‘சனி கிரகத்தில் மீன் நாற்றம், வியாழனில் முட்டை நாற்றம்’ – விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

பட மூலாதாரம், NASA

எழுதியவர், கேத்தரின் லாதம்பதவி, 34 நிமிடங்களுக்கு முன்னர்

விஞ்ஞானிகள் விண்வெளியின் வாசனைகள் மற்றும் துர்நாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிய, பூமியின் அருகிலுள்ள அண்டை கிரகங்களிருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகங்கள் வரை, இந்த ஆய்வு நீள்கிறது.

வியாழன், ‘கடுமையான துர்நாற்றம் வீசும் கிரகம்’ என்று மெரினா பார்செனிலா கூறுகிறார்.

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பல அடுக்குகளில் மேகங்களைக் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வேதியியல் கலவை உள்ளது என்றும் அவர் விளக்குகிறார்.

வாயுக்கள் நிறைந்த இந்த ராட்சத கிரகம் அதன் ‘விஷம் நிறைந்த மார்சிபன் மேகங்களின்’அற்புதமான நறுமணத்தால் ஒருவரை மயக்கக்கூடும் என்றும், ஆனால் உள்ளே ஊடுருவிச் செல்ல செல்ல, அந்த வாசனை மோசமாகிவிடும் என்றும் கூறுகிறார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“அங்கு நிலவும் அழுத்தத்தால் நசுக்கப்படும் நிலை ஏற்படும். அந்தச் சூழலில் இருப்பதை விட உயிரை இழப்பதே மேல் என நீங்கள் நினைப்பீர்கள். மேகத்தின் மேல் அடுக்கு, அம்மோனியா ஐஸ் (Ammonia ice) மூலம் உருவானது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பார்செனிலா கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியாழன், ‘கடுமையான துர்நாற்றம் வீசும் கிரகம்’ என்று மெரினா பார்செனிலா கூறுகிறார்.அவர் அந்த துர்நாற்றத்தை பூனையின் சிறுநீரின் துர்நாற்றத்துடன் ஒப்பிடுகிறார். “பின்னர், கீழே உள்ள அடுத்த அடுக்கிற்கு செல்லும்போது, அங்கு அம்மோனியம் சல்பைடை எதிர்கொள்வீர்கள். அதாவது, அம்மோனியாவும் கந்தகமும் ஒன்றாக இருக்கும். அது மிகவும் மோசமான ஒரு கலவை.” சல்பர் சேர்மங்கள், அழுகிய முட்டைகளின் துர்நாற்றத்திற்கு பெயர்போனவை.

நீங்கள் இன்னும் ஆழமாக ஆராய முடிந்தால், வியாழனின் புகழ்பெற்ற கோடுகள் மற்றும் சுழல்களை நீங்கள் காண்பீர்கள் என்று பார்செனிலா கூறுகிறார்.

“வியாழன் கிரகத்தில் வண்ணங்கள் நிறைந்த தடிமனான பட்டைகள் உள்ளன. இந்த வண்ணங்களில் சில அம்மோனியா மற்றும் பாஸ்பரஸின் புகைமூலங்களால் உருவாகலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.”

“தோலின்கள் எனப்படும் சில கரிம மூலக்கூறுகளும் உள்ளன, அவை பெட்ரோலுடன் தொடர்புடைய சிக்கலான கரிம மூலக்கூறுகள். எனவே, வியாழன் கிரகம் பூண்டுத் தன்மை மட்டுமல்லாது, பெட்ரோலிய ‘எண்ணெய்’ தன்மையையும் கொண்டிருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.

பார்செனிலா ஒரு விண்வெளி விஞ்ஞானி, வாசனை திரவிய வடிவமைப்பாளர் மற்றும் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் முனைவர் பட்டம் பெற்ற மாணவி. பிரபஞ்சம் குறித்து படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில், “அந்த வாசனை எப்படி இருக்கும்?” என்று அவர் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

பின்னர், தன்னுடைய ஆய்வகத்தில் அந்த மூலக்கூறு இருக்கிறது என்பதையும் உண்மையில் தன்னால் அதை உருவாக்க முடியும் என்பதையும் அவர் உணர்ந்தார்.

எனவே, செவ்வாய் கிரகத்தில் உயிரின் அறிகுறிகளைத் தேடும் தனது கல்விப் பணிகளுடன், லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு சிறப்பு கண்காட்சிக்காக விண்வெளியின் வாசனையை ஒத்திருக்கும் விஷயங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

விண்வெளியின் வாசனைகள்

பட மூலாதாரம், Mara Leite and Marina Barecenilla

படக்குறிப்பு, மெரினா பார்செனிலா தனது ஆய்வகத்தில் கிரகங்களின் வாசனையை உருவாக்குகிறார்.அழுகிய முட்டைகளின் துர்நாற்றம் முதல் பாதாம் பருப்பின் இனிய மணம் வரை, விண்வெளி என்பது வியக்கத்தக்க வகையில் மணம் வீசும் ஒரு இடம் என்று அவர் கூறுகிறார். வால் நட்சத்திரங்கள், கோள்கள், நிலவுகள் மற்றும் வாயு மேகங்களை நாம் நம் மூக்கால் முகர்ந்து பார்க்க முடிந்தால், அவை ஒவ்வொன்றும் தனித்துவமான வாசனையைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நறுமணங்கள் பிரபஞ்சத்தின் மர்மங்களைப் பற்றி என்ன கூற முடியும்?

பிரபஞ்சத்தின் வாசனை ஆராய நாம் புறப்படுவதற்கு முன், முதலில் என்ன வாசனைகள் உள்ளன என்பதைப் பற்றி ஒரு கணம் சிந்திப்பது அவசியம்.

வாசனை என்பது புலன்களில் மிகவும் பழமையானது என்று கூறலாம். சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்கியோசோயிக் கடல்களில் சுற்றித் திரிந்த ஒரு சிறிய ஒற்றை செல் உயிரினமான பாக்டீரியாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரசாயனத்தின் இருப்பு, அதுவொரு சுவையான உணவாகவோ அல்லது தவிர்க்க முடியாத ஆபத்தாகவோ இருப்பதை அந்த பாக்டீரியா உணர்ந்தால், அதன் ஃபிளாஜெல்லம் – அதாவது வால் போன்ற பகுதி, ஒரு உந்துசக்தியாகச் செயல்படும். அதன் மூலம் அந்த பாக்டீரியா வேகமாக நகர முடியும்.

பண்டைய மனிதர்களுக்கு, இந்த “மிகவும் அடிப்படையான வாசனை உணர்வு” வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர உதவியது.

மேலும் நமது சொந்த வாசனை உணர்வு என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழலில் உள்ள ரசாயனங்களைக் கண்டறியும் திறனின் மிகவும் நுட்பமான வடிவமாகும். நமது மூக்கில், மூலக்கூறுகளால் பிணைக்கப்பட்ட மில்லியன் கணக்கான சிறப்பு நியூரான்களால் உருவான அடர்த்தியான நரம்புக் கொத்துகள் உள்ளன. இவை கீமோரெசெப்டர்கள் எனப்படும்.

அவை ஒரு வேதிப்பொருளை உணரும்போது, நமது மூளைக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகின்றன. பின்னர் அது ஒரு தனித்துவமான வாசனையாக விளக்கப்படுகிறது.

இந்த வாசனை உணர்வு என்பது நம்மைச் சுற்றியுள்ள ரசாயனங்களைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது என்பதாகும். மனிதர்களைப் பொறுத்தவரை, வாசனை உணவுகளை அடையாளம் காணவோ அல்லது சுற்றுச்சூழல் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கவோ உதவுவது மட்டுமல்லாமல், பழைய நினைவுகளைத் தூண்டுகிறது மற்றும் சமூக தொடர்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மில்லியன் கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, வாசனை உணரும் திறன் என்பது நமது உளவியல் நலத்தோடு உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் நீண்டகாலம் தனிமையில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, தங்களது வீட்டை நினைவுப்படுத்தும் ஒரு முக்கிய இணைப்பாகவும் இது இருக்கலாம். ஆனால் வாசனைகள் அல்லது நாற்றங்களைப் பொறுத்தவரை விண்வெளி நிலையம் என்பது விசித்திரமான ஒரு இடம் தான்.

“அலெக்ஸி லியோனோவ் (விண்வெளி நடைப்பயணத்தை முடித்த முதல் நபர்) அனைத்து வெளிநாட்டு விண்வெளி வீரர்களுக்கும் பொறுப்பாக இருந்தார்,” என்று பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனை ஹெலன் ஷார்மன் கூறுகிறார்.

1991ஆம் ஆண்டு, ஷார்மன் சோவியத் விண்வெளி நிலையமான மிரில் எட்டு நாட்கள் செலவிடத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“விண்ணில் ஏவப்படுவதற்கு சற்று முன்பு, லியோனோவ் வார்ம்வுட் (Wormwood) செடியின் சிறிய பகுதியை என்னிடம் கொடுத்தார். மிரில் தங்கியிருந்த காலத்தில், ஷார்மன் எப்போதாவது அந்த செடியின் இலைகளை முகர்ந்து பார்ப்பார். ஏனென்றால், பூமியுடன் தொடர்புடைய ஏதாவது ஒரு வாசனை விண்வெளியில் இருப்பது நல்லது” என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வார்ம்வுட் (Wormwood) செடிவிண்வெளி நிலையத்தின் தனித்துவமான வாசனை

ஆனால் விண்வெளி நிலையத்தில் ஒரு தனித்துவமான வாசனை இருந்தது என்று பல வீரர்கள் விண்வெளி நடைப்பயணத்திற்குப் பிறகு தெரிவித்தனர்.

“சிறுவயதில் நான் முகர்ந்த வாசனை அது. கார்கள் பழுதுபார்க்கும் இடத்தை கடந்து சென்றதைப் போன்ற மணம் வந்தது. வெல்டிங் வேலைகள் நடந்தால் வரும் வாசனை. அந்த உலோக வாசனை” என்கிறார் ஷார்மன்.

மற்ற விண்வெளி வீரர்கள் கருகிய இறைச்சி, வெடி மருந்து அல்லது எரிந்துபோன மின் வயரிங் போன்ற வாசனையை விவரித்துள்ளனர்.

ஆனால் இந்த வாசனைக்கு என்ன காரணம் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், இது ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்படுகிறது என்று ஷார்மன் கூறுகிறார்.

“விண்வெளி நிலையத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலம், சூழல், கிட்டத்தட்ட ஒரு வெற்றிடமாக இருக்கிறது, ஆனால் அந்த உயரத்தில் அது முழுமையான வெற்றிடமாகவும் இல்லை. வளிமண்டலத்தில் எஞ்சியிருப்பது அணு ஆக்ஸிஜன் ஆகும்.” என்று அவர் கூறுகிறார்.

அணு ஆக்ஸிஜன் அல்லது ஆக்ஸிஜனின் ஒற்றை அணுக்கள், ஒரு விண்வெளி வீரரின் விண்வெளி உடை அல்லது கருவிகளில் ஒட்டிக்கொள்ளலாம் . விண்வெளி நிலையத்திற்குள் மீண்டும் நுழையும்போது, ​​ஒற்றை ஆக்ஸிஜன் அணுக்கள் கேபினில் இருக்கும் O2 உடன் இணைந்து ஓசோனை (O3) உருவாக்குகின்றன.

“அது வினைபுரிந்தவுடன், உங்களுக்கு அந்த ஓசோன் வாசனை கிடைக்கும்” என்று ஷார்மன் கூறுகிறார். பூமியில் உள்ள மனிதர்களான நாமும் ஓசோனின் வாசத்தை நுகர முடியும். இடியுடன் கூடிய மழைக்குப் பிறகு நிலையான மின்சாரத்தின் உலோக வாசனையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அது தான் ஓசோன்.

மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், ஷார்மன் அப்போது ஒரு இறக்கும் நட்சத்திரத்தின் அணுக்களை சுவாசித்துக் கொண்டிருந்தார் எனக் கூறலாம். ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, ​​அது ஒரு பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடுகிறது. இந்த செயல்பாட்டின் போது நட்சத்திரம் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்களை (PAHs) உருவாக்குகிறது. “கம்பி வடிவ மூலக்கூறுகள்” என்று ஷார்மன் கூறுகிறார். அவை பிரபஞ்சத்தைச் சுற்றி மிதந்து புதிய வால்மீன்கள், கோள்கள் மற்றும் நட்சத்திரங்களை உருவாக்க பங்களிக்கின்றன.

பூமியில், PAH-கள் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிபொருட்களில் உள்ளன, மேலும் அவை பெரும்பாலும் கரிமப் பொருட்கள் முழுமையாக எரியாத போது உருவாகின்றன.

“உங்கள் உணவு கருகினால், அப்போது இந்த மூலக்கூறு உருவாகும். நட்சத்திரங்கள் இறக்கும் போது, ​​அவை எரிவது அதே வகையான மூலக்கூறுகளை உருவாக்குகிறது. பின்னர் அவை என்றென்றும் விண்வெளியில் மிதக்கின்றன” என்று பார்செனிலா கூறுகிறார். இந்த சேர்மங்களில் பல நாப்தலின் உருண்டைகளின் வாசனையைக் கொண்டுள்ளன, மற்றவை எரியும் பிளாஸ்டிக் அல்லது பிற்றுமினை (Bitumen) நினைவூட்டுகின்றன.

பட மூலாதாரம், ESA/Webb, NASA, CSA, M. Barlow, N. Cox, R. Wesson

படக்குறிப்பு, ஒரு இறக்கும் நட்சத்திரமான ரிங் நெபுலா, ஆற்றல் தீர்ந்து போகும்போது அதன் வெளிப்புற அடுக்குகளை தூக்கி எறிகிறது.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு

விண்வெளியிலிருந்து தரவுகள் எல்லா வடிவங்களிலும் வருகின்றன. விண்வெளியிலிருந்து முதல் அறிவியல் தரவு 1958 ஆம் ஆண்டு நாசாவின் எக்ஸ்ப்ளோரர் 1 மூலம் ஒலியாக வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நமது சொந்த சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகமான WASP-39 b என்ற ராட்சத வாயு கிரகத்தின் வளிமண்டலத்தில் முதல் முறையாக கார்பன் டை ஆக்சைடு (CO2) இருப்பதைக் கண்டுபிடித்தது.

ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உண்மையில் கார்பன் டை ஆக்சைடை முகர்ந்து கண்டுபிடிக்கவில்லை. அந்தக் கிரகம் அதனுடைய சூரியனுக்கு முன்னால் செல்லும் போது கிரகத்தின் வளிமண்டலம், அந்த நட்சத்திர ஒளியை எவ்வாறு மாற்றியது என்பதைக் கண்காணிப்பதன் மூலம் அதன் இருப்பைக் கண்டறிந்தது.

ஒளியில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் வேற்றுகிரக உலகங்களின் பல்வேறு ரசாயனங்களை அடையாளம் காண முடியும்.

சனி கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான டைட்டனில் உள்ள வளிமண்டலத்தின் வேதியியல் பகுப்பாய்வில், அது பாதாம், பெட்ரோல் மணம் மற்றும் அழுகும் மீன்களின் நாற்றத்தைக் கொண்டிருப்பது தெரிந்தது. இதற்கிடையில், அழுகிய முட்டைகளின் நாற்றம் பூமியிலிருந்து சுமார் 64 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வெப்பமான வாயு ராட்சத கிரகமான எச்டி 189733 பி-ஐப் பார்வையிடுவதிலிருந்து மனிதர்களைத் தடுக்கலாம்.

பால்வெளியின் சுழல் கரங்கள் வழியாகச் சுழலும் விண்மீன்களுக்கு இடையேயான தூசிகள் நிறைந்த மேகங்கள், “ஐஸ்கிரீம் மற்றும் அம்மோனியாவின்” வாசனையை கலந்து அளிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையில், “நமது பால்வெளியின் மையத்திற்கு அருகில் உள்ள ஒரு பெரிய மூலக்கூறு மேகமான சாஜிட்டரிஸ் பி 2இல், மனித வாழ்க்கைக்குத் தேவையான சில ப்ரீபயாடிக் மூலக்கூறுகளின் வாசம் வீசக்கூடும்” என்று பார்செனிலா கூறுகிறார்.

“அங்கு எத்தனால், மெத்தனால், அசிட்டோன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் எத்திலீன் கிளைகோல் போன்ற பொருட்கள் உள்ளன” என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Helen Sharman

படக்குறிப்பு, விண்வெளியின் குறைந்த ஈர்ப்பு விசைச் சூழலில் மிகக் குறைந்த மணமே இருக்கும் என்கிறார் பிரிட்டன் விண்வெளி வீராங்கனை ஹெலன் ஷார்மன்.பால்வெளியில் ராஸ்பெர்ரிகளின் வாசனை

பால்வெளியின் மையத்தின் ராஸ்பெர்ரிகளின் வாசனையை எத்தில் ஃபார்மேட் கொடுப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், பார்செனிலா இந்தத் தகவல் முற்றிலும் துல்லியமானது இல்லை எனக் கூறுகிறார்.

“இது பலவற்றில் ஒரு மூலக்கூறு மட்டுமே, நீங்கள் அதை தனியாக முகர்ந்தால், அது ராஸ்பெர்ரிகளைப் போல மணக்காது.” எத்தில் ஃபார்மேட், பல்வேறு பழங்களுக்குள் காணப்படுகிறது என்று அவர் விளக்குகிறார்.

“இது ராஸ்பெர்ரிகளின் சுவைக்கு ஓரளவு காரணமாகும், வாசனைக்கு அல்ல. ஆனால் மற்ற பழங்களின் சுவைக்கும் ஓரளவு காரணமாகவும் இருக்கிறது. இது ஒருவேளை நெயில் பாலிஷ் ரிமூவருடன் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது ஒரு வகையான ஆல்கஹால், கிட்டத்தட்ட ரம் வகை வாசனையுடன் தொடர்புடையது.” என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் அண்ட ரசாயனங்களை நுகர்வது பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய முக்கிய விவரங்களை மட்டுமல்ல, உயிர்கள் எங்கு வாழக்கூடும் என்பது பற்றிய தடயங்களையும் நமக்குத் தரும் என்று பார்செனிலா கூறுகிறார்.

“K2-18b என்ற கோளில் ஒரு கடல் இருந்து, உங்களால் ஒரு படகில் சவாரி செய்ய முடிந்து, அப்போது உங்கள் விண்வெளி உடையை கழற்ற முடிந்தால், அழுகிய முட்டைக்கோஸ் போன்ற ஒரு வாசனை வீசக்கூடும்” என்கிறார் கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணர் சுபஜித் சர்க்கார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒளியில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் வேற்றுகிரக உலகங்களின் பல்வேறு ரசாயனங்களை அடையாளம் காண முடியும்.120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புறக்கோளில் உயிர்கள்

2023ஆம் ஆண்டில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன், பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு புறக்கோளான K2-18bஇல் இருந்து ஒரு வாசனையையும், அது உயிர்கள் வாழ்வதை குறிக்கக்கூடும் என்பதையும் ஒரு குழு கண்டறிந்தது. சர்க்கார், அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.

தொலைநோக்கி ஒரு சிறிய தடயத்தைக் கண்டறிந்தது. அது டைமெத்தில் சல்பைடு (DMS) மணம். சில சமயங்களில் கடலின் பிரத்யேக வாசனைக்கு காரணமான முக்கிய கூறுகளில் ஒன்றாக டைமெத்தில் சல்பைடு கருதப்படுகிறது என்று சர்க்கார் கூறுகிறார்.

“K2-18b கிரகம் மிகவும் சுவாரஸ்யமானது,” என்கிறார் சர்க்கார். “இது துணை-நெப்டியூன்கள் எனப்படும் ஒரு பெரிய வெளிப்புறக் கோள்கள் குழுவின் ஒரு பகுதியாகும்.” பூமியை விடப் பெரியது ஆனால் நெப்டியூனை விட சிறியது, துணை-நெப்டியூன்கள் விண்மீன் மண்டலத்தில் மிகவும் பொதுவான வகை கிரகமாகும். அவை பரவலாக உள்ளபோதிலும், அவற்றைப் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் மர்மமாகவே உள்ளன.

“துணை- நெப்டியூன்கள் பற்றி சில பெரிய கேள்விகள் உள்ளன” என்கிறார் சர்க்கார். “அவை ஏன் நமது சூரிய மண்டலத்தில் இல்லை? அவை எதனால் ஆனவை?” அவற்றை நாம் நன்கு புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கான ஒரு வழி, சர்க்கார் கூற்றுப்படி, அவற்றின் வளிமண்டலங்களைப் பார்ப்பது. “அதற்கு K2-18b ஒரு நல்ல இலக்காக அறியப்பட்டது.”

கோட்பாட்டளவில், K2-18b என்பது ஒரு “ஹைசியன்” (Hycean) உலகம், கடலால் மூடப்பட்ட ஒரு புறக்கோள். 2025ஆம் ஆண்டில், சர்க்கார் மற்றும் அவரது சகாக்கள் K2-18b-இன் வளிமண்டலத்தை மறுஆய்வு செய்தனர். வளிமண்டல ரசாயனங்களின் வலுவான ஒரு வாசனையைக் கண்டறிந்தனர். நமக்குத் தெரிந்தவரை, இது உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும், குறிப்பாக பைட்டோபிளாங்க்டன் மற்றும் பிற கடல் உயிரினங்கள்.

பட மூலாதாரம், Nasa, CSA, ESA, J. Olmsted STScI, N. Madhusudhan Cambridge University

படக்குறிப்பு, K2-18b கோளின் சித்தரிப்புப் படம்K2-18b கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா?

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, K2-18b இன் வளிமண்டலத்தில் டைமெத்தில் சல்பைடு அல்லது டைமெத்தில் டைசல்பைடு (DMDS) இருக்கலாம் அல்லது இரண்டும் கூட இருக்கலாம்.

“தற்சமயம், இந்த (வேதியியல்) பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய உயிரியல் அல்லாத செயல்முறைகள் பற்றி நமக்குத் தெரியாது. பூமியில் டைமெத்தில் சல்பைடு, டைமெத்தில் டைசல்பைடு ஆகியவை உயிரியல் செயல்முறையால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கண்ணோட்டத்தில் அவை மிகவும் குறிப்பிடத்தக்க உயிரியல் பொருட்கள்,” என்கிறார் சர்க்கார்.

பூமியின் வளிமண்டலத்தில் காணப்படும் செறிவுகளை விட 10,000 மடங்கு அதிகமாக இருப்பதால், K2-18b கிரகத்தின் கடல் “உயிர்களால் நிறைந்ததாக” இருக்கலாம் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன என்று சர்க்கார் கூறுகிறார்.

இருப்பினும், ரசாயனங்கள் உயிரற்ற மூலங்களிலிருந்து வரவும் வாய்ப்புள்ளது என்றும், இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை என்றும் அவர் எச்சரிக்கிறார்.

ஆனால், K2-18b கிரகத்தில் உண்மையில் உயிரிகள் வாழக்கூடிய ஒரு கடலைக் கொண்டிருந்தால், அது பூமியுடன் பொருந்துகிறது. ஏனெனில் கடல்வாழ் உயிரினங்கள் இந்த வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன, இது பூமியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது.” என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பால்வெளியின் மையத்தின் ராஸ்பெர்ரிகளின் வாசனையை எத்தில் ஃபார்மேட் கொடுப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது.எனவே விண்வெளிக்கு சென்றால் மட்டுமே அதன் உண்மையான வாசனையை அனுபவிக்க முடியும் என்பதில்லை. விண்வெளியின் பல வாசனைகள் நமக்கு நன்கு பரிட்சயமானவை மற்றும் பூமியிலேயே காணப்படுகின்றன. பார்செனிலா உள்பட ஒரு சிலர் விண்வெளியின் வாசனையை பூமியில் உருவாக்க முயற்சித்துள்ளனர்.

“ஆனால், மிகச்சிறந்த வாசனை என்பது விண்வெளியில் காணப்படவில்லை, ஆனால் இங்கே பூமியில் உள்ளது. நமது சொந்த கிரகத்தின் வாசனைக்கு நிகர் எதுவுமில்லை” என்று ஷார்மன் கூறுகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.விண்வெளியில் இருந்து, 1991இல் தான் பூமிக்கு திரும்பியதை அவர் விவரிக்கிறார். இன்னும் அந்த நினைவு அவரது மனதில் தெளிவாக உள்ளது.

“அது மே மாத இறுதி. நாங்கள் பூமிக்குத் திரும்பி வந்த நாளில் மத்திய ஆசியாவில், நிலம் அவ்வளவு வறண்டு போகவில்லை. விண்கலம் தரையிறங்கியதும், சற்று மேலே எழும்பி, மீண்டும் கீழே தரையில் விழுந்து, அங்கிருந்த தாவரங்களை நசுக்கியது.”

“கஜகஸ்தானில், அந்த இடத்தில் இருந்த வார்ம்வுட் செடிகளின் மீது நாங்கள் தரையிறங்கினோம்,” என்று ஷார்மன் நினைவு கூர்ந்தார்.

“நாங்கள் கதவைத் திறந்தபோது வந்த காற்று மிகவும் அருமையான உணர்வை அளித்தது. அதன் நறுமணம் மிகவும் அற்புதமாகவும், மிகவும் ஆறுதலாகவும் இருந்தது” என்கிறார் ஷார்மன்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு