Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கட்டபொம்மன் – எட்டப்பனை பகைவராக்கிய ஆங்கிலேயரின் தந்திரம்; உதவி செய்த எட்டப்பனுக்கு என்ன கிடைத்தது?
படக்குறிப்பு, ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலைஎழுதியவர், கா.அ.மணிக்குமார்பதவி, ஓய்வு பெற்ற பேராசிரியர் (வரலாறு), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தமிழ்நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில், தவிர்க்க முடியாத ஒரு அத்தியாயம் என்றால் அது வீரபாண்டிய கட்டபொம்மனும், எட்டப்பனும் என்றே கூறலாம்.
பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம் எனும் இந்த இரு பாளையங்களின் வரலாறு மற்றும் அவற்றுக்கு இடையேயான பகை குறித்தும், அது பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்கு எப்படி வழிவகுத்தது என்பதையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
டெல்லி சுல்தான் முகமது அலாவுதீனால் விஜயநகர மன்னர் இரண்டாம் தேவராயர் தோற்கடிக்கப்பட்ட பின் (1423) குமாரமுத்து எட்டப்பர் சந்திரகிரியிலிருந்து (தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம்) ‘ஆயுதமேந்திய 64 உறவினர்கள், 300 வீரர்கள், அவர்களை அண்டி வாழ்ந்த 1000 பேர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கணக்கர்கள், இதர சிலர்’ என தனது ஆதரவாளர்களுடன் மதுரைக்குத் தப்பி ஓடி, அதிவீர பராக்கிரம பாண்டிய மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்.
பாண்டிய மன்னர் அவரை “சட்டவிரோதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த கள்ளர்ளை” ஒடுக்க நியமித்து, பராமரிப்புக்காக சில கிராமங்களை வழங்கினார். அவ்வாறு குடியேறியவர்கள் காலப்போக்கில் தெற்கு நோக்கி நகர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் பல கிராமங்களைக் கையகப்படுத்தி, தங்கள் தலைவரான குமாரமுத்து எட்டப்பரின் நினைவாக ஒரு தலைமையகத்தை உருவாக்கி அதற்கு எட்டயபுரம் என்று பெயரிட்டனர்.
எட்டயபுரம் பாளையமாக அங்கீகரிக்கப்பட்ட அதே ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் உள்ளூர் ஆவணங்களில் நான்கு கட்டபொம்மன்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
முதலாவது கட்டபொம்மன் பெயர் 1709ஆம் ஆண்டு ஆவணங்களில் காணப்படுவதாக பிஷப் கால்டுவெல் குறிப்பிடுகிறார். கர்னல் ஹெரான் ராணுவப் படையெடுப்பின் போது (1755) பாளையக்காரராக இருந்தவர் இவர். இரண்டாவது கட்டபொம்மன் ஜெகவீரர், இவர் 1760இல் பதவிக்கு வந்து 1790ஆம் ஆண்டு வரை பாளையக்காரராக இருந்தவர். மூன்றாவது வீர பாண்டிய கட்டபொம்மன் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்து 1799இல் தூக்குமேடை ஏறியவர். நான்காவது கட்டபொம்மனும் அதே ஆண்டு தூக்கிலிடப்பட்டவர்.
நாயக்கர் அரசு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மதுரை திருமலை நாயக்கர் மண்டபம் (கோப்புப் படம்)மதுரை நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் (1529-1736) தென் தமிழ்நாட்டில் 72 பாளையக்காரர்களின் கீழ் 72 கோட்டைகள் அமைக்கப்பட்டன. இந்த 72 பாளையங்களில் பாஞ்சாலங்குறிச்சியும் எட்டயபுரமும் அடங்கும்.
பாஞ்சாலங்குறிச்சி அதன் அதிகார வரம்பில் 90 கிராமங்களையும் எட்டயபுரம் 106 கிராமங்களையும் கொண்டிருந்தன. நிலப்பிரபுத்துவ முறைப்படி, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் ஒரு படையையும், அந்தந்த பகுதிகளிலிருந்து வசூலிக்கப்பட்ட நில வருவாயிலிருந்து ஒரு தொகையையும் மத்திய ஆட்சியிலிருப்பவருக்கு கப்பமாக செலுத்த இவர்கள் கடமைப்பட்டிருந்தனர்.
1736ஆம் ஆண்டு ராணி மங்கம்மாள் இறந்த பின் நாயக்கர் ஆதிக்கம் மறைந்தது. குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை பாளையக்காரர்கள் அரசர்களாகவே மாறி இருந்தனர். ஆளும் நாயக்கர் வம்சத்தினரிடையே ஏற்பட்ட வாரிசுச்சண்டைகள், அதைத்தொடர்ந்து பிராந்திய ஆதிக்கத்திற்கென நடுத்தர அளவிலான பாளையங்களிடையே ஏற்பட்ட போட்டி கர்நாடக நவாப்பின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.
நவாப் ஆட்சி
கர்நாடக நவாப் பதவிக்கான வாரிசுரிமைப் போரின் போது பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவு பெற்றிருந்த சந்தா சாஹிப்பிற்கு எதிராக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தனது ஆதரவு பெற்ற முகமது அலிக்கு பணம், படை, ஆயுதங்கள் ஆகியவற்றிற்கான செலவினங்களுக்காக ஒரு பெரும் தொகையை கடனாகக் கொடுத்திருந்தது.
1763ஆம் ஆண்டுப் போர் ஆங்கிலேயர் வெற்றியில் முடிந்தபின் முகமது அலி ஆற்காடு நவாப்பாக 1765இல் முடிசூட்டப்பட்டார்.
அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, கிழக்கிந்திய கம்பெனியின் கடனை வட்டியுடன் (20 முதல் 40% வரை வட்டி) அடைக்க கட்டாயப்படுத்தப்பட்டார். திவாலாகி, கம்பெனியின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிருந்தது மட்டுமின்றி அவர் அதிகாரத்தில் நீடிக்க வேண்டுமானால், மேலும் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
எனவே, 1780ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வளமான பகுதிகளை அடமானம் வைத்து, வட்டிக்குக் கடன் கொடுக்கும் சில ஆங்கிலேயரிடமிருந்து கூடுதல் கடன்களைப் பெறுவதைத் தவிர நவாபுக்கு வேறு வழியில்லை.
தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலியில், கந்து வட்டிக்காரர்களாக இருந்து அடமானத் திட்டத்தின் கீழ் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் கிராமப்புறங்களைச் சுரண்டி, பெருமளவில் செல்வத்தைக் குவித்தனர்.
1785ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆங்கிலேய பணக் கடன் வழங்குபவர்கள் அடமானமாக எடுத்துக்கொண்ட பகுதிகளிலிருந்து ‘இளவரசர்களை’ ஓட்டாண்டிகளாக்கியதாக எட்மண்ட் பர்க் குற்றம்சாட்டினார். அவரது கணக்கீட்டின்படி 1760 முதல், கர்நாடகத்திலிருந்து வெளியேறி நேரடியாக பிரிட்டனுக்குச் சென்ற பணம் கிட்டத்தட்ட 20 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1756ஆம் ஆண்டு ஏழாண்டுப்போர் வெடித்தது.டச்சுக்காரர்களுடனான உறவு
கர்நாடகப் போர்களில் அடைந்த வெற்றிகளைத் தொடர்ந்து கிழக்கிந்திய நிறுவன நிர்வாகிகள் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்க திட்டமிட்டிருந்ததை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் ஜெகவீர கட்டபொம்மன் (வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை) புரிந்துகொண்டார்.
எனவே அவரும், சிவகிரி பாளையக்காரர் வரகுண ராம பாண்டியன் சின்னத்தம்பியும் சேர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கொழும்பில் அப்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்துடன் போரில் ஈடுபட்டிருந்த டச்சுக் காலனி அரசாங்கத்துடன் ஒரு ராணுவ ஒப்பந்தத்தை அவர்கள் இருவரும் மேற்கொண்டனர்.
டச்சுக்காரர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, அருகிலுள்ள பாளையங்கோட்டையில் இருந்த ஆங்கிலேயர் படையை வெளியேற்ற டச்சுக்காரர்கள் உதவினால், டச்சுக்காரர்களின் நலனுக்காக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிழக்கு பாளையக்காரர்களின் (நாயக்க பாளையக்காரர்கள்) ஆதரவைப் பெற்றுத் தருவதாகவும், போதுமான ஆயுதங்கள் வழங்கப்பட்டால், டச்சுப் படைகளுக்கு உதவ ஏராளமான பியூன்களை (பயிற்சியற்ற காலாட்படை வீரர்கள்) நியமிக்கவும் ஜெகவீர கட்டபொம்மன் உறுதியளித்தார்.
இலங்கையின் டச்சு ஆளுநர் வில்லெம் பால்க், ஜெகவீரரின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அவரை டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் பாளையக்காரராக அங்கீகரித்தார்.
ஜெகவீரர் ஆங்கிலேயர்களுடனான மோதலை எதிர்பார்த்து, தனது கோட்டையைப் பழுதுபார்த்து வலுப்படுத்தி, போதுமான வெடிமருந்துகளை சேகரித்தார். சில பீரங்கிகுண்டுகள், துப்பாக்கி ரவைகள் போன்றவற்றை சிறிது பணத்துடன் டச்சுக்காரர்கள் வழங்கினாலும், டச்சு நிறுவனம் விரைவில் நிதி நெருக்கடியில் சிக்கியதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கு நேர்மாறாக, வங்காளத்தில் வலுப்பெற்றிருந்த ஆங்கிலேயர்கள் அங்கிருந்து கிடைத்த செல்வத்தினால் தங்கள் ஆயுதங்களையும் படைகளையும் வலுப்படுத்தும் நிலையில் இருந்தனர்.
சிவகிரி பாளையக்காரர், கேப்டன் கிரஹாம்பெல்லைக் கொன்று, கொழும்பிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட டச்சுப் படைக்கு வழங்குவதற்கு போதுமான ஆயுதங்களைச் சேகரித்திருந்தார். ஆனால் 1782ஆம் ஆண்டில் ஆங்கிலேய லெப்டினன்ட் வீலர் தூத்துக்குடியைக் கைப்பற்றினார். புன்னக்காயல், மணப்பாடு ஆகிய இடங்களில் இருந்த டச்சு நிறுவனங்கள் இடிக்கப்பட்டன. தூத்துக்குடியில் டச்சு அரசு வீழ்ந்ததன் விளைவாக ஜெகவீரரின் திட்டம் தோல்வியடைந்தது.
ஃபுல்லர்டன் படையெடுப்பு
1780ஆம் ஆண்டு ஹைதர் அலி கர்நாடகத்தில் தாக்குதல் நடத்திய போது சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கப்பம் செலுத்துவதை பாளையக்காரர்கள் நிறுத்தினர். 1781ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் மைசூர் போர் தீவிரமடைந்ததால், பாளையக்காரர்களிடமிருந்து கப்பம் வசூலிக்கும் அதிகாரத்தை மாற்ற நவாப் கிழக்கிந்திய நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.
இந்த நேரத்தில் ஜெகவீரர் மற்றும் சிவகிரி பாளையக்காரரின் படைகள் தலைமையிலான சுமார் 10,000 வீரர்கள் திருநெல்வேலி பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அவர்களை எதிர்கொள்ள வில்லியம் ஃபுல்லர்டன் தலைமையில் ஒரு பெரிய படையை அனுப்பியது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வரி செலுத்த திணறிய பாளையங்கள்
தொடர்ச்சியாக பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி மக்களை விவசாயத்தைக் கைவிட கட்டாயப்படுத்தியிருந்த நிலையில் பாளையக்காரரின் வரி வசூல் குறைந்து, ஒவ்வொருவரும் அவரவர் பங்கை குறித்த நேரத்தில் செலுத்த முடியாது திணறினர்.
பதினெட்டு ஆண்டுகளில் (1765-1783), பாளையக்காரர்களிடமிருந்து வர வேண்டிய கப்பம் ஆண்டுக்கு ஒரு லட்சம் சக்கரங்கள் (அன்று புழக்கத்தில் இருந்த நாணயம்). ஆனால் சுமார் 40,000 சக்கரங்கள் மட்டுமே கருவூலத்தைச் சென்றடைந்ததாகக் கணக்கிடப்பட்டது.
இச்சூழலில், விவசாயிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில், ஜெகவீர கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்கு மக்களிடமிருந்து பெரும் ஆதரவு இருந்தது.
கூட்டமைப்பில் இருந்த முப்பத்திரண்டு தலைவர்கள் 1,20,000 பவுண்டுகள் செலுத்த ஒப்புக்கொண்டால், அவர்களின் கிளர்ச்சியை மன்னித்து, படைகளை திரும்பப் பெறுவதாக ஃபுல்லர்டன் கூறிய ஆலோசனையை பஞ்சாலங்குறிச்சி, சிவகிரி, சொக்கம்பட்டி பாளையக் ரர்கள் நிராகரித்து, கம்பெனிப் படைகள் மீது தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்க ஃபுல்லர்டன் எடுத்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
படக்குறிப்பு, எட்டயபுர அரண்மனையின் தற்போதைய தோற்றம்கலெக்டர் லஷிங்டன்
திருநெல்வேலியின் கலெக்டராக (பாளையக்காரர், ஜமீன்தார் செலுத்த வேண்டிய வரியை வசூலிக்கும் அதிகாரி) 1785 முதல் 1790 வரை லஷிங்டன் இருந்தார். அவரது காலத்தில் பாளையக்காரர்கள் மீது தனித்தனியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிவகிரி பாளையக்காரர் சேத்தூர் பாளையக்காரரைத் தாக்கி அவரையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்தார் எனக் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டார். கர்னல் மேக்ஸ்வெல்லின் நிபந்தனைகளை ஏற்கவும், நிலுவைத் தொகையை செலுத்தவும் மறுத்ததால் சொக்கம்பட்டி பாளையக்காரரின் பதவி பறிக்கப்பட்டது.
சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே எழுந்த பிரச்னையில் தந்தைக்கு ஆதரவாக செயல்பட்டு பாளையத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, சிவகிரி பாளையக்காரரை கட்டபொம்மனின் கூட்டமைப்பில் சேராமல் செய்தனர் ஆங்கிலேயர்கள். இவ்வாறு கட்டபொம்மனை ஓரளவு தனிமைப்படுத்திய பிறகு கட்டபொம்மன் மீது தாக்குதல் நடத்தினர்.
கட்டபொம்மன் – எட்டப்பனை பகைவராக்கிய ஆங்கிலேயரின் தந்திரம்
பதினெட்டாம் நூற்றாண்டில் எட்டயபுரம் பாளையக்காரர், அனைத்து கிழக்கு பாளையக்காரர்களின் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கியிருந்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரைச் சார்ந்து இருந்தார். கர்னல் ஹெரான், 1755ஆம் ஆண்டு தனது ராணுவப் படையெடுப்பின் போது, இந்த இரண்டு பாளையக்காரர்களிடமிருந்து நிலுவையிலிருந்த வரியையும், நன்னடத்தைக்கான பணயக் கைதிகளையும் பெற்றார்.
அடுத்த ஆண்டு (1756) பூலித்தேவர் ஏற்படுத்திய கூட்டமைப்பிலிருந்து இரு பாளையக்காரர்களும் விலகி இருந்ததற்கு இதுவே காரணம்.
கட்டபொம்மனின் கூட்டமைப்பில் இணைய வேண்டுமா அல்லது ஆங்கிலேயர்களுடன் கூட்டணி சேர வேண்டுமா என்ற ஊசலாட்டத்தில் இருந்த எட்டப்பன், லஷிங்டன் காலத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் வலுவான ராணுவ ஆற்றலை உணர்ந்தார்.
1792ஆம் ஆண்டில் தெற்கு பாளையங்களின் முழு கட்டுப்பாட்டையும் ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்ட தருணத்தில், பாளையங்களை மறுசீரமைக்கும் சாக்கில் கட்டபொம்மனின் அதிகார வரம்பில் இருந்த இரண்டு கிராமங்களை எட்டப்பனுக்கு மாற்றினர்.
அப்போது தனது தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கிராமங்களை எட்டப்பனுக்கு மாற்ற மறுத்துவிட்டார். இது எட்டப்பனை ஆங்கிலேயர்களை நேரடியாக ஆதரிப்பது எனத் தீர்மானிக்கச்செய்தது. அதன் பின் (1797) எட்டப்பன் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டபொம்மனை எதிரியாகக் கருதி எடுக்கப்பட்டவையே.
படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே ஆங்கிலேய படைபாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சி
கர்னல் அக்னீவ் தலைமையிலான ஆங்கிலேயர் படை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்தது (1799). இந்த இறுதிச் சண்டையின் போது கட்டபொம்மனும் அவரது ஆதரவாளர்களும் தப்பிச் சென்ற போது, மீண்டும் பொறுப்பேற்றிருந்த மேஜர் பானர்மெனின் வேண்டுகோளுக்கு இணங்க எட்டயபுரம் பாளையக்காரர் ஒரு படையை அனுப்பினார்.
‘அவர்கள் தங்கள் நாட்டைப் பற்றிய அறிவைக் கொண்டு’, கட்டபொம்மனை கொல்லர்பட்டியில் கண்டுபிடித்ததாக பானர்மென் எழுதுகிறார். ஆனால் கம்பெனிப் படைகள் அங்கு சென்றடைவதற்கு முன் கட்டபொம்மன் தப்பிச் சென்றுவிட்டார்.
கட்டபொம்மனின் முக்கிய ஆலோசகரும் பாளையத்தின் தலைமை நிர்வாகியுமான சுப்பிரமணிய பிள்ளை பிடிபட்டார். பிடிபட்ட சுப்பிரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டு, துண்டிக்கப்பட்ட அவரது தலை திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
மேஜர் பானர்மென் எட்டயபுரம் பாளையக்காரருக்கு தனது நன்றியை உரித்தாக்கும் விதமாக இரண்டு சால்வைகளையும் ஒரு குதிரையையும் பரிசளித்தார். அடுத்த ஆண்டில், பானர்மேன் கம்பெனி மேலதிகாரிகளின் உத்தரவு பெற்று பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கீழிருந்த 79 கிராமங்களை எட்டப்பனுக்கு பரிசாக வழங்கினார்.
தூக்கிலிடப்படுவதற்கு முன் கட்டபொம்மன் செய்தது என்ன?
பானர்மெனுடன் நல்லுறவிலிருந்த புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் தனது படையொன்றை அனுப்பி கட்டபொம்மனைக் கைது செய்துவிட்டு, பானர்மெனுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பானர்மென் கட்டபொம்மனை திருநெல்வேலிக்குக் கொண்டுவர தனது படையை அனுப்பினார்.
அனைத்து பாளையக்காரர்கள் முன்னிலையில் ஒரு அவசர (பெயரளவுக்கு மட்டுமே நடந்த) விசாரணைக்குப் பிறகு கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் (16 அக்டோபர்,1799).
விசாரணையின் போது கட்டபொம்மனின் நடத்தையை ‘அச்சமற்ற, அகம்பாவம் பிடித்ததெனவும், கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட எட்டயபுரம் பாளையக்காரரையும், சிவகிரி பாளையக்காரரையும் கட்டபொம்மன் வெறுப்பு கலந்த ஏளனத்துடன் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்’ எனவும் ஆளுநர் எட்வர்ட் கிளைவுக்கு எழுதிய கடிதத்தில் பானர்மென் விவரித்தார்.
பாளையங்களுக்கு பானர்மென் விதித்த ஆணை
பட மூலாதாரம், Internet Archive Digital Library
படக்குறிப்பு, மேஜர் பானர்மேன்கட்டபொம்மனை தூக்கிலிட்டபின் மேஜர் பானர்மென், அவர் அனுமதி வழங்கும் வரை அனைத்து பாளையக்காரர்களும் திருநெல்வேலியை விட்டு வெளியேறக்கூடாது என ஆணையிட்டிருந்தார்.
‘நாகலாபுரம், கொல்லர்பட்டி, ஏழாயிரம்பண்ணை, குளத்தூர் மற்றும் காடல்குடி பாளையக்காரர்கள் உள்பட சிலருடன் கைகோர்த்து கம்பெனிக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். எனவே, அனைத்து (ராணுவ) தளங்கள், மற்றும் ஆயுதங்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன கம்பெனிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எவருக்கும் அதே கதி ஏற்படும்’ என்ற அறிவிப்பை அவர் பின்னர் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஐந்து நாட்களில் (அக்டோபர் 21, 1799) அனைத்து பாளையங்களிலும், ஜமீன்களிலும் செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்டு நிறுவப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சியும் எட்டயபுரம் ஜமீனின் வளர்ச்சியும்
பட மூலாதாரம், Tamilnadu Tourism Development Corporation
படக்குறிப்பு, தற்போதைய பாஞ்சாலங்குறிச்சி மாதிரிக் கோட்டைசிவகங்கை மருது சகோதரர்களின் கிளர்ச்சியை (1801) ஒடுக்கிய பின்னர் (அதற்கும் எட்டப்பன் 1000 போர் வீரர்களை அனுப்பி உதவியிருந்தார்), பாஞ்சாலங்குறிச்சியின் பெயரை அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்தும் ஆங்கிலேயர்கள் நீக்கினர். கோட்டையும் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.
பாளையக்காரர் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு பெயர் பெற்ற பாஞ்சாலங்குறிச்சி மக்களே இல்லாததாக மாறியது. கோட்டை இருந்த இடம் புல்லும் புதருமாக காட்சியளித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது.
மாறாக, எட்டயபுரம் எஸ்டேட் 1803இல் ஒரு ஜமீனாக நிரந்தர அங்கீகாரத்தைப் பெற்றது. அன்றைய கலெக்டர், எட்டப்பனை மாவட்டத்திலேயே தலைசிறந்த நல்லெண்ணம் கொண்டவர், தாராள மனப்பான்மை கொண்டவர் என பாராட்டினார்.
வெகுமதியாக பெற்ற 79 கிராமங்களைத் தவிர மற்ற ஜமீன்தார்களின் 162 கிராமங்களை எட்டயபுரம் ஜமீன் வாங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலும் அதற்கு அப்பாலும் எட்டயபுரம் ஜமீன் 422 கிராமங்களை உள்ளடக்கியிருந்தது.
பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் 1911இல் எட்டயபுரம் ஜமீன்தாருக்கு ‘ராஜா’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு