இஸ்ரேலுடன் இணைந்தால் அமெரிக்காவை இரான் தாக்குமா? முக்கிய சந்தேகங்களும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூன் 13ஆம் தேதியன்று இரானின் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது2 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலும் இரானும் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், அமெரிக்கா அந்த மோதலில் இணையுமா எனக் கேட்டபோது, “நான் அதைச் செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18ஆம் தேதி பதிலளித்தார்.

பிபிசியின் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு, பிபிசியின் நிபுணர்களும் செய்தியாளர்களும் அளித்த பதில்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இப்போது இஸ்ரேல் ஏன் இரான் மீது தாக்குதல் நடத்துகிறது ?

இஸ்ரேலின் நிலைப்பாடு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்திவிட்டதாக இஸ்ரேல் நம்புகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமின்றி முடங்கிவிட்டதால், இதுதான் ஒரே வழி என்று இஸ்ரேல் கருதுகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரானால் தனது இருப்புக்கே அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஏனெனில், இரான் கடந்த காலங்களில் இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று உறுதி எடுத்திருந்தது. அதனால், தனது கைக்கு அணு ஆயுதம் கிடைத்தால் இரான் அதைத் தன் மீது பயன்படுத்தும் என்று இஸ்ரேல் எண்ணுகிறது.

இரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்டது என்ற பார்வை, பிராந்தியத்தின் பிற நாடுகள் அல்லது ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உள்பட அனைத்து அமைப்புகளிடமும் இல்லை. இதேபோல், அமெரிக்க உளவுத்துறையின் சமீபத்திய தகவல் அறிக்கையிலும் இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போவதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

– பிராங்க் கார்ட்னர், பாதுகாப்பு செய்தியாளர்

இரானில் உள்ள பொது மக்கள் எங்கே செல்வார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல், இரானில் உள்ள அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது. இதற்கு பதிலடியாக, இரான் இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது.இரானின் தலைநகரான டெஹ்ரானின் சில பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இந்தப் பகுதிகள் மிகவும் நெருக்கமாகவும், அதிக மக்கள் தொகை கொண்டதாகவும் உள்ளன.

டெஹ்ரானில் இருந்து நாட்டின் வடக்குப் பகுதிக்குத் தப்பிச் செல்ல முயலும் மக்களுடைய கார்களின் நீண்ட வரிசைகள் ஏற்படுத்திய பெரும் போக்குவரத்து நெரிசல்களின் காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். அந்தப் பகுதிகள் பாதுகாப்பானவை என அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் அந்த வடக்குப் பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இஸ்ரேல் இலக்குகளை மிகவும் பரவலாகத் தேர்வு செய்துள்ளதால், எந்தப் பகுதியையும் பாதுகாப்பானதாகக் கருத முடியாது.

டெஹ்ரானில், மக்கள் தஞ்சமடைய 24 மணிநேரமும் மெட்ரோ நிலையங்களைத் திறந்து வைப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

மேலும், டெஹ்ரானில் ஒரு கோடி மக்கள் வாழ்கிறார்கள். அத்தனை பேரையும் வெளியேற்றுவது என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

– நஃபிசே கோஹ்னவார்ட், மத்திய கிழக்கு செய்தியாளர்

அமெரிக்காவும் மோதலில் இணைந்தால், இரான் அமெரிக்க இலக்குகளைத் தாக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டங்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆனால் அமெரிக்காவை தாக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறதுநிச்சயமாக ஆபத்து உள்ளது, அமெரிக்காவுக்கு ஏற்படும் விளைவுகள் குறிப்பிடத்தக்கவை.

மத்திய கிழக்கில் சுமார் 19 இடங்களில் 40,000 முதல் 50,000 வரையிலான அமெரிக்க வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சைப்ரஸில் அமெரிக்க பணியாளர்களும், பஹ்ரைனில் ஒரு அமெரிக்க கடற்படை தளமும் அமைந்துள்ளது.

ஆனால், அமெரிக்கா எவ்வாறு, எந்த அளவிற்கு இந்த மோதலில் ஈடுபட முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்தே இரானின் நடவடிக்கைகள் இருக்கும்.

– மைக்கி கே, ‘செக்யூரிட்டி ப்ரீஃப் (Security Brief)’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்

இஸ்ரேலுடனான மோதலில், இரானின் ஆதரவைப் பெறும் குழுக்கள் அதை ஆதரிக்க வாய்ப்புள்ளதா?

எனக்கு அப்படித் தோன்றவில்லை. இனி அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து, இரானின் முன்னணி பாதுகாப்புப் படைகளில் பலவற்றை இஸ்ரேல் திட்டமிட்டு அழித்துவிட்டது.

இஸ்ரேல் காஸாவில் ஹமாஸை பலவீனப்படுத்தியுள்ளது. லெபனானில் ஹெஸ்பொலாவின் ஆயுதக் களஞ்சியத்தை பெருமளவில் குறைத்துள்ளது. பஷர் அல்-அசத் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், சிரியா இப்போது இரானின் கூட்டாளியாக இல்லை. ஆனால் அதற்குக் காரணம் இஸ்ரேல் இல்லை.

இதற்கிடையே ஹூத்திகள் ஏமனில் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படவில்லை.

– பிராங்க் கார்ட்னர், பாதுகாப்பு செய்தியாளர்

இரானின் தலைவர் யார், அவருக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது?

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த மாதத் தொடக்கத்தில் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதுஇரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயி. அவர் ஒரு மத குரு, ஆனால் இரானின் அதிபரைவிட அவருக்கு அதிக அதிகாரம் உள்ளது.

அவர் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகள் உள்பட இரான் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பவராகவும் செயல்படுகிறார்.

ஆனால் இரானின் ஒட்டுமொத்த ஆதரவையும் அவர் பெறவில்லை. அங்கு மக்கள் பிளவுபட்டுள்ளனர். அந்தப் பிரிவு ஆழமடைந்து வருகிறது.

ஆட்சிக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், இரான் பெரும் போராட்டங்களைக் கண்டது. பெண்கள் தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைக் கோரி அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

ஆனால் இன்னும் அந்த ஆட்சிக்கு, ஆட்சியுடன் இணைக்கப்பட்ட ஆயுதப் படைகள் உள்படக் கணிசமான அளவில் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதையும் நாம் புறக்கணிக்க முடியாது.

– நஃபிசே கோஹ்னவார்ட், மத்திய கிழக்கு செய்தியாளர்

இரானில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன நடக்கும்?

இரானில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை.

அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்படக் கூடிய வகையில், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் இல்லை என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம்.

இப்போது பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக, தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் இரானுடைய முன்னாள் ஷாவின் நாடு கடத்தப்பட்ட மகன் ரெசா பஹ்லவியும் உள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயிஅவருக்கு இரானுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் உண்மையில் எத்தனை பேர் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

அவருக்கு இரானுக்குள்ளே சீர்திருத்தவாதிகள் உள்பட எதிரிகளும் கணிசமாக உள்ளனர். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி எறியப்பட்ட இரானின் முடியாட்சிக்கு அவர்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை.

எனவே இப்போதுள்ள ஆட்சிக்கு மாற்றாக ஒன்று உள்ளதா என்பது தெரியவில்லை.

– நஃபிசே கோஹ்னவார்ட், மத்திய கிழக்கு செய்தியாளர்

ஃபோர்டோ எங்கே உள்ளது? ஃபோர்டோ என்றால் என்ன?

டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள ஃபோர்டோ, இரானில் உள்ள இரண்டு முக்கியமான யுரேனிய செறிவூட்டல் நிலையங்களில் ஒன்று.

அதன் பாதுகாப்புக்காக, ஒரு மலைக்குள் ஃபோர்டோ கட்டப்பட்டுள்ளது. இரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அதிகரிக்கப் பயன்படுத்தி வரும் முக்கிய செறிவூட்டல் நிலையங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

ஃபோர்டோ ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தாக்குதல்கள் இரானுடைய நிலத்தில் இருந்து வான் ஏவுகணைகள் மற்றும் ஃபோர்டோவை சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இது அந்த இடத்தை மேலும் பாதிக்கப்படக் கூடியதாக மாற்றும்.

– மைக்கி கே, ‘செக்யூரிட்டி ஃப்ரீஃப் (Security Brief)’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்

பட மூலாதாரம், Google Earth

படக்குறிப்பு, ஃபோர்டோ அதன் பாதுகாப்புக்காக, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளதுஇரானின் அணுகுண்டு உருவாக்கும் முயற்சி எந்த நிலையில் உள்ளது?

இரான் அணுகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டதா இல்லையா என்பதை உறுதியாக அறிந்தவர்கள், அந்த நாட்டின் மிகவும் நம்பத் தகுந்த அணுசக்தி விஞ்ஞானிகள், பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் மற்றும் உச்ச தலைவர் மட்டுமே. மற்ற அனைவரின் கூற்றுகளும் ஊகம் மட்டுமே.

ஆனால், இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐ.ஏ.இ.ஏ., கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியுள்ளது எனக் கண்டறிந்தபோது எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இரான் தற்போது சுமார் 400 கிலோ யுரேனியத்தை 60% வரை செறிவூட்டியுள்ளது. இது சிவில் அணுசக்தி பயன்பாட்டிற்குத் தேவையான அளவைவிட மிக அதிகம்.

இரான் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், அணு ஆயுதங்களுக்கு அணுசக்திப் பொருட்கள் மாற்றப்படவில்லை என்பது குறித்து தங்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றும் ஐ.நா. கூறியுள்ளது. இருப்பினும், இந்தக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே இரான் அணுகுண்டு உருவாக்க முயன்று வருகிறது எனக் கூற முடியாது.

“இரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியில், முன் எப்போதையும்விட இப்போது மிகவும் நெருங்கி வந்துவிட்டது என்பதைக் கடந்த சில மாதங்களில் கிடைத்த உளவுத் தகவல்கள் காட்டுகின்றன” என்று இஸ்ரேலிய ராணுவம் கடந்த வாரம் கூறியது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டெஹ்ரானில் ஒரு கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழுகிறதுஆனால், அது எந்த உளவுத் துறையின் தகவல்? அது இரானின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவின் தகவல் போன்றும் தெரியவில்லை.

மார்ச் மாதத்தில், அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் நாடாளுமன்றத்தில், “இரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆயுதத் தரத்திலான யுரேனியத்தை கையிருப்பில் வைத்திருந்தாலும், அது அணுகுண்டுகளை உருவாக்க முயல்வது போலத் தெரியவில்லை” என்று கூறினார்.

இதற்கிடையில், இரான் தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்று தொடர்ந்து கூறி வருகிறது.

– பிராங்க் கார்ட்னர், பாதுகாப்பு செய்தியாளர்

இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா?

இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பீடுகள் உள்ளன. ஆனால் உண்மையான பதில் என்ன என்பது நமக்குத் தெரியாது.

இஸ்ரேல் அதன் அணுசக்தித் திறனை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.

அணு ஆயுதங்கள் மேலும் பரவுவதைத் தடுக்க உலகளவில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமான, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் உறுப்பினராக இல்லை.

ஒரு அணு ஆயுதத்தை உருவாக்க மூன்று முக்கியக் கூறுகள் தேவை. அதில் முதலாவது, 90% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம். இரண்டாவது, அந்தச் செறிவூட்டிய பொருளைச் சேர்த்து அணு ஆயுதத்தின் வெடிக்கும் பகுதியை உருவாக்கும் திறன். மூன்றாவதாக, அதை இலக்கை நோக்கி ஏவுவதற்கான வழி இருக்க வேண்டும்.

இந்நிலையில், மேற்கூறியவற்றில் எதைப் பற்றியும் இஸ்ரேல் வெளிப்படையாக அறிவித்ததில்லை.

– மைக்கி கே, ‘செக்யூரிட்டி ப்ரீஃப் (Security Brief)’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர்

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு