நட்புறவுடன் இருந்த இஸ்ரேல் – இரான் பகைவராக மாறிய வரலாறு

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டபோது, துருக்கியை தொடர்ந்து இஸ்ரேலை அங்கீகரித்த இரண்டாவது இஸ்லாமிய பெரும்பான்மை நாடாக இரான் இருந்தது.

அந்த நேரத்தில், இஸ்ரேலும் இரானும் நட்புறவு பாராட்டி வந்தாலும், பின்னர் சூழ்நிலை முற்றிலும் மாறி, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரிகளாக மாறின.

கடந்த ஜூன் 13 அன்று, இஸ்ரேல் மீண்டும் இரானை தாக்கியது. டெஹ்ரான், நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட இரானின் பல ராணுவ மற்றும் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலிய நகரங்கள் மீது டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தியது.

தற்போதைய சூழலில், அமெரிக்காவும் இரானை தாக்கியுள்ளது. இரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே, எவ்வாறு இவ்வளவு கடுமையான பகை உருவானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் இஸ்ரேல், இரான் இடையே நல்லுறவு நிலவிய காலம்

1948இல் இஸ்ரேல் உருவாகக் காரணமாக இருந்த ‘பாலத்தீனத்தைப் பிரிக்கும் திட்டத்தை’ இரான் எதிர்த்தது. அனாலும் இஸ்ரேல், இரான் இடையிலான உறவுகள் 1979 வரை மிகவும் சுமூகமாக இருந்தன.

துருக்கிக்கு அடுத்ததாக இஸ்ரேலை அங்கீகரித்த இரண்டாவது இஸ்லாமிய பெரும்பான்மை நாடாகவும் இரான் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில், பஹ்லவி வம்சத்தின் ஷாக்கள் ஆட்சி செய்த முடியாட்சியின் கீழ் இரான் இருந்தது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவும் அந்நாடு காணப்பட்டது.

அதனால், இஸ்ரேலின் நிறுவனர் மற்றும் முதல் பிரதமரான டேவிட் பென்-குரியன், அதன் அண்டை அரபு நாடுகளின் அதிருப்தியையும் மீறி, இரானுடன் நட்பை உருவாக்க முயன்றார். அவரது முயற்சிக்குப் பலனும் கிடைத்தது.

ஆனால் 1979ஆம் ஆண்டு அயதுல்லா கொமேனியின் புரட்சி, ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றி, இஸ்லாமிய குடியரசை நிறுவியது.

தன்னை உலகின் ‘ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்’ என்று வர்ணித்துக் கொண்ட கொமேனி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலின் ‘ஏகாதிபத்தியத்தை’ நிராகரிப்பதைத் தனது சித்தாந்த அடித்தளமாக மாற்றினார்.

கொமேனியின் அரசாங்கம் இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய குடிமக்களின் பாஸ்போர்ட்டுகளை அங்கீகரிப்பதை நிறுத்தி, டெஹ்ரானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தைக் கைப்பற்றி, பாலத்தீன விடுதலை அமைப்பின் (PLO) வசம் ஒப்படைத்தது.

அந்த நேரத்தில், பாலத்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராகத் தனி பாலத்தீன நாடு எனும் கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்து வந்தது.

இரு நாடுகள் இடையே எப்படி ஆழமான பகை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அயதுல்லா கொமேனி இரு நாடுகளுக்கும் இடையே எப்படி இவ்வளவு ஆழமான பகை உருவானது என்ற கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள, சர்வதேச நெருக்கடி குழு மையத்தில், இரான் திட்டத்தின் இயக்குநர் அலி வேஸுடன் பிபிசி முண்டோ பேசியது.

புதிய இரானிய அரசின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறது என்று அலி வேஸ் கூறினார்.

இரானிய அரசாங்கத்தில் உள்ள பல தலைவர்கள் லெபனான் போன்ற இடங்களில் பாலத்தீனர்களுடன் கொரில்லா போர்ப் பயிற்சியில் கலந்துக்கொண்டவர்கள். அவர்கள் பாலத்தீனர்கள் மீது ஆழ்ந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தனர்.

வேஸ் கூறியதன்படி, புதிய இரான் தன்னை ஓர் இஸ்லாமிய சக்தியாக உலகத்திற்குக் காட்ட விரும்பியது. அதனால்தான் பெரும்பாலான அரபு இஸ்லாமிய நாடுகள் அந்த நேரத்தில் விட்டுச் சென்ற பாலத்தீன பிரச்னையை இரான் கையில் எடுத்தது.

அந்த வழியில் கொமேனியும் பாலத்தீன பிரச்னையில் தனது கூற்றை முன்வைக்கத் தொடங்கினார்.

அதன் பிறகு, டெஹ்ரானில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள், தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கின. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கமும் முழு ஆதரவு அளித்தது.

இஸ்ரேலில் இரான் மீதான எதிர்ப்பு உணர்வு 1990களுக்குப் பிறகுதான் தொடங்கியது என்று வேஸ் விளக்குகிறார். ஏனெனில் அப்போது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது சதாம் உசேன் தலைமையிலான இராக்.

மேலும், 1980 முதல் 1988 வரையிலான காலத்தில் இராக் நாட்டிற்கு எதிரான போர்களில் பயன்படுத்த, அமெரிக்கா இரானுக்கு ரகசியமாக ஆயுதங்களை வழங்கிய ‘இரான்-கான்ட்ரா’ என்ற திட்டத்தைச் சாத்தியமாக்கிய மத்தியஸ்தர்களில் இஸ்ரேலும் ஒன்றாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் இஸ்ரேல் இரானை தனது இருப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதத் தொடங்கியது.

இஸ்ரேல், இரான் இடையிலான நிழல் போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1979ஆம் ஆண்டில், இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இரான் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியதுஇரான் மற்றொரு பெரிய பிராந்திய சக்தியான சௌதி அரேபியாவையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று வேஸ் விளக்குகிறார்.

இரான் பெரும்பாலும் பாரசீகர்களும் ஷியாக்களும் நிரம்பிய நாடாக உள்ளது. ஆனால் அரபு நாடுகள் பெரும்பாலும் சுன்னி இஸ்லாமியர்கள் நிரம்பிய நாடுகளாக உள்ளன.

தனது போட்டி நாடுகள் ஒரு நாள் தன்னைத் தாக்கக்கூடும் என்பதை இரானிய அரசாங்கம் உணர்ந்தது. அந்த அச்சத்தின் காரணமாக இரான் ஒரு நுட்பமான திட்டத்தை உருவாக்கிச் செயல்படத் தொடங்கியது.

இதற்குப் பிறகு, இரானுடன் இணைந்த அமைப்புகளை வைத்து ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புகள் அவற்றின் நலன்களுக்கு ஏற்ப ஆயுத நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வையில் “பயங்கரவாதியாக” அறிவிக்கப்பட்ட லெபனானின் ஹெஸ்பொலா அமைப்பு, அந்த நெட்வொர்க்கில் மிகவும் முக்கியமானது.

இன்று இரானின் ‘எதிர்ப்பு அச்சு’ என்று அழைக்கப்படுவது, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் ஏமன் வரை நீண்டுள்ளது.

பதிலுக்கு இஸ்ரேலும் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இரான் மற்றும் அதை ஆதரிக்கும் குழுக்களை எதிர்த்து இஸ்ரேல் தாக்குதல்களில் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் மூன்றாம் நாடுகளில் நடந்தன. அங்கு இரான் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு நிதி மற்றும் வளங்களை வழங்குகிறது.

இரான், இஸ்ரேல் இடையிலான இந்த மோதல் ‘நிழல் போர்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இரு நாடுகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கள் நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல் ஒன்றையொன்று குறிவைத்துள்ளன.

இரானின் அணுசக்தி திட்டத்தை கண்காணித்து வரும் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலும் இரானும் ஒன்றையொன்று தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கின்றனஇரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி, அந்நாடு அணு ஆயுத சக்தியாக மாறுவதைத் தடுப்பதுதான், இஸ்ரேலின் முதன்மையான குறிக்கோளாகக் காணப்படுகிறது.

தனது அணுசக்தி திட்டம் பொது மக்களின் நலன்களுக்காக மட்டுமே என்ற இரானின் கூற்றை இஸ்ரேல் நிராகரிக்கிறது.

இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து ‘ஸ்டக்ஸ்நெட் (Stuxnet)’ என்ற கணினி வைரஸை உருவாக்கியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இது இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் இரானின் அணுசக்தி நிலையங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

இரான், தனது அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய தலைவர்கள் மற்றும் சில முக்கிய விஞ்ஞானிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பு காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டது, இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இஸ்ரேலிய அரசாங்கம் இந்தக் கொலைகளில் தனக்குத் தொடர்பு இருப்பதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போதைய தாக்குதல்களின் தொடக்கத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரானின் ‘அணுசக்தி திட்டத்துடன்’ தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறினார்.

மேலும், “இரான் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், அது மிகவும் குறுகிய காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை அடையலாம். இது ஒரு வருடம், சில மாதங்கள் அல்லது அதற்கு முன்பேகூட நிகழலாம். இஸ்ரேலின் இருப்புக்கு இது நேரடி மற்றும் கடுமையான அச்சுறுத்தலாக அமையும்” என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தற்போது இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு