Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்த பா.ம.க., இந்த நிலைக்கு வந்தது ஏன்?
பட மூலாதாரம், @draramadoss/x
எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையிலான மோதலால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், பா.ம.க. 1990களின் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருந்து வருகிறது. தற்போது உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டிருக்கும் பா.ம.க. தமிழக அரசியலில் முக்கியக் கட்சியாக நிலைபெற்றது எப்படி?
கடந்த 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பல விதங்களில் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்த தேர்தல். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் தலைமையை அ.தி.மு.க. தொண்டர்கள் கிட்டத்தட்ட முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை இந்தத் தேர்தல்தான் சுட்டிக்காட்டியது. அதேபோல, புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டு அரசியலில் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கப் போகும் கட்சி என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள்தான் சுட்டிக்காட்டின.
இட ஒதுக்கீட்டுக்காக 1980களின் இறுதியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய வன்னியர் சங்கம், 1989இல் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. அதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் எந்தப் பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் பா.ம.க போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், அக்கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், 12 சட்டமன்றத் தொகுதிகளில் பாமக இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. அதோடு, ஆறு சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது. வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரனை, பா.ம.கவினர் யானை மீது அமர்த்தி சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள்.
இதற்குப் பிறகு, பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தொடர்ச்சியாக ஏறுமுகம்தான். இதற்கு அடுத்து வந்த 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 116 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. ஆண்டிமடம், எடப்பாடி, தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு ஏழு தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பாமக இடம்பெறும் கூட்டணிக்கு வெற்றி
இதற்குப் பிறகு வந்த பெரும்பாலான தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பெறுகிறதோ, அந்தக் கூட்டணியே வெற்றி பெறும் எனக் கூறும் வகையில் தேர்தல் முடிவுகள் இருந்தன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கடந்த 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., 5 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்து வந்த 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.கவுக்கு பதிலாக தி.மு.க. இடம்பெற்றது. அந்தக் கூட்டணியில் தொடர்ந்த பா.ம.க. 7 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வென்றது.
கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறிய பாட்டாளி மக்கள் கட்சி 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களைக் கைப்பற்றியது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 5 இடங்களில் வெற்றி பெற்றது.
இத்தனைக்கும், இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார். “ராமதாஸ் வெற்றி பெற்றால் போன ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியம் மிச்சமிருக்கிறது என்று அர்த்தம்” என்றார்.
ஆனால், இதையெல்லாம் மீறி அபார வெற்றி பெற்றது பா.ம.க. அடுத்து வந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 1998ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்வரை, பா.ம.க. எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது.
பாமக சந்தித்த தொடர் தோல்வி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மு. கருணாநிதி 2006இல் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அவருடன் பாமக நிறுவனர் ராமதாஸ்ஆனால், 2009ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து இந்த நிலை மாறத் தொடங்கியது. 2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது.
இந்தக் கூட்டணியில் பா.ம.க., ஆறு இடங்களில் போட்டியிட்டாலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. “அந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என ராமதாஸ் நினைக்கவில்லை. அதன் காரணமாகவே கூட்டணியை விட்டு அவர் வெளியேறினார். ஆனால், அவரது கணிப்பு தவறாக முடிந்தது” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப. கோலப்பன்.
இதற்குப் பிந்தைய தேர்தல்கள் எதிலுமே, பா.ம.க. எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 30 இடங்களில் போட்டியிட்டது (முதலில் 31 இடங்கள் ஒதுக்கப்பட்டு பிறகு ஒரு இடத்தைத் திருப்பி அளித்தார் ராமதாஸ்). ஆனால், 3 இடங்களில் மட்டும்தான் வெற்றி கிடைத்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பா.ம.க. 8 இடங்களில் போட்டியிட்டு, தருமபுரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற கோஷத்தை முன்வைத்து களத்தில் இறங்கியது பா.ம.க. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸே சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தது பா.ம.க. ஆனாலும், அந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் அக்கட்சியால் வெற்றி பெற இயலவில்லை. 2021ஆம் ஆண்டிலும் அதே கூட்டணியில் தொடர்ந்த பா.ம.க., 23 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது.
“பாட்டாளி மக்கள் கட்சியின் உச்சகட்ட காலம் முடிந்துவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியமான கோரிக்கை, இட ஒதுக்கீடுதான். வன்னியர்களையும் உள்ளடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டபோதே அது பெருமளவு எட்டப்பட்டுவிட்டது. அதுபோக, பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியாக இருக்கும் வன்னியர் சமூகமும் வெவ்வேறு கட்சிகளை நாட ஆரம்பித்துள்ளது” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
வன்னியர் சங்கம் முதல் பாமக உருவானது வரை
பட மூலாதாரம், X/PMK
படக்குறிப்பு, கடந்த மே மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை பௌர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழாவில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ்பின்தங்கிய நிலையில் உள்ள இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் வன்னிய அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கருதிய ராமதாஸ், 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி வன்னிய அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
அதன்படி, அரசியல் சார்பற்ற வன்னியர் சங்கம் ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு, வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கத்துக்கு என ‘கனல்’ என்ற பெயரில் புதிய மாத இதழும் துவங்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை மையமாகக் கொண்டு தனது பயணத்தைத் துவங்கியது வன்னியர் சங்கம். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2 சதவிகிதம் வழங்க வேண்டும் என்றும் ஈரோட்டில் நடந்த வன்னியர் சங்க முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பிறகு தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள், பொதுக் கூட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது. இதற்கு நடுவில் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனை சந்தித்து இது குறித்துப் பேசுவதற்குப் பல முறை முயன்றும் அது நடக்கவில்லை என ‘கழகத்தின் கதை’ நூலில் குறிப்பிடுகிறார் ராமதாஸ்.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தொடர் சாலை மறியல் போராட்டத்தை நடத்த பா.ம.க. முடிவு செய்தது. இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, ராமதாஸ் வன்னிய மக்களின் முக்கிய அடையாளமாக உருவெடுத்தார். இந்நிலையில், 1989ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைத் துவக்கினார் ராமதாஸ்.
விஜயகாந்த் வருகையால் ஏற்பட்ட பின்னடைவு
பட மூலாதாரம், DR. S. RAMADOSS FB
படக்குறிப்பு, ‘ஊடகங்கள் மத்தியில் ராமதாஸின் அறிக்கைகள் கவனம் பெறுபவையாக உள்ளன’ராமதாஸின் அறிக்கைகள் ஆரம்பக் காலத்தில் இருந்தே ஊடகங்களால் வெகுவாகக் கவனிக்கப்பட்டன என்கிறார் ப. கோலப்பன்.
“இந்திய அளவில் ஊடகங்களுக்கான அறிக்கையை புரஃபஷனலாக உருவாக்கிய முதல் சில கட்சிகளில் பா.ம.கவையும் ஒன்றாகச் சொல்ல முடியும். ஊடகங்களில் எது செய்தியாக வெளி வரும் என்பது ராமதாஸுக்கு நன்றாகத் தெரியும். தேவையில்லாத தகவல்கள் ஏதும் அறிக்கையில் இருக்காது. இதனால், ஊடகங்களில் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க இடம் கிடைத்தது” என்கிறார் அவர்.
“இந்தக் காலகட்டத்தில் சமூக நீதி, தமிழ்த் தேசியம், ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு போன்ற அம்சங்களை அவர் முன்னெடுத்தார். திருமாவளவனுடனும் சேர்ந்து செயல்பட்டார். ஆனால், 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, அக்கட்சி பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.
இதற்கு, விஜயகாந்த்தின் அரசியல் வருகை உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தன. பா.ம.க. வலுவாக இருக்கும் விருத்தாசலம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளரான கோவிந்தசாமியை பின்னுக்குத் தள்ளி விஜயகாந்த் வெற்றி பெற்றார். பல இடங்களில் பா.ம.கவுக்கான வாக்குகள் விஜயகாந்த் கட்சிக்கு இடம் மாறியிருந்தன” என்கிறார் ப. கோலப்பன்.
கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை சாதிகளை ஒன்றாகத் திரட்ட அவர் துவங்கிய அமைப்பு பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டது. அதேபோல, தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் ஏற்பட்ட கலவரத்திலும் பா.ம.க. மீது குற்றம் சாட்டப்பட்டது. அதையொட்டி வந்த தேர்தலில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வெற்றி பெற்றாலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் அதன் தாக்கம் எதிரொலிக்கவில்லை.
செல்வாக்கைத் தொடர்ந்து இழந்து வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தந்தை – மகன் இடையிலான போட்டியால் பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் மிகவும் சிக்கலாகி இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஷ்யாம்.
“நேற்று (ஜூன் 18) ஒரே நாளில் பா.ம.கவின் இரு எம்.எல்.ஏ.க்கள் நெஞ்சு வலி என மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அ.தி.மு.க. அக்கட்சியுடன் கூட்டணி வைக்க நினைத்தாலும், இடங்களை தந்தைக்கும் மகனுக்கும் பிரித்தா கொடுக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் ஷ்யாம்.
பா.ம.க. கடைசியாகப் போட்டியிட்ட 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு 4.33 சதவிகித வாக்குகளையே பெற்றது. தருமபுரியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக கட்சியின் நிறுவனர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும் மோதி வருகின்றனர்.
“வட தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இன்னமும் அக்கட்சியின் வாக்கு வங்கி ஓரளவுக்கு அப்படியே நீடிக்கிறது. ஆகவே, அக்கட்சி ஒற்றுமையாக இருந்து, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால், அது ஒரு கடுமையான போட்டியைத் தர முடியும்” என்கிறார் ப. கோலப்பன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு