பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாவெல் துரோவ், டெலிகிராம் நிறுவனர்எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ்பதவி, வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள்2 நிமிடங்களுக்கு முன்னர்

டெலிகிராம் ஆப்-ன் நிறுவனர் பாவெல் துரோவ், தனக்குப் பிறந்த நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு, தனது 13.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை பகிர்ந்தளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“அவர்கள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள், எனது காலத்திற்குப் பிறகு அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் இருக்கும்! அவர்களை பிரித்துப் பார்க்க நான் விரும்பவில்லை” என, லே பாயிண்ட் என்ற பிரான்ஸ் அரசியல் பத்திரிகையிடம் பாவெல் துரோவ் தெரிவித்தார்.

தனது மூன்று வெவ்வேறு துணைகள் மூலம் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தான் “அதிகாரப்பூர்வ தந்தை” என்று பாவெல் துரோவ் கூறினார்.

“பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு உதவுவதற்காக விந்தணு தானம் செய்யத் தொடங்கினேன். நான் செய்த விந்தணு தானம் மூலம், 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை அண்மையில் என்னிடம் தெரிவித்தது” என்று அவர் தெரிவித்தார்.

பிரான்சில் தான் எதிர்கொள்ளும் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

’30 ஆண்டுகளுக்கு சொத்தை அனுபவிக்க முடியாது’

தானாகவே தனது நாட்டில் இருந்து வெளியேறிய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநரான பாவெல் துரோவ், தனது குழந்தைகளுக்காக தான் கொடுக்கும் சொத்தை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு பெற முடியாது என்றும் லே பாயிண்ட் பத்திரிக்கையுடனான நேர்காணலில் தெரிவித்தார்.

“எனது குழந்தைகள் சாதாரண மனிதர்களைப் போல வாழ வேண்டும், சுயமாகவே தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், வங்கிக் கணக்கைச் சார்ந்து இருக்காமல் தாங்களே செல்வத்தை உருவாக்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

அவரது கருத்தை பெற பாவெல் துரோவை பிபிசி அணுகியது.

மேலும், “சுதந்திரமாக செயல்படுவதால், சக்திவாய்ந்த நாடுகள் உட்பட பல எதிரிகள் உருவாகின்றனர்” எனவும், அதனாலேயே தற்போது உயில் எழுதியதாகவும் 40 வயதான பாவெல் தெரிவித்தார்.

தனியுரிமை மற்றும் மறைகுறியாக்கப்பட்ட செய்தி பறிமாற்றம் போன்றவற்றால் பிரபலமான டெலிகிராம் செயலி, மாதத்திற்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிரான்சில் கைது

குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில், டெலிகிராம் செயலியை முறையாக நிர்வகிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட பாவெல் கடந்த ஆண்டு பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் மோசடி தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தவறியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

உள்ளடக்கத்தில் போதிய அளவு கட்டுப்பாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டை டெலிகிராம் முன்பே மறுத்துள்ளது.

லே பாயிண்ட் பத்திரிகைக்கு பாவெல் அளித்த பேட்டியில், இந்தக் குற்றச்சாட்டுகள் “முற்றிலும் அபத்தமானது” என்று விவரித்தார்.

“குற்றவாளிகள் எங்கள் சேவையைப் பயன்படுத்துவதால், டெலிகிராம் செயலியை இயக்குபவர்களை குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ் தற்போது துபையில் வசிக்கிறார். அங்குதான் டெலிகிராம் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடியுரிமைகளை அவர் வைத்துள்ளார்.

VKontakte சமூக ஊடக நிறுவனத்தை நிறுவிய பாவெல் தூரோவ், பதிவுகளைத் தணிக்கை செய்யுமாறு ரஷ்ய அரசு முன்வைத்த கோரிக்கைகளை மறுத்ததால், நிறுவனத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாக 2014-ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.

2013இல், பாவெல் தூரோவ் நிறுவிய டெலிகிராம் செயலி ரஷ்யாவில் பிரபலமாக உள்ளது.

200,000 உறுப்பினர்கள் வரையிலான குழுக்களை டெலிகிராம் செயலி அனுமதிக்கிறது. இது, தவறான தகவல்களைப் பரப்புவதை எளிதாக்குகிறது என்றும், சதித்திட்டம், நவீன நாஜி கொள்கை, குழந்தை பாலியல் அல்லது பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கத்தைப் பயனர்கள் பகிர்வதை எளிதாக்குகிறது என்றும் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

“2018 முதல், டெலிகிராம் பல வழிகளில் சிறார் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. அவை ஒரு முறை தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை, மற்றொரு பயனர் பதிவேற்றம் செய்வதை தடுப்பது, உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்யும் குழுக்கள், அரசு சாரா அமைப்புகளின் உதவி எண்கள், மற்றும் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்த நாள் அனுமதி அறிக்கைகள்” என இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டார் துரோவ்

“குழந்தை ஆபாச உள்ளடக்கங்களை அகற்ற டெலிகிராம் எதுவும் செய்யவில்லை என்று கூறுவது, மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரமாகும்” என்று அவர் கூறுகிறார்.

“பிற தளங்களில் பயன்படுத்தப்படுவதைப் போல பரபரப்பான விஷயங்களை ஊக்குவிக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தாததால், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு டெலிகிராம் செயலி பயனுள்ளதாக இல்லை” என்று டெலிகிராம் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த கோடையில் பிரிட்டனின் பல நகரங்களில் வன்முறைக் குழப்பத்தை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்த தீவிர வலதுசாரி சேனல்களை இயங்க அனுமதித்ததால் பிரிட்டனில் டெலிகிராம் செயலி தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

சில குழுக்களை டெலிகிராம் நீக்கியது. ஆனால் ஒட்டுமொத்தமாக தீவிரவாத மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் அதன் அமைப்பு, பிற சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் மெசஞ்சர் செயலிகளை விட ஒப்பீட்டளவில் பலவீனமானது என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“வன்முறைக்கான அழைப்புகளைப் பகிரும் அனைத்து சேனல்களையும் நீக்கியுள்ளதாக” டெலிகிராம் செயலி கூறுகிறது.

மேலும் அதன் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றவற்றை விட பலவீனமானது என்பதை அது மறுக்கிறது.

“இது தவறானது,” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“டெலிகிராமின் கட்டுப்பாடு அமைப்பானது, தொழில்துறை தரநிலைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது அல்லது அதைவிட அதிகமாகவே இருக்கிறது.”

“வன்முறையைத் தூண்டுதல், குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை பகிர்தல் மற்றும் சட்டவிரோத பொருட்களை வர்த்தகம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் சேனல்கள் டெலிகிராம் செயலியின் சேவை விதிமுறைகளை மீறுகின்றன. இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான குழுக்களையும், சேனல்களையும் பிளாக் செய்து, அன்றாடம் மில்லியன் கணக்கான உள்ளடக்கங்களை நீக்குகிறோம்” என்று டெலிகிராம் செயலியின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு