Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்திய தேயிலை ஏற்றுமதி இரான் – இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்படுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாடு முழுவதும் 2,31,093 விவசாயிகளால் 15 லட்சத்து 31 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது.எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ் 21 நிமிடங்களுக்கு முன்னர்
இஸ்ரேல் – இரான் இடையிலான மோதல் காரணமாக, இந்தியாவிலிருந்து இரானுக்கு நடந்து வந்த தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தேயிலை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், இனிவரும் நாட்களில் இரானை ஒட்டியுள்ள பிற நாடுகளுக்கு தேயிலை அனுப்புவதும் தடைபடுமென்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதனால் பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை, அப்படி வரும்பட்சத்தில் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய அரசின் தேயிலை வாரிய இணையதளம் பகிரும் தகவலின்படி, இந்தியாவில் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேயிலை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
இதில் அசாம் முதலிடத்திலும், மேற்கு வங்கம் அடுத்த இடத்திலும், மூன்றாம் இடத்தில் தமிழகமும் உள்ளன. கேரளா, கர்நாடகா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மற்ற மாநிலங்களில் மிகமிகக் குறைவான அளவிலேயே தேயிலை பயிரிடப்படுகிறது.
‘தேயிலை ஏலத்தில் பங்கேற்கவில்லை’
பட மூலாதாரம், Getty Images
வழக்கமாக இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் இரானுக்கு 40 ஆயிரம் டன் வரை ஏற்றுமதி நடக்குமென்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.
”இரான் மற்றும் இராக், இந்தியாவிலிருந்து அதிகளவில் ஆர்த்தோடக்ஸ் தேயிலையை வாங்கும் நாடுகளாகவுள்ளன. அந்த நாடுகள் 80 சதவீதம் ஆர்த்தோடக்ஸ் இலைத் தேயிலையையும், 20 சதவீதம் சிடிசி டஸ்ட் எனப்படும் தேயிலைத் துாளையும் வாங்குகின்றன. போர் காரணமாக இந்த ஏற்றுமதி எவ்வளவு பாதிக்கும் என்பதை இப்போதைக்குக் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் பாதிக்கும்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தேயிலை வாரியத்தின் உறுப்பினர் ரமேஷ்.
மேலும் தொடர்ந்த அவர், ”இரானுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் இந்த வாரத்திலேயே தேயிலை ஏலத்தில் பங்கேற்கவில்லை. தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு உற்பத்தியாளர்களால் சில வாரங்கள் கடன் அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். அது உரிய காலத்திற்குள் வந்துவிடும். ஆனால் இரானில் தற்போதுள்ள சூழல் காரணமாக, ஏற்கெனவே அனுப்பிய தேயிலைக்கான தொகையே இன்னும் வரவில்லை. ” என்றார்.
இரானில் உள்ள போர்ச்சூழல் காரணமாக, இரானுக்கு மட்டுமின்றி இராக், அஜர்பைஜான், கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதும் பாதிக்கப்படும் என்று ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இரான் துறைமுகங்கள் மற்றும் டெஹரான் நகரங்களுக்கு ஏற்பட்டுள்ள இயல்பு நிலை பாதிப்பையும் இதற்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், ஏமன், குவைத், செளதி அரேபியா மற்றும் துபை ஆகியவற்றுக்கான வர்த்தகத்தையும் இது பாதிக்கிறது என்கிறார் தென்னிந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் தீபக் ஷா.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தீபக் ஷா, ”ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சுமார் 250 மில்லியன் கிலோ (2.5 லட்சம் டன்) தேயிலையில், இரானுக்கு மட்டும் சுமார் 40 மில்லியன் கிலோ (40 ஆயிரம் டன்) ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதுள்ள போர்ச்சூழல், ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பந்தர் அபாஸ் துறைமுகத்துக்கான கால்வாய் வழியாகவே, வேறு சில நாடுகளுக்கும் தேயிலை கப்பலில் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் அந்த வர்த்தகமும் பாதிக்கப்படும்.” என்கிறார்.
படக்குறிப்பு, இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் இரானுக்கு 40 ஆயிரம் டன் வரை ஏற்றுமதி நடக்குமென்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.’பணம் வந்து விடும், சரக்கு போக வழியில்லை’
டெஹ்ரானில் உள்ள மக்களை விட அங்குள்ள அரசு அலுவலகங்கள் தான் முக்கியமாக குறி வைக்கப்படுவதால், அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் தீபக் ஷா, அந்த அலுவலகங்களுக்கு உள்ள வர்த்தகர்களின் அலுவலகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். இணையதள பாதிப்பால் தொலைத்தொடர்பும், வர்த்தகத் தொடர்பும் அறுபட்டிருப்பதாகத் கூறுகிறார் அவர்.
”வழக்கமாக ஏற்றுமதிக்குப் பின்பே பணம் வந்து சேரும். பணம் எப்படியும் வந்துவிடும் என்பதில் நம்பிக்கை இருந்தாலும், இங்கிருந்து சரக்குகளை அனுப்பினால் அது போய்ச்சேருமா என்பது சந்தேகமாகவுள்ளதால் தேயிலை உள்ளிட்ட எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்வதற்கு தற்போதுள்ள சூழல் உகந்ததாக இல்லை. இரான் கடல் வழியைத் தவிர்த்து, சீனா வழியாக 4 ஆயிரம் கி.மீ. சுற்றி பொருளை அனுப்புவது மிகவும் பொருட்செலவுடையதாக இருக்கும். அதுவும் சாத்தியமேயில்லை” என்றும் தீபக் ஷா தெரிவித்தார்.
இரான், இராக் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆர்த்தோடக்ஸ் தேயிலையே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதால் இதில் அதிகம் பாதிக்கப்படுவது அசாம் மாநிலம்தான் என்கின்றனர் தேயிலை உற்பத்தியாளர்கள்.
ஆர்த்தோடக்ஸ் தேயிலையை, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள்தான் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன என்று கூறும் தேயிலை வாரிய உறுப்பினர் ரமேஷ், தமிழகத்தில் ஆர்த்தோடக்ஸ் தேயிலையின் உற்பத்தி அளவு மிகவும் குறைவு என்கிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால் இரானுக்கான தேயிலை ஏற்றுமதியால் பெரும் பாதிப்பு வர வாய்ப்பில்லை என்றும் மற்றொரு தரப்பில் வாதிடப்படுகிறது.
தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (UPASI) நிர்வாகி ஒருவர், இரானுக்கு கடந்த ஆண்டில் ரூ.289.42 கோடி மதிப்பிலான 9240 டன் மட்டும்தான் தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.
இரானுக்கான தேயிலை ஏற்றுமதி குறித்த இந்த மாறுபட்ட புள்ளி விபரங்கள் குறித்த தகவல்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
இதுகுறித்து குன்னுார் தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”இரான்– இஸ்ரேல் மோதல் காரணமாக, இதுவரை ஏலத்தில் எந்த பாதிப்பும் இருப்பதாகத் தகவல் இல்லை. இரானுக்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், ஒரே ஒரு ஏலத்தில் பங்கேற்காததை வைத்து எதையும் கணிக்க முடியாது. பல நேரங்களில் அவர்கள் ஏலத்தில் பங்கேற்காமல் இருந்துள்ளனர். அதேபோன்று இரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்ய இயலாதபட்சத்தில், அந்தப் பொருளை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. போர்ச்சூழல் காரணமாக ஏற்படும் பாதிப்பு பற்றி இனிமேல்தான் தெரியவரும்.” என்றார்.
இந்தியாவிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் இரானுக்கு எவ்வளவு அளவுக்கு, எவ்வளவு மதிப்பில் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களை சேகரித்துத் தருவதாகவும் தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அசாமில் மட்டும் 8 லட்சத்து 59 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பளவுக்கு தேயிலை விவசாயம் நடக்கிறது.தேயிலை விவசாயம் – அசாமில் மட்டும் 60 சதவீத பரப்பு
நாடு முழுவதும் 2,31,093 விவசாயிகளால் 15 லட்சத்து 31 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது.
அசாமில் மட்டும் 8 லட்சத்து 59 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பளவுக்கு தேயிலை விவசாயம் நடக்கிறது. அடுத்ததாக மேற்கு வங்கத்தில் 3.43 லட்சம் ஏக்கர் பரப்பிலும், மூன்றாவதாக தமிழகத்தில் 46,610 விவசாயிகளால் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 932 ஏக்கர் பரப்பிலும் தேயிலை பயிரிடப்படுவதாக தேயிலை வாரிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
வடஇந்தியாவில் தான் தேயிலை பயிரிடும் பரப்பு 70 சதவீதத்துக்கும் (12,80,295 ஏக்கர்) அதிகமாகவுள்ளதால் உற்பத்தியும், ஏற்றுமதியும் அங்கே அதிகமாகவுள்ளது.
வடஇந்தியாவில் விளையும் தேயிலை, கொல்கத்தா, சிலிகுரி, குவாஹாட்டி மற்றும் ஜோஹட் ஆகிய இடங்களில் உள்ள ஏல மையங்களிலும், தென்னிந்தியாவில் கோவை, குன்னுார் மற்றும் கேரளாவின் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள ஏல மையங்களிலும் ஏலம் விடப்படுகின்றன.
இந்த மையங்களில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கும் ஏற்றுமதியாளர்கள், அவற்றை விலைக்கு வாங்கி, மதிப்புக் கூடுதல் சேவையுடன் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
கடந்த 2024 (ஜனவரி – டிசம்பர்) ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட 12 லட்சத்து 83 ஆயிரம் டன் தேயிலையில், வடஇந்தியாவில் சுமார் 10 லட்சம் டன்னும், தென்னிந்தியாவில் சுமார் 2 லட்சம் டன்னும் உற்பத்தி நடந்துள்ளது.
இவற்றில் 2 லட்சத்து 54 ஆயிரம் டன் அளவுக்கு தேயிலை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுமதியில் வடஇந்தியாவின் பங்களிப்பு, ஒரு லட்சத்து 54 ஆயிரம் டன் தேயிலை. தென்னிந்தியாவின் பங்களிப்பு, 100 டன்னாகும்.
ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்த மதிப்பு, ரூ.7111 கோடியாகும். சராசரியாக ஒரு கிலோ தேயிலை ரூ.279 க்கு விற்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் ஏற்றுமதியின் அளவு 9.92 சதவீதம் அதிகரித்திருந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 13 லட்சத்து 93 ஆயிரம் டன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி சற்று சரிந்திருந்தாலும் ஏற்றுமதி உயர்ந்திருந்தது.
அதனால் இந்த ஆண்டில் ஏற்றுமதி மேலும் அதிகரிக்குமென்ற கணிப்பு தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டின் துவக்கத்தில், கென்யாவிலிருந்து இந்தியாவுக்கு தேயிலை இறக்குமதி 288 சதவீதம் அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியானது. அங்கிருந்து மலிவான தேயிலையை வாங்கி, மறு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்தனர். கென்யா தேயிலை இறக்குமதியால் உள்ளூர் தேயிலைக்கான விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்களும் வருத்தத்தில் இருந்தனர்.
அதற்கு மாறாக, இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேயிலை ஏற்றுமதி, கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தை விட 6.26 சதவீதம் குறைந்திருந்தாலும் தேயிலை விலை அதிகரிப்பால் 9.66 சதவீதம் வருவாய் அதிகரித்ததாக தேயிலை வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்தது. அதாவது இரு மாதங்களில் 45,800 டன் தேயிலை ஏற்றுமதி செய்ததில் 1224.62 கோடி ரூபாய் கிடைத்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு