லாரியில் துரத்தல், காரில் கடத்தல் – கோவையிலிருந்து சென்ற கேரள வியாபாரியிடம் தங்கம் கொள்ளை

பட மூலாதாரம், TNPOLICE

படக்குறிப்பு, ஜெய்சன் ஜேக்கப் பயணித்த கார்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து தங்கக்கட்டிகளை வாங்கிச் சென்ற கேரள நகை வியாபாரியிடம், தமிழக–கேரள எல்லையில் வைத்து காரை மடக்கி ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் ஒன்றே கால் கிலோ தங்கக்கட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நகை வியாபாரி சென்ற காரை லாரியை குறுக்காக நிறுத்தி மடக்கிய கும்பல், கொள்ளையடித்த பின், லாரியை வேறிடத்தில் நிறுத்திவிட்டுத் தப்பியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மலையாளத்தில் பேசியதால், தமிழக போலீசார் 5 தனிப்படைகளை கேரள போலீசார் உதவியுடன் கேரளாவில் தேடுதல் வேட்டையைத் தொடர்கின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள பாலக்கல் என்ற இடத்தில் ஜேபி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை நடத்தி வருபவர் ஜெய்சன் ஜேக்கப் (வயது 57). இவர் சென்னையில் தங்கக்கட்டிகளை வாங்கி வந்து, நகைத்தொழிலாளர்களை வைத்து, அணிகலன்கள் செய்து அதை விற்பனை செய்யும் தங்கப்பட்டறையும் நடத்தி வருகிறார். இவரிடமிருந்துதான் கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று ஒன்றே கால் கிலோ தங்கக்கட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

காரின் குறுக்கே லாரியை நிறுத்திய கொள்ளையர்கள்

பட மூலாதாரம், TNPOLICE

படக்குறிப்பு, கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட லாரிஇந்த சம்பவம் பற்றி கோவை மாவட்ட காவல்துறைக்கு உள்பட்ட கந்தே கவுண்டன்சாவடி போலீசார் பகிர்ந்த தகவலின்படி, சென்னையில் செளகார் பேட்டையில் தங்கக்கட்டிகளை வாங்கி வந்து, திருச்சூரில் உள்ள தனது தங்கப்பட்டறையில் , அணிகலன்கள் செய்து விற்கும் தொழிலை ஜெய்சன் ஜேக்கப் செய்து வருகிறார். கேரள தொழிலாளர்கள் செய்யும் இந்த நகைகளுக்கு சென்னையிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதற்காக அவர் வாரமிரு முறை சென்னைக்கு ரயிலில் சென்று வருவதாகவும் போலீசார் தங்களுடைய குறிப்புகளில் தெரிவித்துள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

திருச்சூரிலிருந்து காரில் வந்து கோவையில் அதை நிறுத்திவிட்டு, சென்னைக்கு ரயிலில் சென்று விட்டு, திரும்பவும் கோவைக்கு வந்து, அங்கிருந்து காரை எடுத்துச் செல்வதை ஜெய்சன் ஜேக்கப் வழக்கமாக வைத்துள்ளார்.

அதேபோன்று கடந்த ஜூன் 12 வியாழக்கிழமை இரவு ரயிலில் சென்னை சென்று, சென்னை செளகார் பேட்டையிலுள்ள தங்க வியாபாரியிடம் நகைகளை டெலிவரி கொடுத்துவிட்டு, ஒன்றே கால் கிலோ தங்கக்கட்டியை வாங்கிக் கொண்டு, ஜூன் 13 அன்று சென்னையிலிருந்து சேரன் எக்ஸ்பிரஸ் மூலமாக கோவை திரும்பியுள்ளார்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்றும் சென்னையிலிருந்து திரும்பி, காரை எடுத்துக் கொண்டு, திருச்சூருக்குத் திரும்பியுள்ளனர். காரை ஜேக்கப்பிடம் பணியாற்றும் விஷ்ணு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அன்று காலை ரயிலில் இருந்து இறங்கி, காரில் இருவரும் கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். மதுக்கரை புறவழிச்சாலையிலுள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துவிட்டு மீண்டும் காரில் ஏறி பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எட்டிமடைக்கு முன்பாக காலை 6:45 மணியளவில் KL 40 D 0910 என்ற பதிவெண் கொண்ட ஒரு லாரி வேகமாக இவர்கள் காரைத் துரத்துவது போல வேகமாக வந்து, காரின் முன்பாக லாரியை குறுக்காக நிறுத்தியுள்ளனர். ஜேக்கப் என்னவென்று பார்ப்பதற்குள் லாரியிலிருந்து 5 பேர் இரும்புக் கம்பி, கத்தி, அரிவாளுடன் காரைச் சுற்றியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கந்தே கவுண்டன்சாவடி போலீசார், ”காரின் முன்பக்கக் கதவை உடைத்து, வண்டியை ஓட்டி வந்த விஷ்ணுவை பின்னால் உட்கார வைத்துள்ளனர். ஜேக்கப் மற்றும் விஷ்ணு முகத்தில் மிளகாய்த் துாள் ஸ்பிரே அடித்து, இரும்பு ராடால் அடித்து தங்கக்கட்டியைக் கேட்டுள்ளனர். வலி தாங்காமலும், உயிருக்குப் பயந்தும் ஜேக்கப், தனது இருக்கைக்குக் கீழே வைத்திருந்த ஒன்றே கால் கிலோ தங்கக்கட்டியை எடுத்துக் கொடுத்துள்ளார். அத்துடன் ஜேக்கப் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளனர். அவரிடமிருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்” என்றனர்.

மேலும், ”அதன்பிறகு அதே காரில் வேகமாகச் சென்று, விஷ்ணுவை எல் அண்ட் டி பை பாஸ் சாலையிலும், ஜேக்கப்பை வேலந்தாவளம் சாலையிலும் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். அதேபோல, அவர்கள் காரை வழிமறித்து நிறுத்திய லாரியும் வேறிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டையும் நாங்கள் கைப்பற்றி விட்டோம். லாரி 2 உரிமையாளர்களிடம் இருந்து வேறு நபர்களுக்குக் கைமாறியுள்ளது. அதை யார் பயன்படுத்தினார்கள் என்பதும் தெரியவில்லை” என்று போலீசார் தெரிவித்தனர்.

நகை வியாபாரி காரை துரத்திச்சென்ற மற்றொரு கார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொள்ளையடிக்கப்பட்ட தங்கக்கட்டி 24 காரட் தங்கம் என்றும், அதன் மதிப்பு ஒரு கோடியே 32 லட்ச ரூபாய் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது (சித்தரிப்புப் படம்)இந்த சம்பவம் நடந்தததாகத் தெரியவந்ததும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உயரதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 தனிப்படைகள் அமைத்து, வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கோவையிலிருந்து சம்பவம் நடந்த இடம் வரையிலும் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

கொள்ளைச் சம்பவம் நடந்து 3 நாட்களாகிவிட்ட நிலையில், வெவ்வேறு பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சில தகவல்கள் கிடைத்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர், ”ஜேக்கப்பின் காரை கண்காணித்துக் கொண்டே பின்னால் ஒரு கார் வேகமாகச் சென்றுள்ளது. அந்தக் காரின் உரிமையாளரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் வாடகைக்குக் கொடுத்தது தெரியவந்தது. லாரியை வாங்கியவர்கள், காரை வாடகைக்கு எடுத்தவர்கள் என எல்லோருடைய எண்களும் ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகவுள்ளன. ஆனால் அதில் கிடைத்துள்ள சில தகவல்களை வைத்து புலன் விசாரணையைத் தொடர்கிறோம்.” என்றார்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்கக்கட்டி 24 காரட் தங்கம் என்றும், அதன் மதிப்பு ஒரு கோடியே 32 லட்ச ரூபாய் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கோவை வழியாக கேரளாவுக்கு பிரத்யேக உடைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற ரூ.72 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை, கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

கேரளா காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படியே அந்த பரிசோதனையில் இவற்றை போலீசார் பிடித்தனர். அதேபோன்று இந்த கொள்ளைச் சம்பவத்திலும் ஹவாலா பணம் அல்லது தங்கம் கொண்டு செல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்கத்தைத் தவிர்த்து, கணக்கில் காட்டாத தங்கம் கொண்டு செல்லப்பட்டதா என்று இந்த வழக்கை விசாரிக்கும் மதுக்கரை காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, ”ஜேக்கப் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ள தங்கத்துக்கு அவர் முறைப்படி பில் வைத்துள்ளார். சட்டப்பூர்வமாகவே அவர் இந்தத் தொழிலைச் செய்து வந்துள்ளார். சென்னையில் வசிக்கும் கேரள மக்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவில் நகை செய்து கொடுக்கும் தொழிலை நீண்ட காலமாகச் செய்து வந்துள்ளார். அதனால் அடிக்கடி சென்னை சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதைத் தெரிந்து கொண்டே இந்த கொள்ளையை நடத்தியுள்ளனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”அவரை நீண்ட காலமாக கண்காணித்துள்ள சிலர்தான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளையர்கள் அனைவரும் மலையாளத்தில் பேசியதால், இது உறுதியாகியுள்ளது. அதனால் கேரள போலீசாரின் உதவியுடன் திருச்சூரிலும் விசாரித்து வருகிறோம். யாரோ அவரைத் தொடர்ந்து கண்காணித்து, சரியாகத் தகவல் தெரிவித்து, இந்தக் கொள்ளைக்கு உதவியுள்ளனர். தொழில் போட்டியிலும் சிலர் இதைச் செய்திருக்கலாம். அதனால் பல கோணங்களிலும் எங்களுடைய விசாரணை தொடர்ந்து வருகிறது.” என்றார்.

கோவை–பாலக்காடு வழித்தடத்தில், பல்வேறு இடங்களில் உள்ள கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் பல வணிகக் கட்டடங்களில் இருந்த ஏராளமான வீடியோக்களை எடுத்து போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் துாரமாகவும், மங்கலான காட்சிகளுடனும் இருப்பதால் தனிநபர்கள் யாரையும் அடையாளம் காணமுடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு