Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு?
பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP via Getty Images
படக்குறிப்பு, ஹைஃபா நகர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பிந்தைய படம் (ஜூன் 16,2025)ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல் தொடர்கிறது. இரானின் அணு ஆயுத திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் பல வான்வழி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
பதிலடியாக, இரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, அவற்றில் சில இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டி குடியிருப்புப் பகுதிகளை அடைந்தன.
இரான் சுகாதாரத்துறை கூற்றின்படி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அந்நாட்டில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபக்கம் இஸ்ரேலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஐ எட்டியுள்ளது.
இரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற நகரங்களை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் சொல்கிறது.
இரான் தாக்குதலில் இஸ்ரேலின் இரண்டு முக்கிய நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஹைஃபா ஆகியவை இலக்காயின.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஹைஃபா என்பது இஸ்ரேலின் வடக்கு துறைமுக நகரம். இங்கு ஒரு பெரிய துறைமுகமும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் உள்ளன.
முன்னதாக, டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற இஸ்ரேல் நகரங்கள் பல இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இது போன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா நகரை குறிவைப்பதற்கான காரணங்கள் மற்றும் இந்த நகரத்திற்கு இந்தியாவுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
ஹைஃபா நகரம் இஸ்ரேலுக்கு ஏன் முக்கியமானது?
இஸ்ரேல் விவகாரங்களில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா, தற்போது ஜெருசலேமில் உள்ளார்.
பிபிசி செய்தியாளர் அபய் குமார் சிங்குடன் பேசுகையில், இஸ்ரேலுக்கு ஹைஃபா நகரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார். “ஹைஃபா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாகும். இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்த இந்த நகரம், மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்லாமல், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானது.” என்றார் அவர்.
உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நகரில் அதிகம் இருப்பதாக கூறும் அவர், “மைக்ரோசாஃப்டாக இருக்கட்டும், கூகுளாக இருக்கட்டும், இன்டெல்லாக இருக்கட்டும், அனைத்து ஹை-டெக் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை ஹைஃபாவில் வைத்திருக்கின்றன,” என்கிறார்.
இஸ்ரேலின் மிகப்பெரிய கச்சா சுத்திகரிப்பு மையம் ஹைஃபா நகரில் இருக்கிறது, இது அதன் பொருளாதார முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
ஹைஃபாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது இரானின் தாக்குதல் நடத்தியிருப்பது உறுதி செய்யப்ப்பட்டது
திங்கட்கிழமை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து புகை எழுவது போன்று காணப்பட்ட ஒரு காணொளி அதனை உறுதிசெய்தது.
இந்த வீடியோவில், இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள பகுதியிலிருந்து புகை எழுவது தெரிகிறது. இந்த வீடியோ இரானின் தாக்குதல்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP via Getty Images
படக்குறிப்பு, ஹைஃபா நகரில் இரான் ஏவுகணை தாக்கிய இடத்தில் இஸ்ரேலின் அவசர கால மற்றும் பாதுகாப்பு சேவை தொழிலாளர்கள்பிபிசி, வீடியோவின் பல முக்கிய பிரேம்களைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் எனப்படும் ஆய்வை மேற்கொண்டு, அவற்றை செய்தி முகமை படங்களுடன் பொருத்தி, சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. பின்னர், வீடியோவிலும் செய்தி முகமை படங்களிலும் காணப்பட்ட முக்கிய அம்சங்களை கூகுள் எர்த் மற்றும் அப்பகுதியின் பழைய காட்சிகளுடன் ஒப்பிட்டது.
இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, சுத்திகரிப்பு ஆலை இரவில் இரானிய ஏவுகணைகளால் குறி வைக்கப்பட்டதாகவும், இதனால் விநியோக குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் பசன் குழுமம்,தெரிவித்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மற்ற பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் பசன் குழுமம் கூறியது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தவிர, ஹைஃபாவில் இஸ்ரேலின் துறைமுகமும் அமைந்திருப்பது இந்நகரத்தை பலவகையிலும் முக்கியமானதாக்குகிறது.
ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், “ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது. அங்கு ஏராளமான சரக்குகள் வந்து செல்கின்றன. வரலாற்று கோணத்தில் பார்த்தால், இஸ்ரேலின் முதல் வெளியுலகத் தொடர்பு இந்நகரத்திலிருந்தே தொடங்கியது” என்றார்.
2023 ஆம் ஆண்டு, ஹைஃபாவில் ஒரு துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியது. இதில் 70 சதவீத பங்கு அதானி குழுமத்திடமும், 30 சதவீத பங்கு இஸ்ரேலின் கடோட் குழுமத்திடமும் உள்ளது.
நகரத்தின் மக்கள் தொகை குறித்து விளக்கும் ஹரேந்திர மிஸ்ரா, சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரம் ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார்.
“இங்கு கணிசமான அரபு மக்கள் உள்ளனர், இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர். பஹாய் சமூகத்திற்கு ஒரு மத வழிபாட்டு இடமும் உள்ளது. டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் போன்று, இங்கு பஹாய் தோட்டம் உள்ளது.” என்கிறார் அவர்.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான பஹாய் உலக மையமும் ஹைஃபாவில் அமைந்துள்ளது.
பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP via Getty Images
டெல் அவிவ், ஹைஃபா மட்டுமே இரானின் இலக்குகளாக உள்ளன?
ஹைஃபாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இரான், அதை இலக்காக்கியிருக்கலாமா?
இது குறித்து ஹரேந்திர மிஸ்ரா பேசுகையில், “மிக அதிக மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை இரான் குறிவைப்பதாக நம்புகிறேன். பல மதங்களுக்கு புனித தலமாக இருப்பதால் ஜெருசலேம் இதுவரை தாக்கப்படவில்லை.” என்றார்.
இரானின் ஏவுகணைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாக அவர் சொல்கிறார். ” இதுவரை பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது, ஆனால் 10-12 ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.” என்று அவர் கூறுகிறார்.
ஹைஃபா மற்றும் டெல் அவிவ் போன்ற நகரங்கள் மக்கள் தொகை அதிக அடர்த்தி கொண்டவை என்பதுடன், இஸ்ரேல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ஜெருசலேம் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரமாக இருந்தாலும், அங்கு இஸ்லாமிய தலங்கள் அதிகம் இருப்பதால், ஒருவேளை இரான் இதுவரை அதை குறிவைக்காமல் இருக்கலாம்.” என்பது அவரது கூற்று.
பட மூலாதாரம், Universal Images Group via Getty Images
ஹைஃபாவுடன் இந்தியாவுக்கு என்ன தொடர்பு?
இந்தியாவுக்கும் ஹைஃபாவுக்கும் இடையிலான உறவு 1918-ஆம் ஆண்டின் ஒரு வரலாற்று கதையுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது.
முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் பேரரசின் சார்பில் போரிட்ட இந்திய குதிரைப்படை வீரர்கள், துருக்கி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவற்றின் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து ஹைஃபா நகரத்தை விடுவித்தனர்.
இந்த வரலாறு இஸ்ரேலில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார். “ஹைஃபாவின் பள்ளிகளில் இந்த வரலாறு கற்பிக்கப்படுகிறது. ‘ஹைஃபாவின் நாயகன்’ யார் என்று குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் மேஜர் தள்பத் சிங் என சொல்வார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் போரில், ஜோத்பூர் லான்சர்ஸின் தளபதியான மேஜர் தள்பத் சிங் ஷெகாவத் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் மிலிட்டரி கிராஸ் விருது வழங்கப்பட்டது. பிரிட்டனுக்காக போரிட்ட 44 இந்திய வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்தனர். இது குதிரைப்படை முக்கிய பங்காற்றிய கடைசி யுத்தமாக வரலாற்றில் பார்க்கப்படுகிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், “இந்திய தூதரகமும் ஹைஃபா நகராட்சியும் ஒவ்வொரு ஆண்டும் ஹைஃபா தினத்தை இணைந்து கொண்டாடுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி இங்கு வருகை தந்தபோது, அவர் அங்கு சென்று இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.” என்றார்.
இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தீன் மூர்த்தி சௌக்கின் பெயர், தீன் மூர்த்தி ஹைஃபா சௌக் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இதற்கான விழாவில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொண்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு