பிரதமர் மோதியின் கனடா பயணத்தை சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பது ஏன்? – இருநாட்டு உறவில் மறுமலர்ச்சி ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸில் இருப்பார், பின்னர் கனடாவுக்குச் செல்வார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கனடா பிரதமர் மார்க் கார்னியிடமிருந்து ஜி-7 உச்சிமாநாட்டிற்கான அழைப்பு வந்த ஒரு வாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி கனடா புறப்பட்டுச் செல்வதற்கு முன்னரே, சில சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. கனடா வரக் கோரி பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, சனிக்கிழமையன்று ஒட்டாவாவில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

ஆனால், இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

கனடா செல்வதற்கு முன்னதாக, பிரதமர் மோதி ஜூன் 15 மற்றும் 16 இரு நாட்களும் சைப்ரஸில் இருப்பார். அதன் பிறகு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கைனேனாஸ்கிஸுக்கு மோதி செல்வார். அங்கு அவர் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்று பின்னர் ஜூன் 18 அன்று குரோஷியாவுக்குப் புறப்படுவார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான இந்தத் தகவல்களை வெளியுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 நாடுகளில் இந்தியா உறுப்பினராக இல்லை. ஆனால் 2019 முதல், ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமாகியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமர் மோதி தற்போதுதான் கனடாவுக்கு செல்கிறார். இது மார்க் கார்னிக்கும் மோதிக்கும் ஒரு ராஜ்ஜீய ரீதியிலான சோதனையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பிரதமரின் 2015ஆம் ஆண்டு பயணத்திற்கும் தற்போதைய பயணத்திற்கும் இடையிலான இந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில், காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அன்றைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்தன.

இப்போது ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இல்லையென்றாலும், ட்ரூடோவின் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மார்க் கார்னி கனடாவின் பிரதமராக பதவியேற்றுயுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீக்கிய கூட்டமைப்பு கனடாவின் செய்தித் தொடர்பாளர் மோனிந்தர் சிங்கனடாவில் சீக்கிய அமைப்புகளின் போராட்டம்

ஜி-7 மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரதமர் மோதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை அடுத்து கனடாவின் சில சீக்கிய அமைப்புகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.

ஒட்டாவா சிட்டிசன் என்ற உள்ளூர் ஊடகத்தின்படி, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை நாடாளுமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பலர் காலிஸ்தான் ஆதரவுக் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

கடந்த வாரம், இந்த சீக்கிய அமைப்புகள், பிரதமர் மோதிக்கு வழங்கப்பட்ட ஜி-7 அழைப்பை திரும்பப் பெறுமாறு பிரதமர் மார்க் கார்னியிடம் முறையிட்டன.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றும், கனடா விவகாரங்களில் தலையிடுவதையும், கனடாவில் உள்ள சீக்கியர்களை குறிவைப்பதையும் நிறுத்துவதாக இந்தியா உறுதியளிக்காவிட்டால், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெற வேண்டும் என்று ‘உலக சீக்கிய அமைப்பு கனடா’ மற்றும் ‘சீக்கிய கூட்டமைப்பு கனடா’ போன்ற குழுக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசுக்கு பங்கிருப்பதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியபோது, இந்தியாவுடனான கனடாவின் உறவுகளில் சுணக்கம் ஏற்பட்டது.

நிஜ்ஜரின் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இல்லை என்று இந்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.

சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜரை 2020 ஆம் ஆண்டு இந்தியா ‘பயங்கரவாதி’ என்று அறிவித்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிரதமர் மோதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பில் சில நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்று ‘சீக்கிய கூட்டமைப்பு கனடா’ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மொனிந்தர் சிங் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இதுவரை வெளிச்சத்திற்கு வந்தவற்றிற்கு அவரும் அவரது அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டுமா என்ற நிபந்தனையின் பேரிலேயே அவருடனான எந்தவொரு சந்திப்பும் இருக்க வேண்டும், ஆனால் அதுபோன்ற எந்தவொரு நிலைப்பாடும் இன்னும் எடுக்கப்படவில்லை” என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவின் உறுப்பினர்கள், எதிர்வரும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்ட அழைப்பை ரத்து செய்யுமாறு பிரதமர் கார்னிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய பிரதமருக்கு விடுக்கப்பட்ட அழைப்பால், தாங்கள் ஏமாற்றமடைந்ததாக 2023 ஆம் ஆண்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட குருநானக் சீக்கிய குருத்வாராவை சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்தனர்.

“இந்த ராஜ்ஜீய நடவடிக்கையை சீக்கிய சமூகம் கனடாவின் நீதி, சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மைக்கான உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கருதுகிறது. இது, வன்முறை மற்றும் வெளிநாட்டு தலையீட்டை சகித்துக்கொள்ளும் அரசின் போக்கைக் குறிக்கிறது” என்று அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கனடா அரசின் செய்தி சேனலான CBC இன் படி, ஆல்பர்ட்டாவின் கால்கரியில் சனிக்கிழமையன்று கூடிய சமூக சேவையாளர்கள், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ‘மக்கள் மன்றம்’ நடத்தினர்.

கனடிய சீக்கிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மொனிந்தர் சிங் கூறுகையில், “பிரதமர் மோதி கனடாவை விட்டு வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடருவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது” என்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ட்ரூடோவின் பதவிக் காலத்தில் கனடாவுடனான இந்தியாவின் உறவுகள் மிக மோசமான கட்டத்தை அடைந்தன’மோதியின் வருகை நம்பிக்கையை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு’

கனடா பிரதமர் மார்க் கார்னி பிரதமர் நரேந்திர மோதிக்கு விடுத்த அழைப்பு, முக்கியமான ராஜதந்திர முயற்சி என்றும், இந்தியா-கனடா உறவுகளில் ஒரு புதிய சாத்தியக்கூறாகவும் பார்க்கப்படுகிறது.

மாண்ட்ரீயலை தளமாகக் கொண்ட இந்தியா கனடா அமைப்பின் (ICO) துணைத் தலைவர் ஹர்ஜித் சிங் சந்து கூறுகையில், “உங்களை (மோதியை) கனடாவிற்கு மனதார வரவேற்கிறோம், உங்கள் வருகை இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி வளப்படுத்தும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

கனடாவை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர் ஹர்ப்ரீத் சிங்கும் இதே போன்ற உணர்வுகளையே எதிரொலிக்கிறார்.

“நமது பிரதமர் மார்க் கார்னி, இந்தியப் பிரதமர் மோதியை அழைத்துள்ளார், இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான சில பிரச்னைகள் அதிகரித்துள்ளன. எனவே, இந்த சந்திப்பின் போது அவை தீர்க்கப்பட்டு ஒரு புதிய பாதை தேர்வு செய்யப்படும் என்று நம்புகிறேன். இது, இரு நாடுகளும் வளர்ச்சியடைந்து செழிக்க உதவும். வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இரு நாடுகளுக்கும் இடையில் சிறப்பான உறவுகளை உருவாக்க வேண்டும். அதுதான் இந்தியாவையும் கனடாவையும் வளப்படுத்த உதவும்” என்று ஹர்ப்ரீத் சிங் கூறுகிறார்.

கனடாவின் எதிர்க்கட்சியான நியூ டெமாக்ரடிக் கட்சியின் தலைவரும் வான்கூவர் ஈஸ்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜென்னி குவான், கார்னி அரசாங்கத்தின் முடிவை விமர்சித்துள்ளார்.

” கனேடிய அதிகாரிகளுடன் ஒத்துழைக்க இந்தியா மறுத்து, கொலைகளுக்கான பொறுப்பை மறுக்கும் நிலையில், மோதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது நியாயமில்லை. இந்த நடவடிக்கை, நமது நாட்டில் தலையீடு மற்றும் வன்முறைக்கு வெளிநாட்டு சக்திகளை பொறுப்பேற்க வைக்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று ஜென்னி குவான் எக்ஸ் வலைதளத்தில் எழுதினார்.

நியூ ஜெர்சியில், சர்வதேச இந்திய புலம்பெயர் கூட்டணியின் தலைவர் எச்.எஸ். பனேசர், இந்த வருகையை “இந்தோ-கனடிய உறவுகளை மீட்டெடுப்பதற்கும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு முக்கியமான தருணம்” என்று பாராட்டினார்.

“2025 ஜூன் மாதத்தில் பிரதமர் மோதி, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பது இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது, மேலும் இருதரப்பு உறவுகளில் சமீபத்திய பதற்றங்களைக் குறைத்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்” என்று பனேசர் ANI இடம் கூறினார்.

இந்தியா-கனடா உறவுகள் மேம்படுமா?

சமீபத்திய ஜி-7 உச்சிமாநாடு இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது, ஆனால் நிஜ்ஜரின் கொலை தொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக, உலகில் சீக்கியர்கள் அதிகமாக வசிப்பது கனடாவில் தான். கனடாவில் சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர், இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.1 சதவீதம் ஆகும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் நான்காவது பெரிய மதமாக சீக்கிய மதம் உள்ளது.

கனடாவின் சீக்கிய சமூகத்தில் காலிஸ்தான் ஆதரவு செயல்பாட்டாளர்களும் உள்ளனர், அவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தும் காலிஸ்தான் என்ற தனிநாட்டை கோருகின்றனர்.

தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. அதே நேரத்தில், சீக்கிய செயல்பாட்டாளர்களை குறிவைத்து கனடா மண்ணில் இந்தியா ஒரு பெரிய பிரசாரத்தை நடத்தி வருவதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

மோதியை ஜி-7 உச்சிமாநாட்டிற்கு அழைத்ததன் மூலம் கார்னி சரியான முடிவை எடுத்துள்ளார் என்று கனடாவின் முன்னாள் தூதர் டேவிட் மைகினன் நம்புகிறார்.

“கனடாவில், குறிப்பாக லிபரல் கட்சிக்குள் மோதியை கனடாவிற்கு அழைக்கும் முடிவின் மீதான அரசியல் எளிதாக இல்லை, ஆனால் கார்னி சரியான முடிவை எடுத்தார்,” என்று டேவிட் மைகினன் ஜெர்மன் ஊடகமான DW இடம் கூறினார். “எதிர்க்கட்சித் தலைவர் பியரே பொலீவியர் உடனடியாக அதை வரவேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.”

இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது என்று கூறுவது அவசரப்படுவதாக இருக்கும் என்று மைகினன் கூறினார்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பதற்றமான உறவுகளை, குறிப்பாக காலிஸ்தான் பிரச்னையால் நீண்டகாலமாக நிலவும் பதற்றத்தை, மீட்டெடுக்க G-7 மிகவும் முக்கியமான வாய்ப்பை வழங்கியிருப்பதாக கனடாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் உஜ்ஜல் தோசன்ஜ் நம்புகிறார்.

“எந்தவொரு நாட்டுடன் பிரச்னை இருந்தாலும், அந்த நாட்டின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட முடியாது என்பதை தலைவர்கள் அறிவார்கள். அவர்கள் இருதரப்பு உறவுகளை மீட்டெடுப்பதற்கான வழிகளைக் கண்டறிகின்றனர். கார்னியும் அதே முறையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது” என்று உஜ்ஜல் தோசன்ஜ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ 2018 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தபோது, ​​அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பார்வையிட்டார்.இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே காலிஸ்தான் பிரச்னையை கையாள முடியும் என்று வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

“காலிஸ்தான் பிரச்னை நிச்சயமாக வேதனைக் கொடுப்பதாகவே உள்ளது, தற்போது இந்தியப் பிரதமரின் வருகையை சீக்கிய அமைப்புகள் போராட்டங்களால் சீர்குலைக்க முயன்றால் அது மீண்டும் பெரிதாக வெடிக்கக்கூடும்” என்று Foreign Policy Magazine என்ற பத்ரிகைக்கான கட்டுரை ஒன்றில் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். “ஆனால் பிற துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டால் பிரச்னையைக் கையாள்வது எளிதாக இருக்கலாம்.”

அமெரிக்க வரிக் கொள்கைகள் இந்தியா மற்றும் கனடா இரண்டையும் பாதிக்கக்கூடும் என்பதால், இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் வலுவான காரணங்களைக் கொண்டுள்ளன என்று குகல்மேன் நம்புகிறார்.

சர்வதேச உறவுகளில் நிபுணரும், மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்துடன் தொடர்புடையவருமான ஸ்வஸ்தி ராவ், ஜி-7 மற்றும் கனடாவுடனான உறவுகள் குறித்து பிபிசியிடம் பேசுகையில், “ஜஸ்டின் ட்ரூடோ உள்நாட்டு அரசியலில் சிக்கிக் கொண்டார், இப்போது மார்க் கார்னி வந்துள்ளார். இந்தியா இல்லாமல் உலகில் எந்த பெரிய பொருளாதாரத் திட்டத்தையும் வடிவமைக்க முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறியிருந்தார்.

“மார்க் கார்னி அனைத்தையும் ஒரே நேரத்தில் மாற்ற மாட்டார். உள்நாட்டு அரசியலையும் மனதில் கொண்டே அவர் நடவடிக்கை எடுப்பார், ஆனால் இது இந்தியாவிற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் அதே வேளையில், பேச்சுவார்த்தைகளையும் படிப்படியாக மேற்கொள்வோம்” என்று ஸ்வஸ்தி ராவ் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு