தமிழரசின் சுமந்திரன்; -சீ.வீ.கே சிவஞானம் அணியினை தாண்டி தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவகத் தொகுதிக்குட்பட்ட நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதை மக்கள் விரும்பவில்லை .அதனால் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  மூன்று சபைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவகத்தின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், கட்சியின் தீவகத் தொகுதிக் கிளை உறுப்பினர்களும், தொகுதிக் கிளைத் தலைவர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான  சிவஞானம் சிறீதரன் அவர்களை நேற்றையதினம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்காகவும், அப்போராட்டத்திற்கு எதிராகவும் வலிந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியினரும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் தீவக மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களை மறந்து, தவிசாளர் – உப தவிசாளர் பதவிகளுக்காக அவர்களோடு இணைய முடியார்.அவ்வாறு முற்பட்டால் மக்களுக்கும் கட்சிக்குமிடையிலான இடைவெளிகள் அதிகரிக்கும் . அதனைத் தவிர்த்து சபைகளில் தனித்து ஆட்சியமைப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களோடு கலந்துரையாடியிருந்ததாக  இளம்பிறை தெரிவித்துள்ளார்.