வடக்கிலும் கிழக்கிலும் முன்னதாக சபைகளை கைப்பற்றிக்கொண்ட தமிழ் கட்சிகள் தற்போது கதிரை சுகங்களை அனுபவிக்க பேரம் பேசல்களை ஆரம்பித்துள்ளன.

அவ்வகையில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது .

வவுனியா மாநகர சபையில் தமிழ்க்கட்சிகளிற்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில் கூட்டணியின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை சேர்ந்த உறுப்பினருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாநகர முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்குப் பின்னரான காலப்பகுதியில் சங்கு கூட்டணியின் மற்றொரு பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு(ரெலோ) முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் மாநகரசபையின் முதல்வராக தமிழீழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.