இரான் மீது டிரம்ப் தன்னிச்சையாக போர் அறிவிக்க முடியுமா? – அதிகாரங்களை கட்டுப்படுத்த ஆலோசிக்கும் அமெரிக்க நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் மற்றும் இரான் இடையே கடந்த சில நாட்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமூக ஊடகங்களில் மாறி மாறி வார்த்தைப் போர் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்களில் நடந்து வரும் கருத்துப் பரிமாற்றங்கள் என்ன?

கடந்த செவ்வாயன்று டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இரான் வான்வெளியின் முழு கட்டுப்பாட்டை பெற்றுவிட்டதாக அறிவித்திருந்தார்.

மேலும் அவர் காமனெயியை எச்சரித்திருந்தார். “எங்களுக்கு “அதி உயர் தலைவர்” எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியும். அவர் மிக எளிமையான இலக்கு, ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். அவர்களை நாங்கள், குறைந்தபட்சம் இப்போதைக்கு குறிவைக்கப் (கொலை செய்ய) போவதில்லை” என்று தெரிவித்திருந்தார் டிரம்ப்

தங்களின் பொறுமை வலுவிழந்து வருவதாகக் கூறிய டிரம்ப், “நிபந்தனையின்றி சரணடையுங்கள்” என ஒற்றை வரியில் மட்டும் தெரிவித்திருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் இரானைப் பொருத்தவரை இது தொடர்பாக எந்த சமிக்ஞையும் இல்லை.

எக்ஸ் தளத்தில் வெவ்வேறு மொழியில் உள்ள கணக்குகளின் மூலம் பல பதிவுகளை வெளியிட்ட காமனெயி, “ஜியோனிஸ்டுகளுடன் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோன்” எனத் தெரிவித்துள்ளார்.

“ஜியோனிஸ்டுகள் மீது எந்த இரக்கமும் காட்ட மாட்டோம்” என ஒரு பதிவின் மொழிபெயர்ப்பு கூறுகிறது. இன்னொரு பதிவில் “சண்டை தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர்.புதன்கிழமையன்று பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரைச் சந்திக்க உள்ளார் டிரம்ப்.

புதனன்று வெள்ளை மாளிகையில் மதிய உணவின்போது இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் ஊடகத்தினருக்கு அனுமதியில்லை.

ஜெனரல் முனிர் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ளார். இருவர் இடையேயான சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வருகிற நிலையில் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளுக்கும் மோதல் பரவி விடுமோ என அச்சம் நிலவுகிற சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

முனிர் கடந்த மே மாதத்தின் இறுதியில் இரான் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி முகமது ஹுசைன் பகேரியைச் சந்தித்ததாக இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பதற்றங்கள் தொடங்கிய ஜூன் 13ம் தேதி அன்று நடைபெற்ற தாக்குதலில் பகேரி கொல்லப்பட்டார்.

முனிர் பாகிஸ்தானில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக அறியப்படுகிறார்.

இரானுடனான மோதலில் சேர விரும்பும் டிரம்ப் – அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

இரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவும் சேர டிரம்ப் விரும்பினாலும் அவரது குழுவில் ஒருமித்த கருத்து இல்லை என சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய் மதியம் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு குழுவுடன் இஸ்ரேல் – இரான் மோதல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இரானின் அணுசக்தி நிலைகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இணைய டிரம்ப் விரும்புவதாக இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐந்து நபர்கள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தலைப்பு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது. டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களிடமே முழுமையான ஒப்புதல் இல்லை என சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

கடவுளின் குரலைக் கேளுங்கள் – டிரம்ப்பிடம் கூறிய தூதர்

பட மூலாதாரம், Getty Images

ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில் டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹுக்காபீயிடம் இருந்து பெற்ற குறுஞ்செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

அந்த செய்தியில் டிரம்ப்பை புகழ்ந்த ஹுக்காபீ, தற்போது நடைபெற்று வரும் இரான் – இஸ்ரேல் மோதலுக்கு எவ்வளவு பதிலளிக்க வேண்டும் என்பதை ஆராய்கையில் அவர் கடவுளின் குரலைக் கேட்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

“இந்த நூற்றாண்டின், அல்லது முன்பு எப்போதும் இல்லாத மிக செல்வாக்காக அதிபராக நீங்கள் இருக்க வேண்டும் என்று தான் துப்பாக்கிச் சூட்டில் கடவுள் உங்களைக் காப்பாற்றியுள்ளார்” என 2024ல் டிரம்ப் மீது நிகழ்ந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தை மேற்கோள் காட்டி ஹுக்காபீ தெரிவித்துள்ளார்.

“உங்கள் தோள் மீது உள்ள முடிவுகள் வேறு யாராலும் எடுக்கப்படக் கூடாது” என அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார்.

ஒரு தூதராக தனது பதவிக்கும் இஸ்ரேலுக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் “இந்தப் பதவியை கைவிட மாட்டேன்” என்றும் கூறியிருந்தார்.

“நமது கொடி கீழே வராது” எனக் கூறினார் ஹுக்காபீ.

டிரம்ப் இந்தச் செய்தியை எந்த விதமான கூடுதல் தகவலும் இல்லாமல் பகிர்ந்துள்ளார். அவர் இன்று தனது தேசிய பாதுகாப்பு குழுவினரைச் சந்தித்தார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு உடனும் பேசியுள்ளார். ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன் தொடங்கி வெள்ளி வரை மூடப்படக்கூடிய சூழலில் இந்த அழைப்பு நடந்துள்ளது.

டிரம்ப்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த திட்டமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானைத் தாக்கும் டிரம்ப்பின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமா என அமெரிக்க நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.இரானைத் தாக்கும் டிரம்ப்பின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமா என அமெரிக்க நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.

இரான் உடன் நேரடியான போரைத் தொடங்கும் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மசோதா கொண்டு வரலாமா என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வருகின்றனர்.

போர் அதிகார தீர்மானம், டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அனுமதியைப் பெறாமல் இரானுக்கு எதிராக “அனுமதிக்கப்படாத தாக்குதல்களை” மேற்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கிறது.

அமெரிக்க செனட்டில் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய விர்ஜினியாவைச் சேர்ந்த செனடர் டிம் கெய்ன், இரானுக்கு எதிராக அமெரிக்க சண்டையிட்டால், 2001-ல் தொடங்கி மத்திய கிழக்கில் அமெரிக்க சண்டையிடும் மூன்றாவது போராக இது அமையும் என்றார்.

இரானுடனான அத்தகைய போர் “இந்த நாட்டிற்கு ஒரு பேரழிவான தவறாகிவிடும்” எனக் கூறிய அவர், அது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது அதிக அளவிலான தாக்குதல்கள் நடத்த வழிவகுக்கும் என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு