வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (18) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

இதனிடையே வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சோமசுந்தரம் சுகிர்தன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றிருந்தது.

பகிரங்கமாக நடைபெற்ற தவிசாளர் தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளை பெற்ற நிலையில்  பிரதேசசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது.

அதேவேளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி கைப்பற்றியுள்ளது.கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெரும்பான்மை வாக்குகளை பெற்ற  தியாகராஜா நிரோஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட உபதவிசாளராக கூட்டணியின் உறுப்பினரான ஜனர்த்தனன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.