Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அச்சம், அதிர்ச்சி, குழப்பம்: இஸ்ரேலின் தாக்குதல் குறித்து இரான் மக்கள் என்ன கூறுகின்றனர்?
பட மூலாதாரம், ABEDIN TAHERKENAREH/EPA-EFE/Shutterstock
படக்குறிப்பு, 2024 ஜூன் 15 அன்று இரானின் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்கில் இருந்து தீ மற்றும் புகை எழும்பியது எழுதியவர், பிபிசி பெர்ஷிய சேவைபதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்க இரான் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
இஸ்ரேலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றால், இஸ்ரேலிய தாக்குதல்களில் இரானில் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரானின் தலைநகரான டெஹ்ரானில் குடியிருப்பு கட்டடங்கள் உட்பட பல்வேறு இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானில் வசிக்கும் மக்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திணறி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத இந்த நிலையை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
இரானில் வாழ்க்கை தற்போது சிக்கலில் சிக்கித் தவிப்பதாக பிபிசியிடம் பேசிய மக்கள் விவரிக்கின்றனர். தொடர்ந்து இரண்டு இரவுகளாகத் தூங்க முடியவில்லை என்று கூறிய ஒரு பெண்: “நான் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்தேன்,” என தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை, 1980களில் இரான்-இராக் போரின் போது, தான் குழந்தையாக இருந்தபோது நடந்த குண்டுவெடிப்புகளையும், தங்குமிடங்களில் தஞ்சமடைந்ததையும் நினைவூட்டுவதாக அவர் கூறுகிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“அப்போது, தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக சைரன் அல்லது குறைந்தபட்சம் எச்சரிக்கையாவது கொடுப்பார்கள். ஆனால் இப்போது, குண்டுவெடிப்பு அல்லது விமானத் தாக்குதலின் போதும், சைரன்களோ அல்லது எச்சரிக்கைகளோ எதுவும் செய்யப்படுவல்லை…” என்று அந்தப் பெண் கவலை தெரிவிக்கிறார்.
“இப்போது அதிகாரிகள் எங்கள் உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று தோன்றுகிறது.”
இரான்-இராக் போருக்குப் பிறகு பிறந்த இளைஞர்களுக்கு, அந்தப் போர் எப்படி இருந்தது என்று தெரியவில்லை என்று பிபிசி செய்தியாளர் கோன்சே ஹபிபியாசாத் கூறுகிறார்.
பட மூலாதாரம், ABEDIN TAHERKENAREH/EPA-EFE/Shutterstock
படக்குறிப்பு, டெஹ்ரானில் பெட்ரோல் வாங்குவதற்காக கார்களில் வரிசையாக காத்திருக்கும் மக்கள்”பெட்ரோல் நிலையத்தைத் தேடி வீட்டிலிருந்து வெகுதூரம் காரை ஓட்டிச் வந்திருக்கிறேன். ஏனெனில் வழியில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களின் முன்பாகவும் நீண்ட வரிசைகள் இருந்தன” என்று டெஹ்ரானில் வசிக்கும் மற்றொருவர் கூறுகிறார்.
டெஹ்ரானில் வசிக்கும் சிலர் “அரசு அதிகாரிகள் வசிக்கும் இடத்திலிருந்து விலகி” வேறு இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர்.
இணைய இணைப்பு நிலையற்றதாக இருப்பதால், பிறருடன் தொடர்பு கொள்வது கடினமானதாகிவிட்டதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
நாட்டிற்கு வெளியே வசிக்கும் பலர், தங்கள் சொந்தபந்தங்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு, பதில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
தாக்குதல்களில் இருந்து தப்பிக்க நகரத்தை விட்டு வெளியேறுவது குறித்து சிந்திப்பதாக டெஹ்ரானில் வசிக்கும் ஒரு பெண் கூறுகிறார்.
“இங்கிருந்து சிறிய நகரங்களுக்கோ அல்லது கிராமங்களுக்கோ செல்ல விரும்புகிறோம், வேறு எங்கு வேண்டுமானாலும் சென்றுவிட முடியும். ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் வெளியேற முடியாத நிலையில் இருக்கும்போது, அவர்களை விட்டுச் செல்ல விரும்பவில்லை,” “நாங்கள் (இரான் மக்கள்) அனுபவிக்கும் பிரச்னைகள் நியாயமானதில்லை” என்று அவர் கூறுகிறார்.
இரானியர்கள் “முடங்கிப்போயிருப்பது” போல் தெரிகிறது என்றும் அவர் சொல்கிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”நம் நாட்டுத் தலைவர்களுக்கு மக்களைப் பற்றியோ, இரானியர்களின் வாழ்க்கையைப் பற்றியும் கவலையில்லை என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாங்கள் அனைவரும் பயம், சோர்வு மற்றும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம், இந்த கடினமான மற்றும் வேதனையான நாட்களை கடக்க முயற்சிக்கிறோம்” என்று டெஹ்ரானில் வசிக்கும் மற்றொரு இரானியர் கூறுகிறார்.
“நான் டெஹ்ரானை விட்டு வெளியேற முடியாது. வெகுதூரம் பயணம் செய்து நகரத்தை விட்டு வெளியேற முடியாத என் வயதான பெற்றோரை விட்டுவிட்டு செல்லமுடியாது. அதுமட்டுமல்ல, மீண்டும் இங்குதான் வேலைக்கு வர வேண்டும், இந்த நிலையில் என்னால் என்ன செய்ய முடியும்?” என்று ஒருவர் கையறுநிலையை சொல்லி வருந்துகிறார்.
ராணுவத் தளங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு இரானியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து சிலருக்கு எச்சரிக்கைகள் வந்துள்ளன. டெஹ்ரானில் வசிக்கும் மக்களுக்கு இந்த எச்சரிக்கை, கவலைகளை அதிகரித்துள்ளது.
“துரதிர்ஷ்டவசமாக இந்த எச்சரிக்கை எனக்கு ஏற்கனவே வந்துவிட்டது,” என்று ஒருவர் கூறுகிறார். “ராணுவத் தளம் எங்கே இருக்கிறது, எங்கே இல்லை என்பதை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
தாக்குதல்கள் தொடங்கிய இரண்டாவது நாளில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரானியர்களுக்கு விடுத்த ஒரு செய்தியில், மக்கள் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், மக்கள் பாதுகாப்பாக நாட்டிலேயே இருப்பதையே விரும்புகின்றனர். நெதன்யாகுவின் அழைப்பு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் மிகக் குறைவு என்று பிபிசி பெர்ஷியன் சேவையின் செய்தியாளர் தர்யோஷ் கரிமி கூறுகிறார்.
இரான் அரசு சொல்வதென்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொதுமக்களோ அரசு அதிகாரிகளோ எதிர்பார்க்காத அளவு குடியிருப்புப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதுஇரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் விமானத் தளங்கள் மீதான தாக்குதல்களை விட, குடியிருப்பு கட்டடங்கள் அழிக்கப்பட்டதே மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது பொதுமக்களோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ எதிர்பார்க்காத ஒன்று என பிபிசி பெர்சியன் செய்தியாளர் கலானி கூறுகிறார்.
கட்டட இடிபாடுகளுக்கு அடியில் கிடக்கும் குழந்தையின் சடலம், தெருப்புழுதியில் கிடக்கும் கரடி பொம்மை, தரையில் சிதறிக்கிடக்கும் ஓவியம் போன்ற புகைப்படங்களை மக்கள் இரான்-இராக் போருக்குப் பிறகு பார்த்ததில்லை. அதிலும் குறிப்பாக தலைநகர் டெஹ்ரானின் தெருக்களில் பார்த்ததில்லை.
டெஹ்ரான் மீதான இத்தகைய தாக்குதல், உண்மையில் என்ன நடக்கிறது? என்ற கேள்விகளை இரானிய ராணுவத்தின் முன்னணியில் இருப்பவர்களிடையே எழுப்பியிருக்கிறது. தாக்குதல் எந்த அளவு பரவலாக இருக்கிறது? தங்களையும் தங்கள் குடும்பங்களையும் எவ்வாறு பாதுகாப்பது? என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இரானின் முக்கியமான இலக்குகளை சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் தாக்கும் அளவுக்கு, நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்றதாக இருந்ததா என்பதை இரானிய அதிகாரிகள் தெளிவுபடுத்தத் தவறிவிட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலின் முதல் தாக்குதலுக்குப் பிறகு பல மணி நேரம் வரை (ஒரு முழு நாளுக்கும் மேலாக) இரானில் உள்ள எந்த அதிகாரப்பூர்வ அமைப்பும் எவ்விதத் தகவலையும் அளிக்கவில்லை. இஸ்ரேலின் தாக்குதல்களின் உண்மையான அளவைப் புரிந்துகொள்ளவோ அல்லது அதை எப்படி எதிர்கொள்வது என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளவோ அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. நாடே போருக்குச் சென்றுவிட்டதா? என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.
அரசு தொலைக்காட்சியில் பேசிய இரானிய அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள், “பெரியதாக எதுவும் நடக்கவில்லை” என்ற தொனியிலேயே பேசினார்கள். அனைத்துமே “கட்டுப்பாட்டில் உள்ளது” என்றும் நகரங்கள் “பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உள்ளன” எனவும் உறுதிபட கூறினார்கள். டெஹ்ரான் மற்றும் பிற இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேலிய விமானங்கள் எவ்வாறு சுதந்திரமாக, எதிர்ப்பு இல்லாமல் பறந்தன என்பதையும் எந்த அதிகாரியும் விளக்கவில்லை.
ஆனால் வெள்ளிக்கிழமை பிற்பகலில், இரானின் அதி உயர் தலைவர் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ வடிவத்திலும் என இரு அறிக்கைகளை வெளியிட்டார். அதன்பிறகு, அரசு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களும் நிபுணர்களும் “கடுமையான பழிவாங்கும்” நடவடிக்கைகள் தொடர்பாக பேசத் தொடங்கிவிட்டனர்.
பட மூலாதாரம், WANA/Reuters
படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு தொலைக்காட்சி செய்தியில் தோன்றும் இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி”ஆயுதப்படைகள் வலிமையுடன் செயல்படும், மோசமான சியோனிச ஆட்சியை மண்டியிடச் செய்யும்” என்று ஆயதுல்லா அலி காமனெயி தனது வீடியோ செய்தியில் அறிவித்தார்.
முன்மாலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டன, மேலும் இரானின் அரசு ஊடகங்கள் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின, அவை மத்திய டெல் அவிவைத் தாக்கும் ஏவுகணைகள் போல் தோன்றின. இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்புகளை எவ்வாறு துளைத்தன என்பதை விளக்கும் இந்தக் காட்சிகள், இது இஸ்ரேலுக்கு ஒரு “படிப்பினை” என்றும், தொடர்ச்சியான “அதிரடி பதில்களை” அளிப்பதாகவும் கூறிய ஆய்வாளர்களுடனான நேர்காணல்களின் பின்னணியில் இடம்பெற்றன. இப்படி இரானின் வெற்றியின் கதை வடிவமைக்கப்பட்டது, டெல் அவிவில் வான்வழித் தாக்குதல் சைரன்களின் ஒலி கூட அச்சத்தின் அடையாளமாக சித்தரிக்கப்பட்டது.
நடான்ஸ், ஃபோர்டோவ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள இரானின் விமானத் தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும்போதே இரானின் அரசு ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஆனால், சனிக்கிழமை அதிகாலையில்கூட, எதிரி டிரோன்கள் டெஹ்ரான் மீது பறந்து கொண்டிருந்தன என்பது பிறகு வெட்டவெளிச்சமானது.
சிலர் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்தனர், நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிக் கொண்டு தப்பி ஓட விரும்பினர். வேறு சிலரோ, உணவு பற்றாக்குறை ஏற்படுமோ என்ற சந்தேகத்தில் ரொட்டி வாங்குவது அல்லது அரிசி மற்றும் எண்ணெயை சேமித்து வைப்பது பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரானில் டஜன் கணக்கான இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதுசில மணி நேரத்திற்குப் பிறகு, அரசு ஊடகங்களில் தோன்றிய இரானின் உள்துறை அமைச்சர் பொதுமக்களிடம் உரையாற்றினார். “அமைதியாக இருங்கள்; பதற்றத்தைத் தூண்டுவதைத் தவிர்க்கவும்; அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள்; தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்; அவசர சேவைகளுடன் ஒத்துழைக்கவும்” என்ற அமைச்சரின் பேச்சு, அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கான கோரிக்கைகளாகவேத் தோன்றின.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன் மூத்த தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் மரணங்கள் தொடர்பான அறிவிப்பைத் தவிர, பகுதியளவிலான ஊடக அறிக்கைகளின் வடிவத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தன. ராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய வரையறுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் அல்லது உள்ளூர் ரெட் கிரசண்ட் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்படாத உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் மட்டுமே மக்களுக்குக் கிடைத்தது.
ஆனால், அதிகாரிகள், மத அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் அறிக்கைகளால் செய்தி ஊடகங்கள் நிரம்பியிருந்தன, இவை அனைத்துமே “ஒடுக்கப்பட்ட ஆனால் மீண்டுவரும் தன்மை கொண்ட நாடு” என்ற கதைகளையே திரும்பத் திரும்ப எதிரொலித்தன, இரானின் பிராந்திய நட்பு நாடுகள், நட்பைத் தொடர்வதை உறுதிப்படுத்தின, அவை “கடுமையான பழிவாங்கலை” உறுதி செய்ய இரானின் உச்ச தலைவருக்கு அழைப்புவிடுத்தன.
இந்த அறிக்கைகள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்த பிறகும், பெரிய அளவிலான இந்தத் தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டிருக்கலாம் என்றோ, கொல்லப்பட்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையையோ, சேதத்தின் உண்மையான அளவையோ கணிக்க முடியவில்லை. மேலும், டெஹ்ரான் மற்றும் பிற நகரங்கள் இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதையும் தீர்மானிக்க முடியவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு