வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த தியாகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த தியாகராசா பிரகாசுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனுக்கு ஆதரவாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 6 உறுப்பினர்கள் என மொத்தமாக 12 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டிருந்தனர்.

அதேபோன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவாகியுள்ளார்.

26 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன் ஜெயந்தன் 15 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமார் 7 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

அதேவேளை காரைநகர் பிரதேசசபையை தமிழரசுக்கட்சி இழந்துள்ள நிலையில் மான் மற்றும் சைக்கிள் கட்சிகளது ஆதரவுடன் சுயேட்சைக்குழு ஆட்சியை பிடித்துள்ளது.