோதும் நாங்கள் பேச்சுவார்த்தையில் இருந்தே வெளிவரவில்லை என்ற நிலையில், அந்த இடத்திற்கு எப்படி திரும்பி வரமுடியும்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரானின் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இருப்பினும், 2025 ஜூன் 13ஆம் நாளன்று, இரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற தாக்குதலைத் இஸ்ரேல் தொடங்கி, இரானின் பல இடங்களைத் தாக்கியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு