பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்கா தாக்கிய இரானின் 3 அணுசக்தி தளங்களில் ஒன்றான ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படம்.எழுதியவர், நாடின் யூசிஃப் பதவி, பிபிசி செய்தியாளர்22 ஜூன் 2025, 07:16 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரான் – இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதல் அமெரிக்க ராணுவ நடவடிக்கை காரணமாக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் இரானின் மூன்று அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதுவே அந்த முக்கியக் கட்டம்.

“இரானில் மேலும் பல இலக்குகள் இன்னும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரவு அவர்களுக்கு மிகவும் கடினமானதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்திருக்கலாம்,” என்று அமெரிக்க மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக தகவலை தெரிவித்த டிரம்ப் இதைக் குறிப்பிட்டார்.

“இரான் சமாதானத்திற்கு வரவில்லையெனில், மீதம் இருக்கும் அந்த இலக்குகளை துல்லியமாக, வேகமாக, திறனோடு அழிக்க நாம் செல்வோம்,” என்றும் அவர் கூறினார்.

ஃபோர்டோ அமெரிக்கா குறிவைத்த இலக்குகளில் முக்கியமான ஒன்று. யுரேனியம் செறிவூட்டும் மையமான அது மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. இரானின் அணு ஆயுத கனவுகளுக்கான முக்கிய தளமாக அது இருந்தது. ஆனால் தாக்குதலுக்கு உள்ளான தளங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தின் தன்மை குறித்து நமக்கு தெரியவில்லை.

அமெரிக்காவின் இந்த தாக்குதல்களுக்கான திட்டமிடலின் போது “முழுமையான ஒத்துழைப்பை” அளித்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இரான், இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் என்று ஏற்கனவே அதன் அதிகாரிகள் கூறியிருந்தனர். அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தி தன்னுடைய பதிலடியை துவங்கலாம். அமெரிக்காவின் எந்த ஒரு தாக்குதலும் பிராந்தியத்தில் போரை ஏற்படுத்தும் என்று முன்னதாகவே இரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த தாக்குதல் தொடர்பாக நமக்கு கிடைத்த தகவல்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்!

காணொளிக் குறிப்பு, இரான் அணுஆயுத தளங்களை அழிக்க தேவைப்படும் ஆயுதம்; இஸ்ரேலுக்கு உதவ நேரடியாக களமிறங்குமா அமெரிக்கா?பின்னணி என்ன?

ஜூன் 13-ஆம் தேதி திடீரென தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல். இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மற்றும் ராணுவ இலக்குகள் மீது தாக்குதலை நடத்தியது அந்த நாடு.

இரானில் அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தில் இரான் இருந்தது. இந்த அணுசக்தி திட்டம் ஒரு நாள் அணுகுண்டை உருவாக்கக் கூடும் என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதுண்டு. தற்போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் அனைத்தும் இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இரானோ அந்த நாட்டின் அணுசக்தி தொடர்பான திட்டங்கள் ஆக்கப்பூர்வமானவை மட்டுமே என்று கூறியது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளையும் டிரோன்களையும் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியது இரான். இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தன. தற்போது இது ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மோதல் நீடிக்கிறது.

இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று டிரம்ப் நீண்ட நாட்களாக கூறி வருகிறார்.

மத்திய கிழக்கில் “முடிவே இல்லாத முட்டாள்தனமான போர்களில்” ஈடுபட்டதாக தேர்தல் பிரசாரத்தின் போது, முந்தைய அமெரிக்க அரசாங்கங்களை கடுமையாக விமர்சித்தார் டிரம்ப். வெளிநாடுகளில் நடைபெறும் இத்தகைய மோதல்களில் இருந்து அமெரிக்கா விலகி இருப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் தாக்குதலை நடத்திய போது இரானும் அமெரிக்காவும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரானுக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளிப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் அந்த வாக்குறுதிக்கு காலக்கெடு குறைவாகவே இருந்திருக்கிறது. வெறும் இரண்டே நாட்களில் இரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது.

காணொளிக் குறிப்பு, இரான்- இஸ்ரேல் மோதலால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்படுமா?இரானில் எங்கே அமெரிக்கா தாக்குதல் நடத்தியது?

இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டெஹ்ரானுக்கு தெற்கே மலைப்பகுதியில் ஃபோர்டோ உள்ளது. நிலத்திற்கு அடியில் இந்த தளம் யுரேனியம் செறிவூட்டும் மையமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. இது, இரானின் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்த முக்கியமான ஒரு தளமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிலத்திற்கு அடியில் ஆழமான பகுதியில் இது அமைக்கப்பட்டிருந்ததால் இஸ்ரேலின் ஆயுதங்கள் மூலம் அதன் மீது தாக்குதல் நடத்துவது சவாலானதாக இருந்தது. ஃபோர்டோவை அழிக்க தேவையான சக்தி வாய்ந்த, பெரிய “பங்கர் பஸ்டர்” குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே இருப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் அந்த குண்டு ஜி.பி.யூ 57 மாசிவ் ஆர்டினன்ஸ் பெனெட்ரேட்டர் (MOP) என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 13 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இது 18 மீட்டர் கான்க்ரீட் தடுப்பு அல்லது பூமியில் 61 மீட்டர் வரை ஊடுருவி சென்று வெடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஃபோர்டோ சுரங்கங்கள் 80 மீட்டர் முதல் 90 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த எம்.ஓ.பி. குண்டு முழுமையான வெற்றியைத் தரும் என்று கூற இயலாது. ஆனால் இது ஒன்று மட்டுமே இவ்வளவு ஆழத்திற்குச் சென்று தாக்குதல் நடத்தும் ஒன்றாகும்.

பிபிசியின் கூட்டாளியான சி.பி.எஸ் செய்திகளிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலின் போது , ஒவ்வொரு இலக்கின் மீதும் இரண்டு எம்.ஒ.பி. குண்டுகள் வீசப்பட்டதாக கூறினார்கள்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் இரான் அணுசக்தி தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன?

யுரேனியம் செறிவூட்டும் மையங்களில் அமெரிக்காவின் தாக்குதல் எத்தகைய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

இரான் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசான் அபேதினி இது குறித்து பேசும் போது, இரான் சில காலத்திற்கு முன்பே இந்த 3 தளங்களையும் காலி செய்துவிட்டதாக கூறினார்.

அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், “அங்கிருந்த பொருட்களை இரான் ஏற்கனவே அகற்றிவிட்டதால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை,” என்று கூறினார்.

“யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் முழுமையாக, மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன,” என்று டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்காவின் அரசியல் ராணுவ விவகாரங்களின் முன்னாள் துணை செயலாளார் பிபிசி செய்தியிடம் மிகவும் கவனமாக கருத்துகளை பதிவு செய்தார். “முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என்று கூற இயலாது,” என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் தன்னுடைய சமீபத்திய தாக்குதலை தொடங்கிய பிறகு இதுவரை 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 1200 பேர் காயம் அடைந்ததாகவும் இரான் தெரிவித்துள்ளது.

இரானின் முக்கிய அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான முன்னெடுப்புகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

கல்விக்கூடங்களுக்குச் செல்லுதல், கூட்டங்கள் மற்றும் வேலைக்குச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், US Air Force

படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம் இரான் எவ்வாறு பதிலடி தரும்?

இஸ்ரேல், இரானின் ராணுவத் தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களின் காரணமாக இரான் குறிப்பிட்ட அளவில் பலவீனமாக்கப்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் இரானின் கூட்டாளிகளான லெபனான் (ஹெஸ்பொலா), சிரியா மற்றும் காஸா (ஹமாஸ்) போன்றவையும் பலவீனம் அடைந்துள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் குறிப்பிடத்தக்க சேதத்தை இரானால் விளைவிக்கக் கூடும்.

அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடுவது தொடர்பாக ஏற்கனவே இரானிய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். அமெரிக்கா தலையிட்டால் ‘சரி செய்ய இயலாத சேதங்களை’ சந்திக்க நேரிடும் என்றும், இந்த பிராந்தியத்தில் முழு அளவிலான போருக்கு வழிவகை செய்யும் என்றும் கூறியிருந்தனர்.

அமெரிக்கா தலையிட்டால், இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்று இரான் எச்சரித்திருந்தது. மத்திய கிழக்கில் பஹ்ரைன், எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், கத்தார், சௌதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 19 இடங்களில் அமெரிக்கா தன்னுடைய ராணுவ தளங்களைக் கொண்டுள்ளது.

இவற்றில் வெளிப்படையான இலக்காக அமைந்திருக்கிறது பஹ்ரைனில் உள்ள மினா சல்மானில் செயல்பட்டு வரும் அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் தலைமை அலுவலகம்.

இது மட்டுமின்றி முக்கியமான கடல் போக்குவரத்து வழியான ஹோர்முஸ் நீரிணையையும் இரான் தாக்கலாம். பாரசீக வளைகுடாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது இந்த நீரிணை. உலகின் 30% கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாகவே நடக்கிறது. உலக சந்தையை சீர்குலைக்க மற்ற கடல் மார்க்கங்களையும் இரான் தாக்கலாம்.

அமெரிக்காவுக்கு உதவுவதாக இரான் நினைக்கும் அண்டை நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தலாம். இது இந்த பிராந்தியம் முழுவதும் போர் பரவுவதற்கு வழிவகை செய்யும்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முறையாக போரை அறிவிக்காமல் அமெரிக்க துருப்புகளை ராணுவ நடவடிக்கைகளில் அதிபரால் ஈடுபடுத்த முடியும்.டிரம்புக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையா?

அமெரிக்காவில் எந்த ஒரு நாட்டின் மீதும் போரை அறிவிக்க அதிபருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. பிரதிநிதிகள் சபை மற்றும் செனெட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றம் மட்டுமே போரை அறிவிக்க இயலும்.

ஆனால் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அதிபர் என்றும் சட்டம் கூறுகிறது. அதாவது முறையாக போரை அறிவிக்காமல் அமெரிக்க துருப்புகளை ராணுவ நடவடிக்கைகளில் அதிபரால் ஈடுபடுத்த முடியும்.

உதாரணத்திற்கு, 2017-ஆம் ஆண்டு, அசாத் அரசுக்கு எதிராக சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்த டிரம்ப் முடிவு எடுத்தார். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை அவர் பெறவில்லை. மாறாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான காரணங்களைச் சுட்டிக்காட்டி தன்னிச்சையாக டிரம்ப் அப்போது முடிவெடுத்தார்.

இரண்டு சபைகளிலும் உள்ள உறுப்பினர்கள், இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு உத்தரவிடும் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த விரும்பினார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூலம் போர் தொடர்பாக அறிவிக்க வைக்க அவர்கள் முயன்றனர். ஆனால் முறையாக வாக்கெடுப்பு நடக்க சில வாரங்கள் ஆகலாம். இத்தகைய நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதைக் காட்டிலும் அடையாள அளவில் மட்டுமே உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு