இரான் விஷயத்தில் டிரம்ப் நிர்வாகத்தில் பிளவு – இராக் போரின் மோசமான நினைவுகளால் அச்சமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துளசி கப்பார்ட்டுடன் டிரம்ப்எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர்பதவி, பிபிசி11 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் இணைய வேண்டுமா வேண்டாமா என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவில், அணு ஆயுதத்தை உருவாக்கும் பணியில் இரான் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதுதான் மையக் கேள்வியாக உள்ளது.

இந்த பிரச்னை அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல்களை உருவாக்கலாம் என்பதால், டிரம்புக்கும் அவரது உயர் ஆலோசகர்களில் ஒருவருக்கும் இடையே ஒரு வெளிப்படையான பிளவை உருவாக்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியின் போது, குடியரசுக் கட்சியைச் சார்ந்த மற்றொரு அதிபரின் நிர்வாகம் முன்வைத்த வாதங்களை இச்சூழல் நினைவூட்டுகிறது.

கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டிலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பும் போது, மார்ச் மாதத்தில் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறிய, ‘இரான் அணுகுண்டு உருவாக்கவில்லை’ என்ற கருத்தை டிரம்ப் ஏற்கிறாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“அவர் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை,” என்று அதற்கு பதிலளித்த டிரம்ப், இரான் அணுகுண்டு உருவாக்கத்துக்கு “மிக அருகில்” இருப்பதாக நம்புவதாகவும் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.2003ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த இரானின் அணு ஆயுத திட்டத்தை அந்த நாடு மீண்டும் தொடங்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அணு ஆயுத தயாரிப்புக்கான முக்கிய கூறான செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரானின் கையிருப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கப்பார்ட் தெரிவித்தார்.

அமெரிக்க உளவுத்துறை குறித்து முன்பு வைத்த விமர்சனத்தாலும், பதவியில் இருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபர் பஷர் அல்-அசத் போன்ற அமெரிக்க எதிரிகளைச் சந்திக்க அவர் தயாராக இருந்ததாலும், வெளிநாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து வெளிப்படையாக கருத்து தெரிவித்ததாலும் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு துளசி கப்பார்ட் தேர்தேடுக்கப்பட்டபோது சர்ச்சை எழுந்தது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்த துளசி கப்பார்ட், ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் செனட்டர் பெர்னி சாண்டர்ஸை ஆதரித்தார். பின்னர் 2022இல் ஜனநாயகக் கட்சியுடன் தொடர்பை முறித்துக் கொண்டு, கடந்த ஆண்டு டிரம்பை ஆதரிக்கத் தொடங்கினார்.

உளவுத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டது, பிப்ரவரியில் 52-48 என்ற வாக்கு அடிப்படையில் செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்டபோது, டிரம்ப் தனது நிர்வகத்தில் உலக பிரச்னைகளில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாதவர்களுக்கு இடம் தருகிறார் என்பதற்கான சான்றாக கருதப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரான் தாக்குதலில் சேதமடைந்த இஸ்ரேல் மருத்துவமனைகெப்பார்ட் வேறுவிதமாக சொன்னாலும், டிரம்ப் உளவுத்துறை இயக்குநர் சொன்னதை ஏற்கவில்லை. இது, இரானுக்கு எதிராக கடுமையாக நடக்க விரும்பும் குழுவினர் வெள்ளைமாளிகையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது

வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட விரும்பாத மற்றொருவரான துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், கப்பார்டை ஆதரித்துள்ளார். அதே நேரத்தில், இரான் தொடர்பாக டிரம்ப் எதைத் தேர்வு செய்தாலும், அதற்கு தானும் ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் அதிபருக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க மக்களின் இலக்குகளை நிறைவேற்றும் வகையில்தான், அவர் அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூற முடியும்” என்று செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் வான்ஸ் பதிவிட்டார்.

இஸ்ரேல் -இரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட வேண்டுமா என்பதைச் சுற்றி, டிரம்பின் ‘ America first (அமெரிக்கா முதலில்) ‘ இயக்கத்திற்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், டிரம்ப் மற்றும் கப்பார்ட் ஆகியோருக்கு இடையே தோன்றிய கருத்து முரண்பாடும், அந்த இயக்கத்தின் உள்ளிருக்கும் இந்தக் குழப்பத்தில் ஒன்றாகவே காணப்படுகிறது.

இரான் அணு ஆயுத தயாரிப்பில் மிக நெருக்கத்தில் இருப்பதாக நம்பும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரானுக்கெதிராகப் பேசும் குழுவினர் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கம் உட்பட பலரும், கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிவிப்பை சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதில், இரான் 20 ஆண்டுகளில் முதன்முறையாக அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறியது எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா வெளியுறவு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனக் கருதுபவர்கள், குறிப்பாக பழமைவாத ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் போன்றவர்கள், ‘இரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கான ஆதாரம் மிகைப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள்.

இதனை அடிப்டையாகக் கொண்டு, இரானில் ஆட்சி மாற்றம் செய்யவும், ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் முயற்சி நடக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

“இஸ்ரேலை ஆதரிப்பவர்களுக்கும், இரான் அல்லது பாலத்தீனியர்களை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் பிளவு இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையான பிளவு, வன்முறையை எளிதாக ஊக்குவிப்பவர்களுக்கும், அதைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் இடையேதான் உள்ளது” என கடந்த வாரம் கார்ல்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

2003ஆம் ஆண்டு அமெரிக்கா இராக் மீது நடத்திய படையெடுப்பை இப்போது அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் . அதேபோல், மூன்று மடங்கு பரப்பளவும் இரு மடங்கு மக்கள்தொகையும் கொண்ட இரான் மீது தாக்குதல் நடத்தினால், இதுவும் அதே போல் பேரழிவு தரும் வெளியுறவுக் கொள்கை முடிவாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

2003ஆம் ஆண்டு இராக் மீது நடத்திய அமெரிக்க படையெடுப்பை, பேரழிவு தரும் ஆயுதங்களால் அமெரிக்காவுக்கு கடும் ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நியாயப்படுத்தியது.

ஆனால், அதற்கான ஆதாரங்கள் பின்னால் தவறானவை என நிரூபிக்கப்பட்டன.

“அமெரிக்காவிற்கு ஆபத்து ஏற்படக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன. அதற்கான இறுதிச் சான்றாக, அணுகுண்டு வெடிக்கும் வரை காத்திருக்க முடியாது ” என்று புஷ் 2002ம் ஆண்டு அக்டோபரில் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அமெரிக்க நிர்வாகம் வெளியுறவுத்துறை செயலாளர் கொலின் பவலை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியது. அங்கு அவர் ஒரு சிறிய குப்பியை உயர்த்தி காட்டி, இது இராக்கிடம் உள்ள ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவின் சிறிய மாதிரியை மட்டுமே குறிக்கிறது என்று கூறினார்.

“இவை வெறும் ஊகங்கள் மட்டுமல்ல” என்று கூறிய பவல், “நாங்கள் உங்களுக்கு வழங்குவது, உறுதியான நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் எடுத்த முடிவுகளும் உண்மைகளும் “என்று தெரிவித்தார்.

உளவுத்துறையின் தகவல்கள் உண்மையானதா என்ற சந்தேகங்கள் மற்றும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் உள்ளதற்கான எந்த சான்றும் இல்லாத நிலையில், அதிகப் பொருட்செலவில், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி அமெரிக்கா இராக்கில் படையெடுத்தது.

இது பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றியை ஏற்படுத்தியது மற்றும் குடியரசுக் கட்சிக்கு உள்ளே அதிருப்தியையும் அதிகரித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புஷ்ஷின் வெளியுறவுச் செயலாளராக இருந்த கொலின் பவல், போருக்கான வாதத்தை முன்வைத்தார்.2016 ஆம் ஆண்டு வாக்கில், குடியரசுக் கட்சியினர் தங்களது அரசியல் நிலைப்பாட்டை குறித்து அதிகமான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையே, இராக் போரை விமர்சித்து வந்த டிரம்ப், தனது கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வாகவும், பின்னர் வெள்ளை மாளிகையை கைப்பற்றவும் வழிவகுத்தது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அமெரிக்க உளவுத்துறை முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மத்திய கிழக்கில் ராணுவத் தலையீட்டைப் பற்றி டிரம்ப் யோசித்து வருகிறார்.

தென்கரலைனா செனட்டர் லிண்ட்சி கிராஹாம் போன்ற பழமைவாதிகள் இதுதான் ஆட்சி மாற்றத்துக்கான நேரம் என்று கூறினாலும், 2003ஆம் ஆண்டு இராக்கில் நடந்த படையெடுப்பும், அதன்பின் நாட்டைக் கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிகளையும் போன்ற ஒரு திட்டத்துக்கு வெள்ளை மாளிகையில் அதிக ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இருப்பினும், ராணுவ நடவடிக்கைகள் கணிக்க முடியாத வழிகளில் உருவாகக்கூடும் .

மேலும் டிரம்ப், தனது கட்சியின் முன்னாள் அதிபரைவிட வேறுபட்ட சூழ்நிலையிலும், வேறுபட்ட திட்டத்தையும் கருத்தில் கொண்டிருந்தாலும், தனது உளவுத்துறை ஆலோசகர்களின் தகவல்களை நம்பினாலும் நிராகரித்தாலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்க வாய்ப்புள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு