வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து – டிரம்புடனான சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை மதிய உணவின் போது சந்திப்பார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனிர் ஐந்து நாள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணிக்கு, அவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்பை மதிய உணவின் போது சந்திப்பார்.

முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் 35 நிமிடங்கள் உரையாடியிருந்தார். பிரதமர் மோதி, ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடாவிற்குச் சென்றிருக்கிறார்.

இந்த உச்சிமாநாட்டில் ட்ரம்பும் கலந்து கொண்டிருந்தார், ஆனால் மோதி கனடாவிற்குச் செல்வதற்கு முன்பே டிரம்ப் தனது பயணத்தை குறைத்துக்கொண்டு வாஷிங்டனுக்கு திரும்பினார்.

ஒருபுறம், ஜெனரல் ஆசிம் முனிரின் வெள்ளை மாளிகையில் நடைபெறவிருக்கும் மதிய உணவு சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மறுபுறம், பிரதமர் மோதி மற்றும் டிரம்ப் இடையே நடந்த உரையாடல் குறித்தும் பரவலாகப் பேசப்படுகிறது.

மோதி மற்றும் டிரம்பிற்கு இடையில் நடந்த உரையாடலின் விவரங்களை விளக்கிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “அதிபர் டிரம்பின் வேண்டுகோளின்படி, புதன்கிழமை இரு தலைவர்களும் உரையாடினர். ஏப்ரல் 22-க்குப் பிறகு இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் முடிவை மொத்த உலகத்தின் முன் வைத்ததாக பிரதமர் மோதி, அதிபர் டிரம்பிடம் தெளிவாகத் தெரிவித்தார்,” என்று கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

“பாகிஸ்தான் இந்தியாவின் மீது பெரிய தாக்குதலை நடத்தலாம் என கடந்த மே 9 அன்று, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோதியிடம் தொலைபேசியில், தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோதி, இந்தியா அதைவிடப் பெரிய தாக்குதலை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார்.” என அவர் மேலும் கூறினார்,

“இந்தியாவின் பொருத்தமான பதிலடி காரணமாக, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும்படி பாகிஸ்தான் இந்தியாவை வலியுறுத்தியது. இந்த நிகழ்வின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு மட்டத்திலும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை டிரம்பிடம் பிரமர் மோதி தெளிவாக கூறினார். ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மட்டுமே நடந்தது. இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது என்று பிரதமர் மோதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்,” என விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

டிரம்பின் அறிக்கையால் சங்கடத்திற்குள்ளான இந்தியா

“அதிபர் டிரம்ப் இந்தியாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டார். பிரதமர் மோதி, ட்ரம்பிடம், இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னமும் தொடர்கிறது என்றும், பயங்கரவாதத் தாக்குதலை இந்தியா யுத்தமாகவே கருதுகிறது என்றும் தெரிவித்தார். கனடாவிலிருந்து அமெரிக்கா வழியாக இந்தியாவுக்குச் செல்லமுடியுமா என டிரம்ப், பிரதமர் மோதியிடம் கேட்டார்.”

“ஆனால், முன்னரே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக அவ்வாறு செய்யமுடியாது என் பிரதமர் மோதி தனது இயலாமையை வெளிப்படுத்தினார். அடுத்த குவாட் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வரும்படி டிரம்புக்கு பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார். இந்தியா வருவதற்கு ஆவலாக உள்ளதாக டிரம்ப் கூறினார்.” என்றும் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த மாதம் இந்தியா பாகிஸ்தானின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியிருந்தது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், டிரம்ப் மே 10 அன்று தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு சங்கடமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் இந்த வருடம் பிப்ரவரியில் சந்தித்தார்டிரம்ப் தனது பதிவில், “அமெரிக்கா இரவு முழுவதும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே மத்தியஸ்தம் செய்தது, பின்னர் இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன,” என்று எழுதியிருந்தார்.

டிரம்பின் அறிவிப்பை பாகிஸ்தான் வரவேற்றிருந்தாலும், இந்தியா அதை ஏற்கவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், யுத்த நிறுத்தத்தை இருதரப்பு விவகாரமாகவே குறிப்பிட்டார்.

காஷ்மீர் ஒரு இருதரப்பு பிரச்சினை என்பதும், இதில் மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதும் இந்தியாவின் கொள்கையாக உள்ளது.

டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்புடன் நிற்கவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வர்த்தகத்தை நிறுத்துவதாக அச்சுறுத்தியதாகவும், அதன் பிறகே இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு தயாரானதாகவும் அவர் சில சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.

தற்போது இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது, டிரம்ப் வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரித்து வருகிறார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு பதிவில், இஸ்ரேலும் இரானும் இந்தியா-பாகிஸ்தான் போல போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக வேண்டும் என்று எழுதினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் தனது முயற்சியால் நடந்ததாக டிரம்ப் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்தியாவின் மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செல்லானி, “பிரதமர் மோதி ஜி-7 உச்சிமாநாட்டிற்காக கனடாவின் ஆல்பர்ட்டாவிற்கு செல்வதற்கு முன்பே அதிபர் டிரம்ப் திரும்பிவிட்டார். இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்கவிருந்ததாகக் கூறப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது பங்கு இருந்ததாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருவதால், இந்த சந்திப்பு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருக்கும்,” என எக்ஸ் தளத்தில் எழுதினார்.

எந்தவொரு நாட்டின் மத்தியஸ்தத்தையும் ஏற்க முடியாது என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அதிபர் டிரம்பை மதிய உணவின் போது சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஜெனரல் முனிர் மற்றும் டிரம்ப் சந்திப்பின் முக்கியத்துவம்

தெற்காசியாவின் புவிசார் அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் மைக்கேல் குகல்மேன், ஜெனரல் முனிர் மற்றும் அதிபர் டிரம்பின் சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

“அதிபர் டிரம்ப் மற்றும் ஜெனரல் முனிரின் சந்திப்பை இஸ்ரேல்-இரான் போரின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. பாகிஸ்தான்-அமெரிக்க உறவை முக்கிய கனிமங்கள் மற்றும் கிரிப்டோவின் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும். இந்த விவகாரங்களில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டுகிறார். இந்த விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்துவத்ற்கான அதிகாரம் ஜெனரல் முனீருக்கு உள்ளது. காஷ்மீர் விவகாரம் கூட இதில் அடங்கும்.”

இந்தியாவின் முன்னாள் தூதராக அதிகாரியான கே.சி. சிங், மைக்கேல் குகல்மேனின் இந்தப் பதிவை மறு பதிவு செய்து எழுதியுள்ளார்: “இது எதிர்பாராதது. இதற்கு இரண்டு பொருள்கள் இருக்கலாம். ஒன்று, இரானில் நடைபெறும் போரில் அமெரிக்கா ஈடுபட்டால் பாகிஸ்தான் ராணுவத்தின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை டிரம்ப் புரிந்துகொள்ள முயல்கிறார். அல்லது, இரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிக்க டிரம்ப் ஏற்கனவே முடிவு செய்துவிட்டு, அதற்கு பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்க்கிறார்.”

“அமெரிக்க மூத்த அதிகாரிகள் அடிக்கடி பாகிஸ்தான் இராணுவத் தளபதிகளைச் சந்திப்பார்கள். ஆனால், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரால் விருந்தோம்பல் செய்யப்படுவது அசாதாரணமானது. இஸ்ரேல்-இரான் போர் உள்ளிட்ட பல காரணங்களால் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது,” என குகல்மேன் மேலும் எழுதியுள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதற்கிடையே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மீது கவனம் வைத்திருக்கும் ஆய்வாளர் டெரெக் கிராஸ்மேன் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்:

“இந்தியா இப்போது குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெள்ளை மாளிகையில் பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் முனீரை, டிரம்ப் சந்திக்கவிருக்கிறார். பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டார் என இந்தியா கருதும் அதே ஜெனரல் முனிர்.”

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தியிருந்தார். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக அவர் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த மாதமோ, பாகிஸ்தானின் தலைமைத்துவத்தை மிகவும் வலுவானது என்று டிரம்ப் பாராட்டியிருந்தார்.

இந்த மாதத்தில், அமெரிக்க மத்திய தலைமையின் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான், அமெரிக்காவின் தன்னிகரற்ற கூட்டாளியாக இருந்ததாகக் கூறியிருந்தார்.

அமெரிக்கா-பாகிஸ்தான் உறவுகளை இந்தியாவுடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்றும் ஜெனரல் குரில்லா கூறியிருந்தார்.

அவர் இந்தக் கருத்தை செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படை சேவைகள் குழு கூட்டத்திற்கு முன்பு தெரிவித்திருந்தார். பாகிஸ்தானுடனான உறவால், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் உள்ள பதற்றத்தின் விலையை அமெரிக்கா கொடுக்கக்கூடாதுஎன்று குரில்லா குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார், அவர் அங்கு டிரம்பை சந்திக்கவிருந்தார் ஆனால் டிரம்ப் அதற்கு முன்பாகவே சென்றுவிட்டிருந்தார்அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பாகிஸ்தானின் தூதராக இருந்த மலிஹா லோதி, பிரிட்டன் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸிடம் ,”பாகிஸ்தான் அமெரிக்காவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறது. ஆனால் அதற்காக சீனாவுடனான உறவை கெடுத்துக் கொள்ளாது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் உள்ள உறவை அமெரிக்காவுடனான உறவுடன் ஒப்பிட முடியாது. சீனா பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதால், பாகிஸ்தானின் மூலோபாய முன்னுரிமை சீனாவாக உள்ளது. ”

இதே மாதத்தில், ஐரோப்பிய செய்தி இணையதளம் ஒன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம், “நீங்கள் டொனால்ட் டிரம்பை நம்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு பதிலளிக்கையில், “இதன் பொருள் என்ன?” என்று ஜெய்சங்கர் கேட்டார்.

“அவர் கூறுவதில் உறுதியாக இருக்கிறாரா? இந்தியா தனது உறவை மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு பங்காளியாக அவர் இருக்கிறாரா?” என்று அந்த செய்தியாளர் கேட்டார்.

இதற்கு ஜெய்சங்கர், “எங்கள் நலன்களுக்கு உகந்த எந்த உறவையும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். அமெரிக்காவுடனான உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் எக்ஸ் அதிபராக இருந்தாலும் ஒய் அதிபராக இருந்தாலும், எங்கள் உறவு அதனால் தீர்மானிக்கப்படுவதில்லை,” என்று கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு