Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
குபேரா ஊடக விமர்சனம்: மாறுபட்ட வேடத்தில் ‘அபாரமான நடிப்பை’ வெளிப்படுத்திய தனுஷ்
பட மூலாதாரம், @dhanushkraja
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் இன்று (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநரும், தேசிய விருது வென்றவருமான சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சுனைனா, சாயாஜி ஷிண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சேகர் கம்முலா இயக்கிய ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ் போன்ற தெலுங்கு திரைப்படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் என்பதால், தனுஷ்- சேகர் கம்முலா கூட்டணிக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர்களில் தனுஷின் மாறுபட்ட தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த எதிர்பார்ப்புகளை ‘குபேரா’ திரைப்படம் பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
குபேரா படத்தின் கதை என்ன?
பட மூலாதாரம், @dhanushkraja
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்). அரசாங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்பவர். தமிழக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படும் தகவல் அரசுக்கு முன்பே அவருக்கு கசிந்து விடுகிறது. அதை பொதுமக்களுக்குத் தெரியவிடாமல், தன்னிடம் ஒப்படைத்தால் கிடைக்கப் போகும் பலன்களைக் கூறி மத்திய அமைச்சரிடம் ‘டீல்’ பேசுகிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதற்காகப் பெரும் தொகையைக் கைமாற்றத் திட்டமிடப்படுகிறது. இந்த வேலையைச் செய்து முடிக்க, செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை (நாகர்ஜுனா) நாடுகிறார் நீரஜ். முதலில் மறுக்கும் தீபக் பின்னர் தனது குடும்பத்தை எண்ணி ஒப்புக் கொள்கிறார்.
பணத்திற்கு ஆசைப்படாத, லட்சம், கோடிகளுக்கு எத்தனை பூஜ்ஜியம் என்றோ, எழுதப் படிக்கவோகூட தெரியாத 4 பிச்சைக்காரர்களைத் தேர்வு செய்து அவர்களை பினாமிகளாக மாற்றி பணத்தைக் கைமாற்ற முயல்கிறார்கள். நான்கு பேரில், திருப்பதியில் இருந்து அழைத்து வரப்படும் தேவாவும் (தனுஷ்) ஒருவர்.
இந்தத் திட்டத்தால் அவர்கள் நினைத்த காரியம் கை கூடியதா? பல ஆயிரம் கோடிகளை பினாமிகளாக தன் பெயரில் வைத்திருக்கும் இந்தப் பிச்சைக்காரர்கள் என்ன செய்கிறார்கள்?
இந்தப் பயணத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘குபேரா’ படத்தின் கதை.
திரைப்படம் தமிழ் ரசிகர்களை ஈர்த்ததா?
பட மூலாதாரம், @dhanushkraja
“இதேபோன்ற கதையை தமிழிலேயே பல படங்களில் இதற்கு முன்பு பார்த்திருந்தாலும், அதை இயன்றவரை மசாலாத்தனங்கள் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா” என இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.
மேலும், “படம் தொடங்கியதுமே வரும் எண்ணெய் படிமம், மத்திய அமைச்சருடன் ஜிம் சர்ப் போடும் டீல், தனுஷின் அறிமுகம், நாகர்ஜுனாவின் பின்னணி என்று படம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத நிதானமான திரைக்கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட முதல் பாதி எந்தத் தொய்வும் இல்லாமலேயே நகர்கிறது” எனப் பாராட்டியுள்ளது அந்த விமர்சனம்.
இயக்குநர் சேகர் கம்முலாவின் ‘குபேரா’ திரைப்படம் நீரஜ், தீபக், தேவா ஆகிய மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களின் வாழ்க்கை மூலம் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை முன்வைக்கிறது என இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.
பணத்தாலும் அதிகாரத்தாலும் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று நம்புவோரை நீரஜ் (ஜிம் சர்ப்) பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதிகாரவர்க்க ஆட்டத்தின் நடுவில் சிக்கிய தீபக் (நாகர்ஜுனா), நேர்மையானவர், ஆனால் சட்டம் மற்றும் நீதியால் கைவிடப்பட்டவர்.
நாயகன் தேவா (தனுஷ்) ஒரு பிச்சைக்காரர், ஆனால் தான் சம்பாதிப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைபவர். இந்த மூன்று கதாபாத்திரங்கள் இடையிலான மோதலை ரசிக்கும்படியாகச் சொல்கிறது ‘குபேரா’ என இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
தனுஷ் நடிப்பு எப்படி உள்ளது?
பட மூலாதாரம், @sekharkammula
“நடிகர் தனுஷ், தான் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல், சிறப்பாக நடித்திருக்கிறார். அவ்வப்போது வழக்கமான ஹீரோவாக களமிறங்கினாலும்கூட, இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமைக்கும் தீனி போட்டுக் கொள்கிறார்” என தினமணி நாளிதழ் பாராட்டியுள்ளது.
“படத்தின் ஒற்றை ஆன்மா தனுஷ் மட்டுமே. உயிரைக் கொடுத்து நடிப்பது என்ற வார்த்தைக்கு உண்மை செய்யும் அசுரத்தனமான நடிப்பு. இப்படி ஓர் அறிமுகக் காட்சிக்கு வெறும் 2 ஹிட் படங்கலை மட்டுமே கொடுத்த ஹீரோகூட ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு சிலிர்க்க வைக்கும் நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார்” என இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.
“பிச்சைக்காரர் தேவாவாக வரும் தனுஷ், மிகுந்த நேர்மையுடன் அந்தக் கதாபாத்திரத்தை அணுகியுள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் என்ற ஹீரோ தெரியவில்லை, தேவா என்ற கதாபாத்திரம் மட்டுமே தெரிகிறது. அதுதான் படத்தின் மிகப்பெரிய பலம்” என தனுஷின் நடிப்பைப் பாராட்டியுள்ளது இந்தியா டுடே.
திரைப்படத்தின் பிற நடிகர்கள் குறித்துப் பேசியுள்ள தினமணி விமர்சனம், “நாகர்ஜூனாவுக்கு மெனக்கெட்டு நடிக்கும் அளவிலான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். ராஷ்மிகா பாதி நேரம் அழுதுகொண்டே இருந்தாலும், இதில் புதுமையாக எதுவும் இல்லாதது அவரது தவறு இல்லை. இயக்குநர் கேட்டதை, கதை கேட்டதை சரியாக வழங்கியிருக்கிறார். அடுத்ததாக பெரிய வில்லனாக வரும் ஜிம் சர்ப்பும், சின்ன வில்லனாக வரும் சௌரவ் குரானாவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்” என்று கூறுகிறது.
அதேநேரம், “தனுஷுடன் பிச்சைக்காரர்களாக வருபவர்களை இன்னும் சற்று நடிக்கத் தெரிந்தவர்களாகப் போட்டிருக்கலாம். பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள்” என இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
திரைப்படத்தின் நீளம் பெரும் குறையா?
பட மூலாதாரம், @KuberaaTheMovie
“திரைப்படத்தின் எடிட்டிங் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம். 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், மிக நீளமாகத் தெரிகிறது. திரைக்கதையும் அதை நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதைக்கு பாடல்கள் தேவையில்லை என்பதால், அவற்றைத் தவிர்த்திருக்கலாம்” என இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாதி குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ள இந்து தமிழ் திசை நாளிதழ், “முதல் பாதியில் சில இழுவைகள் இருந்தாலும்கூட கதாபாத்திரங்களின் தன்மைகளை மக்கள் மனதில் பதிய வைக்க அவை உதவின. ஆனால், இரண்டாம் பாதி முழுவதும் திரைக்கதை எங்கே செல்கிறது என்று இயக்குநருக்கும் தெரியவில்லை, படத்தை பார்ப்பவர்களுக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எல்லாம் எங்கே தொடங்கியது என்றே மறந்து போகும் அளவுக்கு காட்சிகள் மிக மெதுவாக நகர்கின்றன” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “படத்தின் மற்றொரு மிகப்பெரிய குறை, எந்த இடத்திலும், எந்த கதாபாத்திரத்துடனும் பார்வையாளர்களால் உணர்வு ரீதியாக ஒன்ற முடியாமல் போவதுதான். நாகர்ஜுனா – தனுஷ், தனுஷ் – ராஷ்மிகா, தனுஷ் – குஷ்பு கதாபாத்திரங்களுக்கு இடையே எமொஷனலுக்காக வைக்கப்பட்ட காட்சிகளில் எந்தக் கனமும் இல்லை. படத்தின் தொடக்கத்தில் இருந்து எந்தக் காட்சியிலும் நுணுக்கம் இல்லாதது மற்றுமொரு குறை” என்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தோடு பொருந்திப் போனாலும் சில இடங்களில் வரும், பின்னணி இசை பழைய திரைப்படங்களின் உணர்வைச் சேர்த்து விடுவதாகக் கூறும் தினமணியின் விமர்சனம், “பாடல்களும் மனதில் நிற்கும்படி இல்லை. ஒருவேளை தெலுங்கில் பாடல்கள் நன்றாக இருக்கலாம், வழக்கமான டப்பிங் பாடல்களால்கூட அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்” என விமர்சித்துள்ளது.
வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பல இடங்களில் மிகவும் இயல்பாகவே உள்ளன. அதுவும்கூட தமிழாக்கத்தில் வரும் வழக்கமான குறையாகத் தெரியலாம். அதனால் மொத்த படமுமே இது தமிழ்ப் படமில்லை என்ற உணர்வை நொடிக்கு நொடி உணர்த்திவிடுகின்றன என்றும் தினமணி விமர்சனம் கூறுகிறது.
“குபேரா திரைப்படம் சட்டம், பணம் மற்றும் அதிகாரம் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், படத்தில் பிழைகள் இல்லாமல் இல்லை. இருப்பினும், ‘குபேரா’ உங்களை ஈர்க்கக்கூடிய ஒரு திரை உலகத்தைக் காட்சிப்படுத்துகிறது” என இந்தியா டுடே விமர்சனம் தெரிவிக்கிறது.
ஆனால், “எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்ல முடியாமல் போனதால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையாக திரைப்படம் எங்கெங்கோ சென்று முடிகிறது. இதனால் தனுஷின் அபார நடிப்பு உள்ளிட்ட நல்ல அம்சங்கள்கூட வீணாகி விட்டன” என்று இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு