Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஒரு வாரத்துக்கு முன்பு வால்பாறை வந்த சிறுமி சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த சோகம்
படக்குறிப்பு, வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.எழுதியவர், பி சுதாகர்பதவி, பிபிசி தமிழுக்காக21 ஜூன் 2025, 15:28 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வால்பாறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுத்தை ஒன்று காட்டிற்குள் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காவல்துறையினர், வனத்துறையினரின் 18 மணிநேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் நடந் இந்தச் சம்பவம் வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
தாயின் கண்முன்னே தூக்கிச் சென்ற சிறுத்தை
படக்குறிப்பு, காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு அமைந்துள்ளதுவால்பாறை அருகே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ளது.
இங்கு 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 300 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
நேற்று (ஜூன் 20) மாலை 6:30 மணியளவில் காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்கு வெளியே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முந்தா, மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினி விளையாடிக் கொண்டிருந்தார்.
தாய் மோனிகா தேவி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமி ரோசினியை தூக்கிச் சென்றது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை கண்ட மோனிகா தேவி அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் தேடுதல் பணியில் நேற்று இரவு 7:00 மணி முதல் ஈடுபட்டனர்.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர் டிரோன் கேமரா மூலம் சிறுமியைத் தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (ஜூன் 21) மதியம் 12 மணியளவில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள யூகலிப்டஸ் காட்டிற்குள் சிறுமியின் சடலம் கண்டறியப்பட்டது.
வால்பாறை வந்த ஒரே வாரத்தில் நேர்ந்த சோகம்
சிறுமியின் பெற்றோர் கடந்த ஒரு வருடமாக இளைய மகனுடன் தங்கி வால்பாறையில் தங்கி வேலை செய்து வரும் நிலை மகள் ரோசினியை கடந்த வாரம்தான் அழைத்து வந்துள்ளனர்.
வால்பாறை காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், “நேற்று மாலை 6.30 மணியளவில் குழந்தையின் தாய் தண்ணீர் பிடித்து வீட்டிற்குள் வைக்க செல்லும் போது, சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தேடினோம். அதன் பின்னர் காவல்துறை மற்றும் வனத்துறை இணைந்து மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதுபோல கடந்தாண்டு ஊசிமலை பகுதியில் சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளியின் குழந்தை உயிரிழந்தது. இது இரண்டாவது உயிரிழப்பு சம்பவம்.” என்றார்.
வனத்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை
படக்குறிப்பு, சிஐடியூவின் வால்பறை செயலாளரான பரமசிவம்வால்பாறையில் மனித – வனவிலங்கு மோதலைத் தடுக்க வனத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதவில்லை என்கிறார் செயற்பாட்டாளரும் சிஐடியூவின் வால்பறை செயலாளருரான பரமசிவம்.
மேலும் “தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. வனவிலங்கு – மனித மோதலை தடுக்க வனப்பகுதியில் விலங்குகளுக்கு போதுமான உணவு, நீர் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அகழிகள், மின் வேலிகள் அமைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்
வால்பாறையில் போதிய வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் இல்லை எனக் கூறுகிறார் பரமசிவர், “10 முதல் 15 வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட வேண்டும் எனத் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”என்கிறார்
“குறைவான எண்ணிகையிலேயே வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எஸ்டேட் பகுதிகளில் போதிய தெருவிளக்கு வசதிகளை செய்ய வேண்டும். இவற்றை மேற்கொண்டால் மீண்டும் இதுபோல் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.” என்றார்.
வால்பாறையில் அசாம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 2585 புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுவதாகக் கூறும் அவர், “வனவிலங்கு அச்சுறுத்தல் நிறைந்த பகுதியில் குழந்தைகள் பெற்றோர் துணையின்றி வெளியே செல்வது ஆபத்தானது. பெற்றோர் கூடுதல் கவனத்துடன் அவர்களை பார்த்துக் கொள்ளவேண்டும். தேயிலை தோட்ட நிர்வாகம், காவல்துறை, வனத்துறையினர் இணைந்து வடமாநில தொழிலாளர்களுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
வடமாநில தொழிலாளர்களுக்கு மொழிச் சிக்கலா?
படக்குறிப்பு, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ்சிறுத்தைகள் பெரும்பாலும் குழந்தைகளையே குறிவைக்கும் எனக் கூறும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், பெற்றோர்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசியவர், “குழந்தைகளை வெளியே விடவேண்டாம் என தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே விழிப்புணர்வு வழங்கியுள்ளோம். குறிப்பாக புலம்பெயர் வடமாநில தொழிலாளர்களுக்கு இந்தி மொழியிலும் விழிப்புணர்வு வழங்கினோம். நேற்று நடந்த சம்பவத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த குழந்தையை சிறுத்தை தூக்கி சென்றுள்ளது. பெற்றோர் தடுக்க முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை. நேற்று மழை பெய்ததால் முழுமையாக தேட முடியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் குழுக்கள் அமைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
படக்குறிப்பு, குழந்தைகளைக் குறிவைக்கும் சிறுத்தைகள்வால்பாறை பகுதியில் 90 தேயிலை தோட்டங்கள் உள்ளன. புதிதாக இங்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நிலப்பரப்பை பற்றி முழுமையாக தெரிவதில்லை எனக் கூறுகிறார் வெங்கடேஷ். தொடர்ந்து பேசிய அவர், “வடமாநில தொழிலாளர்களுக்கு வனத்துறை அவர்கள் மொழியிலேயே விழிப்புணர்வு அளித்து வருகிறது. ஆனால் புதிது புதிதாக தொழிலாளர்கள் வந்து கொண்டிருப்பதால், விழிப்புணர்வை முழுமையாக கொண்டு சேர்ப்பதில் சிக்கல் உள்ளது.”
“தேயிலை தோட்ட நிர்வாகங்களிடம் பேசி இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்கு தாக்குதலை தடுக்க தொடர்ச்சியான பணிகளை வனத்துறை மேற்கொள்கிறது. தற்போது குடியிருப்பு பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் 80 முதல் 90 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, பச்சமலை தேயிலை தோட்ட தொழிலாளியான முருகேஷ்அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை உள்ளது
பச்சமலை வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி எனக் கூறுகிறார் தேயிலை தோட்ட தொழிலாளியான முருகேஷ்.
அங்குள்ள நிலைமை குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தவர், “நானும் எனது அண்ணன் லட்சுமணனும் தான் தேயிலை தோட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுமியின் சடலத்தை முதலில் கண்டுபிடித்தோம். இந்த பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி போன்ற விலங்குகள் அதிகளவில் உள்ளன. இரவு வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்கள் அச்சத்துடனே வரவேண்டிய சூழல் உள்ளது.” என்றார்.
பல வருடங்களாக இங்கேயே வசித்து வரும் தொழிலாளர்கள் குழந்தைகளை மாலை 6 மணிக்கு மேலே வெளியே அனுப்புவதில்லை எனக் கூறுகிறார் முருகேஷ்.
“பள்ளி முடித்து வரும் குழந்தைகளை பேருந்து நிலையம் சென்று அழைத்து வருகிறோம். இந்தப் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என புதிதாக இங்கு வரும் தொழிலாளர்களுக்கு கூறி வருகிறோம்.”
படக்குறிப்பு, ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்தே வாழும் வாழ்க்கை எங்களுடையது”வட மாநிலங்களில் அவர்கள் வாழ்ந்து வந்த சூழலுக்கு மாறான சூழல் இங்கு உள்ளது. காலை 7:30 மணிக்கு வேலைக்குச் சென்று மாலை 5:00 மணிக்கு வீடு திரும்புவோம். வனவிலங்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்தே வாழும் வாழ்க்கை எங்களுடையது” என்றார் முருகேஷ்
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடுமலை, வெள்ளமலை, ஊசிமலை, பச்சைமலை பகுதிகளில் இதுவரை 4 வடமாநில தொழிலாளர் குழந்தைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு இல்லை
பச்சமலை தெற்கு டிவிஷன் பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்டத்தொழிலாளர் மேனகா பிபிசி தமிழிடம் பேசுகையில், “குடியிருப்பு பகுதியைச் சுற்றியுள்ள வேலிகளை சுற்றி புதர்காடுகள் வளர்ந்துள்ளன. வீடுகளைச் சுற்றி பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து வீடுகளை முழுமையாக முடியுள்ளது. துளிகூட வெளிச்சமில்லாமல் இருப்பதால் வனவிலங்குகள் இருப்பை அறிந்து கொள்ள முடிவதில்லை. வேலிகளை சூழ்ந்துள்ள புதர்களை அகற்றி, மரங்களின் பக்கவாட்டு கிளைகளை வெட்டினால்தான் வெளிச்சம் கிடைக்கும். இது வனவிலங்கு அருகில் இருப்பதை பார்த்து பாதுகாப்பாக இருந்து கொள்ள உதவும்” என்றார்.
வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க அகழி அமைக்கப்படுமா?
படக்குறிப்பு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர்கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் பிபிசியிடம் கூறும்போது, “உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கூண்டு அமைத்து கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்க உள்ளனர். வனத்துறை மூலம் வனவிலங்கு நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.”
“எந்தெந்த பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்து அங்கு மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தைகள் வரும் பகுதி பெரும்பாலும் தனியார் தேயிலை தோட்டங்களாக உள்ளது. அங்கு அகழிகள் அமைப்பதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து தேவைப்பட்டால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இரவு நேரங்களில் வனவிலங்கு நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை மூலம் தொடரந்து விழிப்புணர்வு வழங்கப்படும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு