வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு செய்யப்பட்டார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்  பாபு தேவ நந்தினி தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 8 பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 4 பேரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் 2 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 1 வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் 2 பேரும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர் .

இந்நிலையில் தவிசாளர் தெரிவுக்கு கந்தையா யசீதனின் பெயரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதனுடயை பெயர்களும் முன்மொழியபட்டது

அதனை தொடர்ந்து நடாத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கந்தையா யசீதனுக்கு தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிடிபி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசு கட்சியின் 13வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் .

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் அளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி 6 வாக்குகளை கொண்டிருந்த பொழுதிலும் நடுநிலை வகித்தது .

இதேவேளை உப தவிசாளராக பேரின்ப நாயகம் சுபாகரின் பெயர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பிலும் மற்றும் தர்மகுலசிங்கம் உதயகுமாரின் பெயர் சங்கு சைக்கிள் கூட்டணியின் சார்பில் முன்மொழியப்பட்டது   இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பேரின்ப நாயகம் சுபாகர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

வேலணை பிரதேச சபையின் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமர் தெரிவாகியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமர் தெரிவாகியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும், பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 20 ஆசனங்களை கொண்ட வேலணை பிரதேச சபையில் இம்முறை தேர்தல் ஆசன விசேட பகிர்வின் மூலம் 2 ஆசனங்கள் கூடுதலாக வழங்கப்பட்டதன் அடிப்படையில் 22 உறுப்பினர்கள் உள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சி 3 ஆசனங்களையும்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 02 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்களையும்
தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மூன்று சுயேச்சைக் குழுக்கள் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமார் முன்மொழியப்பட்ட நிலையில் வேறு நபர்களின் பெயர்கள் முன் மொழியப்படாதால் அவர் போட்டியின்றி தெரிவானார். அதனை தொடர்ந்து  உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் தெரிவானார்.

அதேவேளை சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் தவிசாளர் தெரிவின் போது வெளிநடப்பு செய்தார்.