பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர்எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி42 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் அரசு 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூன் 10 அன்று தாக்கல் செய்தது. அதில், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை 20.2% அதிகரிப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு நிதியில் 428 பில்லியன் ரூபாய் (பாகிஸ்தானி) கூடுதலாக ஒதுக்கப்பட்டு 2,550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும்.

பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.97 சதவிகிதமாகும். இது மொத்த பட்ஜெட்டில் 14.5%.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, பாகிஸ்தான் அரசு அடுத்த நிதி ஆண்டுக்கான மொத்த மத்திய செலவில் ஏழு சதவிகிதம் குறைத்து ரூ.17.57 டிரில்லியன் என உச்சவரம்பு வைத்துள்ள நிலையில், பாதுகாப்பு பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.2,550 பில்லியன் பாதுகாப்பு பட்ஜெட் தவிர, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.1,055 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் பாதுகாப்பு பட்ஜெட்டின் ஓர் அங்கம் அல்ல. அடுத்த நிதி ஆண்டு ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, மத்திய பட்ஜெட்டில் சுமார் 6%.

நாட்டின் பாதுகாப்பு சிக்கலில் இருப்பதாகவும் எல்லையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகள் பாராட்டத்தக்க சேவையை ஆற்றியதாகவும் தனது பட்ஜெட் உரையின்போது பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது ஒளரங்கசீப் தெரிவித்தார்.

“நாட்டின் பாதுகாப்பு, அரசின் முதன்மையான குறிக்கோள். இந்த தேசியப் பணிக்காக ரூ.2550 பில்லியன் ஒதுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் பாகிஸ்தானைவிட ஒன்பது மடங்கு அதிகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுடனான மோதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் ராணுவத்தை ஆதரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிஇந்தியாவுடன் மே மாதம் முன்பாதியில் நடைபெற்ற நான்கு நாள் மோதல் மற்றும் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் ராணுவ திறனை மேம்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருப்பதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.

பாகிஸ்தானின் திட்டமிடலுக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால் பட்ஜெட்டுக்கு முன்பே இதுபோன்ற ஓர் எண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“இறையாண்மையை விட்டுக்கொடுத்து பணத்தைச் சேமிக்க முடியாது. பாதுகாப்பு செலவை அதிகரிப்பது அவசியமான ஒன்று,” என அவர் தெரிவித்திருந்தார்,

தற்போதைய நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், ஆயுதப் படைகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு சிறப்புப் படிகளையும் அரசு அறிவித்தது. ஆனால் நிதியமைச்சரின் கூற்றுப்படி இந்தத் தொகை பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்துதான் கொடுக்கப்படும்.

அடுத்த நிதி ஆண்டுக்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்டுள்ள உயர்வு கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் அதிகம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனீர்முன்னதாக, கடந்த ஆண்டு தனது முதல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த தற்போதைய அரசு, பாதுகாப்புகான நிதியை ரூ.318 பில்லியன் அளவு அதிகரித்திருந்தது.

இதே போல, 2023-24 நிதியாண்டில் பாதுகாப்புக்கு ரூ.1,804 பில்லியன் ஒதுக்கப்பட்டது, 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.1,530 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

பட்ஜெட் ஆவணத்தின்படி, 2025-26ஆம் ஆண்டில் ரூ.1,179 பில்லியன் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் (மொத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் 45.9%), ரூ.520.7 பில்லியன் பாகிஸ்தான் விமானப் படைக்கும் (மொத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் 20.4%), பாகிஸ்தான் கடற்படைக்கு ரூ.265.97 பில்லியன் (10.4%) மற்றும் இன்டர் சர்வீஸஸ் அமைப்புக்கு ரூ.498.11 பில்லியன் (மொத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் 19.5%) ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பீட்டின்படி, இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் பாகிஸ்தானைவிட ஒன்பது மடங்கு அதிகம். ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானைவிட சிறப்பாக இருப்பதால் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு செலவுகளை ஒப்பிட முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பாகிஸ்தான் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்துவது ஏன்?

“இந்தியா பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற நான்கு நாள் மோதல்தான் பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் உயர்த்தப்பட்டதற்கு முக்கியக் காரணம். ஏனென்றால் சமீபத்திய பதற்றத்திற்குப் பிறகு பாதுகாப்பு விவகாரங்களில் பாகிஸ்தான் ஆசுவாசமாக இருக்க முடியாது” என நம்புகிறார் பாகிஸ்தானை சேர்ந்த ஆய்வாளர் ஆமிர் ஜியா.

“கடந்த காலங்களைப் பார்க்கும்போது, பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் பெரும்பாலும் நிலையாக இருந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் வலுவான பாதுகாப்புத் திறன் இருப்பது அவசியம். இந்தப் பகுதியில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது மறுக்க முடியாத ஒன்று” என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தான் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர் ஹுமா ஹக்கானி சொல்கிறார்.

“பாகிஸ்தான், பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது, தற்போது இந்தியாவிடம் இருந்தும் அபாயம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் முன்னெடுப்புக்கு பாகிஸ்தானின் அதிகார வட்டாரங்களில் எந்தவித எதிர்ப்போ தடையோ இருக்காது, அது இதே வடிவில் ஏற்றுக் கொள்ளப்படும்” என்கிறார் அவர்.

இந்தியாவில் இருந்து தொடர்ந்து வரும் அறிக்கைகள் பாகிஸ்தானில் கவலைகளை அதிகரித்து இருப்பதாக ஹுமா ஹக்கானி சொல்கிறார்.

“பாரம்பரிய போர் முறையை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்பதுதான் பாகிஸ்தானின் விளக்கமாக உள்ளது. தற்போது இரு நாடுகளுக்கு இடையில் மோதலுக்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆகையால் இந்த உயர்வுக்கு எந்த மட்டத்திலும் எதிர்ப்பு ஏற்படாது. எப்போதும் பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள்கூட தற்போது ராணுவத்தின் போர் அல்லாத செலவுகளைக் குறைப்பது குறித்து மட்டுமே பேசுகின்றனர்” என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தானால் இந்தச் செலவை தாங்கிக் கொள்ள முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய நான்கு நாள் மோதல், பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்புக்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்கடினமான பொருளாதார சூழ்நிலை மற்றும் பற்றாக்குறை பட்ஜெட்டில், பாதுகாப்புக்கான நிதியை இந்த அளவுக்கு உயர்த்துவது சிக்கலானது என்கிறார் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வாளரான ஆயிஷா சிக்டிகா.

ஆனால் உயரும் பாதுகாப்பு செலவுகள் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டு மக்களையும் பாதிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆமிர் ஜியாவின் கூற்றுப்படி, இரு நாடுகளிலும் ஏழ்ழையும், ஏழை மக்களின் நிலையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.

“பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பல லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்று, ஏழ்மை மிகவும் அதிகமாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் கட்டாயத்தில் உள்ளனர். சுத்தமான குடிநீர் இல்லை, ஆனால் இரு நாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட்டை பார்க்கும்போது ஆச்சரியம் அளிக்கிறது” என அவர் கூறுகிறார்.

மேலும், துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் பட்ஜெட்டிலும், பொருளாதார கொள்கைகளிலும் புதுமைகள் ஏதும் இல்லை எனவும் ஆமிர் ஜியா குறிப்பிடுகிறார்.

அதோடு, அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற நான்கு நாள் மோதல், பாகிஸ்தானின் பாதுகாபு பட்ஜெட் அதிகரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவுடனான மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் இம்முறை தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 20% அதிகரித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு