பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக43 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் இன்று பிரிட்டனின் ஹெடிங்லியில் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை தொடங்குகிறது. 25 வயது ஆகிய சுப்மான் கில் 21-ம் நூற்றாண்டு இந்திய அணியின் இளம் கேப்டனாக உருவெடுத்துள்ளார்.

18 ஆண்டுகள் வறட்சி

2007- ஆம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபின் 18 ஆண்டுகளாக பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கிறது. ஆதலால், இந்த முறை இளம் கேப்டன் சுப்மன் கில் மீதும், இளம் வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முற்றிலும் இளம் மற்றும் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை அணுகுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை இன்று பிரிட்டனில் நடைபெறுகிறது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று

அது மட்டுமல்லாமல் 2025-27-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று இந்த டெஸ்ட் தொடரிலிருந்து தொடங்குவதால் இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் தொடரை முடிக்கவும் தீர்மானமாக இருக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி 3-வது இடத்தையும், இங்கிலாந்து அணி, 22 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்தன. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்றும், பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இழந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு டெஸ்ட் தொடர் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறின.

23 ஆண்டுகளுக்குப்பின்

முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணியால் டெஸ்ட் வெற்றியைப் பெற முடியவில்லை. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்களில் இந்திய அணி தோற்றது.

ஆதலால், இந்திய அணி இந்த மைதானத்தில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்றால்கூட கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் கழித்து கிடைத்த வெற்றியாகவே வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய கிரிக்கெட் அணி (கோப்புப் படம்)கில் தலைமைக்கு பரிசோதனை

சுப்மன் கில் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி இதற்கு முன் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக கில் தலைமை ஏற்றுள்ளார்.

உள்நாட்டுப் போட்டிகளில் 5 முதல் தரப்போட்டிகளில் கில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், ரஞ்சிக் கோப்பையில் ஒரு முறை கேப்டன்ஷிப் செய்துள்ளார்.

ஒருநாள்போட்டி, டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது டெஸ்ட் கேப்டன்ஷிப். சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும்.

ஐபிஎல் டி20 தொடரில் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார்.

சுப்மன் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் ” குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் கேப்டன்ஷி செய்யும்போது பார்த்தேன், என்னை அவர் ஈர்த்துவிட்டார். அவரின் அமைதி, வியூகம் அமைக்கும் முதிர்ச்சி, முடிவெடுக்கும் திறன் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருப்பது கில்லுக்கு கூடுதல் பலத்தையும், எளிமையாக பணியைச் செய்யவும் வழிவகுக்கும்.

இவர்கள் தவிர ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட், கருண் நாயர் ஆகியோரும் டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளனர்.

இங்கிலாந்து அணி ப்ளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியில் இன்னும் ப்ளேயிங் லெவன் அறிவிக்கப்படவில்லை.

ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா – இவர்கள் உத்தேச ப்ளேயிங் லெவனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐபிஎல் டி20 தொடரில் சுப்மான் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார் சுப்மான் கில் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அருமையான தொடக்கத்தை அளித்த கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது வீரராக கருண் நாயர், அன்கேப்டு வீரர் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடிய சுதர்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், 3வது இடம் யாருக்கு என்பது குழப்பமாக இருக்கிறது.

விராட் கோலி களமிறங்கும் 4-வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார் என்பதால் அந்த இடம் நிரப்பப்பட்டுவிட்டது. 3-வது இடம் கருண் நாயருக்கு வழங்கப்பட்டால், அடுத்ததாக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் சாய் சுதர்சனா அல்லது ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு செல்லுமா என்ற கேள்வி எழுகிறது.

பந்துவீச்சிலும் 5வது பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்வதா அல்லது நிதிஷ் ரெட்டியை தேர்வு செய்வதா என்ற கேள்வியும் எழுகிறது.

பிரிட்டன் மண்ணில் பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியதில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செயல்படுவார்.

பேட்டிங்கிலும் ஓரளவு நன்றாக செயல்படுவார் என்பதால் 8-வது வீரராக ஷர்துல் தாக்கூர் வரவும் வாய்ப்புள்ளது.

சுழற்பந்துவீச்சு வரிசையில் ஜடேஜா தவிர்த்து பேட்டிங்கில் வலுசேர்க்க வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ராணா ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம்.

பிரிட்டன் பருவநிலைக்கு ஏற்றார்போல் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்விங், பவுன்ஸர் இருக்கும் என்பதால், இருவரில் ஒருவர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வலைப்பயிற்சியில் கருண்நாயர் இவர்கள் இல்லை

இந்திய அணி கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் இருந்த விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா, புஜாரா, ஷமி, ரஹானே, அக்ஸர் படேல், இசாந்த் சர்மா, சூர்யகுமார், விஹாரி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த அணியில் இல்லை.

2022-ஆம் ஆண்டு 5வது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன்ஷியில் இந்திய அணி ஆடியது. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் சதம் விளாசினர்.

98 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இருவரும் 6-வதுவிக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிம்மசொப்னாக திகழ்ந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி 378 ரன்களைத் துரத்தியதில் ரூட், பேர்ஸ்டோவின் சதம் வெற்றியைத் தேடித்தந்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து

பிரன்டென் மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷமான ‘பாஸ்பால்’ ஆட்டத்தை விளையாடுகிறது.

இங்கிலாந்து அணி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் தொடரை அணுகுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். துணைக் கேப்டனாக ஓலே போப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்டிங்கில் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், போப், ஸ்டோக்ஸ் என வலுவான வரிசை இருக்கிறு. இதில் ஜோ ரூட்டுக்கு மட்டுமே இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.

பந்துவீச்சில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்வில் இருந்த கிறிஸ் வோக்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார், அவர் தவிர்த்து பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகிய வேகப்பந்துவீச்சாளரும், ஷோயிப் பஷீர் சுழற்பந்துவீச்சாளரும் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் ஆட்டத்தை எந்தநேரத்திலும் திருப்பக்கூடியவர்கள் என்பதால், இந்திய அணி நடுவரிசை விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதில் ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், கார்ஸ், டங் ஆகிய 4 வீரர்கள் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இவர்களின் பேட்டிங், பந்துவீச்சு குறித்து இந்திய வீரர்களுக்கும் தெரியாது, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சு குறித்தும் இவர்களுக்கும் தெரியாது என்பதும் சவாலாக இருக்கும்.

டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டால் நடுவரிசை பேட்டர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிடுவார்கள், இதற்கு வாய்ப்பளிக்காமல் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட வேண்டும்.

இங்கிலாந்து ப்ளேயிங் லெவன்

ஜேக் கிராளே, பென் டக்கெட், ஓலே போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேம் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷீர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். ஆடுகளம் எப்படி?

ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. பிரிட்டனில் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயில் நன்றாக இருக்கும் என்பதால், தொடக்கத்தில் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும்.

ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ராபின்ஸன் அளித்த பேட்டியில் “வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை பேட்டர்கள், பந்துவீச்சாளர்களுக்கு சமமாக இருக்கும் வகையில் மாற்றியிருக்கிறோம். புற்களை அதிகமாக விட்டு வைக்காமல் குறைத்துவிட்டோம். ஆதலால், ஸ்விங், பவுன்ஸ் இருக்கும், பேட்டிங்கும் நன்றாக இருக்கும்.

முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்கலாம். முதல் 3 நாட்கள் வெயில் இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸில் பேட்டர்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் கடைசி இரு நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதால், குளிர்ந்த சூழல், காற்றின் வேகம், ஆடுகளத்தின் தன்மை ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது (கோப்புப்படம்) இதுவரை இங்கிலாந்து-இந்தியா

இந்திய அணி கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன் 2007-ம் ஆண்டு திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை பிரிட்டன் மண்ணில் வென்றது. அதேபோல ஹெடிங்லி மைதானத்தில் கடைசியாக 2002ல் வென்றது, 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி வெல்லவில்லை. முதல் போட்டியில் வெற்றியும், டெஸ்ட் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு வரலாறாக இருக்கும்.

இரு அணிகளும் கடந்த 1932ம் ஆண்டிலிருந்து 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 வெற்றிகளும், இந்திய அணி 35 வெற்றிகளும் பெற்றுள்ளன, 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2024ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து சென்றது.

இந்திய அணியும் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் செய்து 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தொடக்கத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வெல்லும் சூழலில் இருந்தது, ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு