மோதலின் போக்கை மாற்றிய அமெரிக்கா – இரான் எப்படி பதிலடி கொடுக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.எழுதியவர், ஜோ ஃப்ளோடோபதவி, பிபிசி 17 நிமிடங்களுக்கு முன்னர்

இன்று காலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றுவதற்காக பீடத்தின் மீது நின்ற பெஞ்சமின் நெதன்யாகு, தற்போதைய யுத்தத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிகழ்வுகள் குறித்து தனது தேச மக்களுக்கு முதலில் ஹூப்ரூ மொழியில் தெரிவிக்கவில்லை.

மாறாக, அமெரிக்கா இரானின் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு நேரடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை புகழ்ந்து ஆங்கிலத்தில் பேசினார்.

நெதன்யாகுவின் குரலில் வெற்றி தொனி இருந்தது, அதை அவரது புன்னகை மறைக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

இஸ்ரேலுக்கு இரானால் ஏற்பட வாய்ப்புள்ள அபாயம் என அவர் கருதுவது குறித்து, தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பகுதியை செலவிட்டுள்ளார்.

ராணுவ நடவடிக்கையால்தான் (அதுவும் அமெரிக்க ஆயுதங்களால்தான்) இரானின் அணு ஆயுத திட்டம் அழிக்கப்பட முடியும் என தனது அமெரிக்க கூட்டாளிகளை நம்பவைப்பதற்கு கடந்த 15 ஆண்டுகளின் பெரும்பகுதியை நெதன்யாகு செலவிட்டுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“வரலாற்றை மாற்றும்” தைரியமான முடிவை எடுத்ததற்காக டிரம்பைப் பாராட்டும்போது, இரானுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைவதற்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஆதரவாளர்களைக் கொண்டவரும், வெளிநாட்டில் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்தவருமான டிரம்ப்பின் மனதை மாற்றியதற்காகவும் நெதன்யாகு தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை புகழ்ந்து ஆங்கிலத்தில் பேசினார் நெதன்யாகுஅமெரிக்கா தாக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்?

இரான் எவ்வளவு சீக்கிரம் ஒரு அணு ஆயுதத்தை உருவாக்கமுடியும், அப்படி உருவாக்க முடிவு எடுத்திருக்கிறதா என்பதில் இஸ்ரேலின் கணிப்பை டிரம்பின் உளவு அமைப்புகள் பகிரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

பத்து நாட்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த மோதல் முழுவதிலும், இரானின் அபாயத்தை தானாவே எதிர்கொள்ளும் ஆற்றல் இருப்பதாக இஸ்ரேலின் அரசும் ராணுவமும் வலியுறுத்தி வந்தன.

ஆனால் இஸ்ரேலின் அணு ஆயுத நிலையங்களைச் சுற்றி அதிலும் குறிப்பாக ஒரு மலையின் ஆழத்தில் அமைந்துள்ள ஃபோர்டோ அணு ஆயுத நிலையத்தின் மிக வலிமையான பாதுகாப்புகளைத் தகர்க்க தேவையான வலிமையான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதில் ரகசியம் ஏதும் இல்லை.

நேற்றிரவு குண்டு வீசப்பட்ட அணு ஆயுத மையங்கள் இப்போது பயன்பாட்டில் இல்லாவிட்டால், போருக்கான தனது முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கூறி இஸ்ரேல் பிரதமர் தற்போதைய மோதலை முடிவுக்கு நெருக்கமாக கொண்டுவர வாய்ப்புள்ளது.

தனது பங்கிற்கு இரான் தன் வசம் உள்ள அணு ஆயுத பொருட்களை ஏற்கனவே இடமாற்றிவிட்டதாகச் சொல்கிறது.

ஆனால் நேற்றிரவு நடைபெற்ற குண்டுவீச்சு நடைபெறாமல் இருந்திருந்தால். தனது விமானப் படை பல வருடங்களாக தயார் செய்த இலக்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்களை ஒவ்வொன்றாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போரில் அமெரிக்கா நுழைந்தால் பதிலடி தரப்படும் என இரானின் அதி உயர் தலைவர் கடந்த வாரம் சூளுரைத்திருந்தார்.இரானின் எச்சரிக்கை

இரான் ராணுவம், அதன் தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள், அரசு கட்டமைப்பு, மற்றும் தனது குண்டுகள் அணுகக் கூடிய இரான் அணு ஆயுத திட்டங்கள் ஆகியவற்றிற்கு இஸ்ரேல் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஆனால் அணு ஆயுத அபாயம் நிச்சயமாக நீக்கப்பட்டுவிட்டது என்ற தெளிவான ஒரு புள்ளியை அடையும் வாய்ப்பு நெதன்யாகுவுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். இரானில் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் இதுபோன்ற ஒரு தருணத்தை தந்திருக்கக் கூடும்.

அமெரிக்காவின் பி2 விமானங்கள், போரின் போக்கை சந்தேகத்திற்கு இடமில்லாமல் மாற்றியுள்ளது. இது மேலும் தீவிரமடையுமா என்பது இரானும் அதன் கூட்டாளிகளும் எப்படி பதிலளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருக்கிறது.

போரில் அமெரிக்கா நுழைந்தால் பதிலடி தரப்படும் என இரானின் அதி உயர் தலைவர் கடந்த வாரம் சூளுரைத்திருந்தார்.

“அமெரிக்க ராணுவத்தின் எந்த தலையீடும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்ள வேண்டும்,” என ஆயதுல்லா அலி காமனெயி சொல்லியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க கப்பல்கள் தாக்கப்படும் என இரானின் ஆதரவு பெற்ற யேமேனின் ஹூத்தி குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.இரான் முன்பு உள்ள சில வழிகள்

அமெரிக்கா போரில் நுழைந்தால் செங்கடல் வழியாகப் பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் தாக்கப்படும் என இரானின் ஆதரவு பெற்ற யேமேனின் ஹூத்தி குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள், தொழில்கள் மற்றும் குடிமக்கள் சாத்தியமான இலக்குகளாக உள்ளனர்.

அமெரிக்க போர்க்கப்பல்கள், வளைகுடாவில் இருக்கும் தளங்கள் ஆகியவற்றை தாக்குவது, வளைகுடாவிலிருந்து கச்சா எண்ணெய் வினியோகத்தை தடை செய்வது மற்றும் பெட்ரோல் விலையை உயரச் செய்வது என இரான் விரும்பினால் பலவகைகளில் பதிலடி தரமுடியும்.

இப்போதைக்கு தனது ராணுவ நடவடிக்கை முடிவடைந்து விட்டதாகவும், டெஹ்ரானில் இருக்கும் அரசை கவிழ்ப்பதில் ஆர்வமில்லை என்றும் அமெரிக்கா உணர்த்தியுள்ளது.

அதிக உயிரிழப்பு ஏற்படாத வகையில் அமெரிக்க இலக்குகளை தாக்குவது அல்லது அதைச் செய்வதற்கு தனது ஆதரவு பெற்ற குழுக்களை பயன்படுத்துவது என இரான் தனது பதிலடியைக் குறைத்துக்கொள்ள இது தூண்டலாம்.

புரட்சிகர காவல்படைத் தலைவர் காசெம் சுலைமானியை கொலை செய்ய 2020ஆம் ஆண்டு டிரம்ப் உத்தரவிட்ட பிறகு, இரான் இந்த வழியைத்தான் பின்பற்றியது.

இரானின் எந்த பதிலடியையும் சமாளிக்க அதீதமான பலத்தைப் பயன்படுத்தப்போவதாக ஏற்கனவே இரானுக்கு விடுத்த அச்சுறுத்தலை டிரம்ப் சனிக்கிழமை இரவு மீண்டும் தெரிவித்தார்.

இது மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமா அல்லது போரில் இதை விட மோசமான ஒரு கட்டத்தின் தொடக்கமா என்பதைக் காண ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் காத்திருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு